ஒரு நாள் இரவு நேரத்தில் வைத்திய நாதனைச் சுற்றி பத்து பேர் அமர்ந்து இருந்தனர்.கல்கத்தாவில் இருந்த போது அந்த நகரத்தைச் சேர்ந்த வீரர்கள் மூலமாக அவன் நேதாஜியைப் பற்றி அறிந்து வைத்திருந்தான். எனவே மற்றவர்களுக்கு அவரைப் பற்றி கூற ஆரம்பித்தான்."நேதாஜியின் அப்பாவின் பெயர் ஜானகி நாத் போஸ். அம்மாவின் பெயர் பிரபாவதி. அவர்களுக்கு 14 பிள்ளைகள். அவர்களின் ஒன்பதாவது பிள்ளை நம் நேதாஜி.பெரிய பள்ளி, கல்லூரிகளில் படித்தார்.
லண்டனுக்குப் போய் ICS படித்து பாஸ் ஆனார். ஆனால் ஆங்கிலேயரின் கீழ் வேலை பார்க்க மாட்டேன் என்று கூறி விட்டார். சித்தரஞ்சன் தாஸுடன் சேர்ந்து விடுதலைப் போரில் ஈடுபட்டார்.
ஒரு முறை காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். காந்தியின் அகிம்சை முறை அவருக்குப் பிடிக்கவில்லை. எனவே பதவியை விட்டு விலகினார்.ஆங்கில ஆட்சிக்கு எதிராகச் செயல்பட்டதால் சிறையில் அடைக்கப்பட்ட நேதாஜி காசநோய் வாய்ப்பட்டார். மக்களின் கோபத்தைக் குறைக்க அரசு அவரை வீட்டுச் சிறையில் இட்டனர். ஆனால் ஆங்கிலேயரின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு நேதாஜி 1941ல் ஜெர்மனிக்குப் பறந்து விட்டார். ஜெர்மன் நாட்டுப் பத்திரிகையில் அவரது வருகையைப் பற்றி செய்தி வந்தது.அதன் பிறகுதான் ஆங்கில அரசிற்குத் தெரிந்தது.அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக நேதாஜி தெரிந்தார். இப்பொழுது ஜப்பானில் இருந்து யார் கண்ணிலும் படாமல் நீர் மூழ்கிக் கப்பலில் வந்திருக்கிறார்." என்று வைத்தியநாதன் சொல்ல கூட்டம் கை தட்டி ஆர்ப்பரித்தது. அனைவரும் சேர்ந்து ஜய் ஹிந்த் எனக் குரல் கொடுத்தனர்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரால் அனுப்பப்பட்ட வீரர்களில் ஒருவர்," நான் மதுரையில் நேதாஜியைப் பார்த்திருக்கிறேன்". என்றார்.அப்படியா! என்று ஆச்சரியமாகக் கேட்டனர்."ஆமாம். 1939 செப்டம்பர் 6ஆம் தேதி நேதாஜி தலைமையில் மதுரையில் ஃபார்வார்டு பிளாக் கட்சி ஆங்கில அரசை எதிர்த்து மதுரையில் ஊர்வலம் நடத்தியது." என்றார். "நான் 1937ஆம் ஆண்டே ராணுவத்தில் சேர்ந்து மதுரையில் இருந்து கிளம்பி விட்டேன். எனவே எனக்குத் தெரியாது."என்றான் வைத்தியநாதன். மருதவாணன் ,"நான் ஒரு விஷயம்கேள்விப்பட்டேன். உண்மையா ? பொய்யா? தெரியாது.சொல்லட்டுமா?"என்றான்
" ஹிட்லரைப் பார்க்க நேதாஜி போனார்.அவரை உட்கார வைத்து சற்று நேரத்தில் ஹிட்லர் வருவார் என்றார்கள். ஒரு புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தார். ஹிட்லர் அவரைக் கடந்து போனார்.இரண்டு, மூன்று முறை இவ்வாறு நடந்தது.அவர்கள் ஹிட்லர் போல் வேடமிட்டவர்கள். நேதாஜி கண்டு கொள்ளவில்லை. சிறிது நேரம் கழித்து ஒரு கை அவரது தோளைத் தொட்டது. "ஹிட்லர்! வந்து விட்டீர்களா?"எனக் கேட்டுக் கொண்டே நேதாஜி திரும்பினார். ஹிட்லர் ஆச்சரியமாகப் பார்த்து "எப்படிக் கண்டு பிடித்தீர்கள்?"எனக் கேட்டார். "என் தோளைத் தொட்டுக் கூப்பிடும் தைரியம் உங்களைத் தவிர வேறு யாருக்கும் இருக்காது." என்றாராம் நேதாஜி." உண்மைதான்" என்று அனைவரும் ஒப்புக் கொண்டார்கள். " நாளை நமக்கு நேதாஜியின் கட்டளை வந்து விடும். போய் ஓய்வு எடுப்போம்".என்று கூற ஒருவர் "நேதாஜிக்குத் திருமணம் ஆகி விட்டதா?" எனக் கேட்டார். "ஆமாம். அவரது துணைவியார் எமிலி,ஆஸ்திரியா நாட்டுப் பெண்.அவர்களுக்கு அனிதா போஸ் என்ற பெண் குழந்தையும் உள்ளது"என்று வைத்திய நாதன் கூறினான்.
பின்பு வீரர்கள் அவரவர் இடங்களுக்குச் சென்றனர்.
தொடரும்.