Tuesday, June 8, 2021

மங்கையர்க்கரசி மங்கைகள் ஷீரடியில் தொடர்_8

மகாலெட்சுமி ஆலயத்திற்கு நாங்கள் வந்து சேர்ந்தோம்.இந்தக் கோவில் கட்டப்பட்டபின் தான் மும்பை ஒரு பெரிய தொழில் நகரமாக மாறியதாம்.குறுகலான தெருவின் இருபுறமும் பூக்கடைகள் இருந்தன.மலர் மாலைகளுடன் 
நிறைய தாமரைப் பூக்கள் இருந்தன. தேங்காய்கள் மற்றும் பூஜைப் பொருட்கள்  அனைத்தும் விற்கப்பட்டன.உயரமான இடத்தில் கோவில் இருந்தால்  பல படிக்கட்டுகளில் ஏறி மேலே செல்ல வேண்டியிருந்தது.அன்னையின் சன்னதியில் மகாகாளி, மகாலெட்சுமி, மகாசரஸ்வதி என்று மூன்று தேவியரும் வீற்றிருந்தனர். அன்னை மகாலெட்சுமி நடுவில் காணப்பட்டார்.தேவியர்களை வணங்கி விட்டு பின்னால் இருந்த குளத்திற்குச் சென்றோம்.அதன் பெயர் மணிகர்ணிகா  என்று கூறினார்கள்.தரிசனம் முடிந்து வெளியே வந்தோம்.பல வண்ணக் குங்குமங்கள், காப்புக் கயிறுகள், அம்மனின் திருவுருவப் படங்கள், பொம்மைகள் என எங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கினோம். எங்களது ஆசிரியை ஒருவரின்  அண்ணியார்  மும்பையில்  வசித்து வந்தார்.அவர் எங்களுக்காக தன்னுடைய  வீட்டில் இருந்து வடைகள் செய்து கொண்டு வந்திருந்தார்.  மகிழ்ச்சியுடன் அவற்றைச் சாப்பிட்டோம்.ஆசிரியர் ஒருவர் வாழைப்பழங்கள் வாங்கி வந்தார். அவைகளையும்  உண்டு தண்ணீர் குடிக்க வயிறு நிரம்பி விட்டது.ஹோட்டலுக்கு போகும் எண்ணமே போய்விட்டது. அங்கு அமர்ந்து சாப்பிடும் நேரத்தில் மும்பையைச் சுற்றிப் பார்க்கலாம் என ஏகமனதாக நினைத்தோம். தலைமை ஆசிரியை ,"இப்போது  சாப்பிடவில்லை எனில் இரவு உணவுதான் கிடைக்கும்." என்றார்."பரவாயில்லை அம்மா! இரவே சாப்பிட்டுக் கொள்கிறோம்." என்று அனைவரும்  கூறிவிட்டோம்.                      கேட் வே ஆஃப் இந்தியாவை நோக்கி பேருந்தில் பயணித்தோம். சினிமாக்களில் மட்டுமே பார்த்த அக்கட்டிடத்தை நேரில் கண்டோம். மிகப் பிரபலமான தாஜ் ஹோட்டல் அதனை அடுத்து அமைந்திருந்தது.
இரண்டுக்கும் இடையே இருந்த இடத்தில் நூற்றுக்கணக்கான புறாக்கள் இருந்தன.சிலர் தங்கள் கைகளில் தானியங்களை வைத்து நீட்ட பயமின்றி புறாக்கள் கைகளில் அமர்ந்து உண்டன.அடுத்து காணப்போவது காஜி அலி தர்ஹா இது கடற்கரையில் இருந்து 500மீட்டர் தொலைவில் உள்ள மணல்திட்டில் கட்டப்பட்டுள்ளது.நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது .கடல் அலைகள் தீவிரமாகும்போது தர்ஹாவை கடல்நீர் சூழ்ந்து விடும்.பேருந்தில் இருந்தபடியே தர்ஹாவைப் பார்த்தோம்.இரவு 10 மணிக்கு விமானம்  ஏறவேண்டும். எனவே விமான நிலையத்தை  நோக்கி பயணமானோம்.                                   தொடரும்.

Saturday, June 5, 2021

மங்கையர்க்கரசி மங்கைகள் ஷீரடியில் தொடர்_3

சென்னை விமான நிலையத்தின் அழகை ரசித்துக் கொண்டே உள்ளே நுழைந்தோம்.நள்ளிரவு 2 மணி ஆகி விட்டது. 3.30 மணிக்கு மும்பை விமானம் ஏற வேண்டும். தலைமை ஆசிரியை  மற்றும் அவரது வாழ்க்கைத் துணைவர் அவர்களும் வழிகாட்ட  ஜெட் ஏர்வேஸ் கவுண்டருக்குச் சென்று போர்டிங் பாஸ் பெற்றுக் கொண்டோம். லக்கேஜ்களை  ஒப்படைத்தோம்.காத்திருப்போர் அமர இருக்கைகள் அழகாகப் போடப்பட்டிருந்தன.அதில் அமர்ந்து கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்தோம். சற்று நேரத்தில்  விமானத்தில் ஏறும்படி ஒலிபரப்பு வந்தது. சினிமாவில் பார்ப்பது போல படிக்கட்டுகளில் ஏறி விமானத்திற்குள் செல்லப் போகிறோம் என நினைத்தேன். ஆனால் குகை போல் தோற்றமளித்த பாதை அமைக்கப்பட்டு இருந்தது.அதன் வழியாக 
விமானத்திற்குள்  சென்று அவரவர் இருக்கைகளில் அமர்ந்தோம். முதல் விமானப் பயணம் என்பதால்  படப்படப்பாக இருந்தது. வயிற்றுக்குள் பூச்சி பறந்தது. இனி எத்தனை முறை விமானப் பயணம் செய்தாலும் முதல் அனுபவம் மறக்காது.எல்லாக் கடவுள்களையும் நினைத்துக் கொண்டேன். விமானம்     ஓடுபாதையில் தடதட என ஓடத் தொடங்கியது.சில நிமிடங்களில் சர் என்று மேலே ஏறியது. பின்னர் சீராகப் பறக்கத் தொடங்கியது.கீழே சென்னை மாநகரம் மின்விளக்குகளின் ஒளியில் ஜொலித்துக் கொண்டு இருந்தது.சில நிமிடங்களில் கருமையாக மாற்றிவிட்டது.கடலின் மேல் பறக்கிறோம் என்பது புரிந்தது.. சென்னைக்கும் மும்பைக்கும் இடையே நிலப்பரப்பு தானே உள்ளது.ஏன் கடலுக்கு மேலே பறக்கிறது? என நினைத்துக் கொண்டேன்.விமானத்தின் பணிப்பெண் வந்து வணங்கி விட்டு பேச ஆரம்பித்தாள்.விமானம் கடலில் விழ நேர்ந்தால் தலைக்கு மேலே இருக்கும்  லைஃப் ஜாக்கெட்டை எப்படி எடுப்பது என்பதையும் பயன்படுத்த வேண்டிய முறையையும் செய்து காட்டி விளக்கினாள். வயிற்றில் புளியைக் கரைத்து    ஊற்றியது  போல இருந்தது.இரண்டு மணி நேரப் பயணத்திற்குப் பின் மும்பைக்கு அருகில் வந்து விட்டதாக விமானி அறிவித்தார்.பொழுது புலர்ந்து விட்டது.கீழே அரபிக்கடல் காட்சி தந்தது.இந்திய வரைபடத்தில் மும்பையைக் குறிக்கச் சொல்லிக் கொடுக்கும் பொழுது "அரபிக்கடல் ஓரம் ஒரு அழகைக் கண்டேனே." எனப் பாடலைப் பாடி மாணவர்களின் கவனத்தை ஈர்த்து மும்பையின் அமைவிடத்தைக் கற்றுத் தருவோம்.இப்போது அரபிக் கடலையும் மும்பையையும் வானில் இருந்து காண்கிறோம்.மிக மகிழ்ந்தோம்.  விமானம் தரை இறங்கப் போவதாக விமானி அறிவித்தார். மனம் படபடவென அடித்தது.சிறிது சிறிதாக கீழே இறங்கி சக்கரங்கள் தடால் என்று தரையைத் தொட்டன.ஓடுபாதையில் ஓடி சில நிமிடங்களில் நின்றது. அப்பாடி! பத்திரமாக  தரையில் இறங்கி விட்டோம்.கடவுளுக்கு நன்றி கூறி மும்பையில் கால்  பதித்தோம்.                                   தொடரும்.
.

மங்கையர்க்கரசி மங்கைகள் ஷீரடியில் . தொடர் 2

சாய் பாபாவின் திருவருளால் முன்னேற்பாடுகள் மடமடவென நடந்தன.தலைமை ஆசிரியையும், அவரது வாழ்க்கைத் துணைவரும் சேர்ந்து பயணத்திற்கு பேருந்துகளை  ஏற்பாடு செய்தனர். 
விமான டிக்கெட் முன்பதிவு செய்யப் பட்டது.என்னைப் போன்று சிலர் வானில் தான் விமானத்தைப் பார்த்திருக்கிறோம். பக்கத்தில் கூடப் பார்த்ததில்லை.எனவே ஆர்வத்துடன் காத்திருந்தோம்.அன்று முதல், பயணத்தைப் பற்றி மாலைப் பொழுதில் பேசிக்கொண்டே இருந்தோம். தலைமை ஆசிரியை சிங்கப்பூருக்கு  பல முறைகளும், அமெரிக்காவிற்கு  ஒரு முறை தனியாகவும் சென்று வந்தவர். "அம்மா !விமானம் ரன்வேயில் ஓடி சர் என்று மேலே ஏறும் போது எப்படி    இருக்கும் ?"என நான் கேட்டேன் "நாம் ஊஞ்சலில்  ஆடி உயரே செல்லும் போது ஏற்படும் அதே உணர்வு தான் இருக்கும்." என்றார்  தலைமை ஆசிரியை. "ஏதோ ஜெட் லேக் என்று சொல்வார்களே. அது ஏற்படுமா? என்று ஒரு ஆசிரியை கேட்டார்.  "உள்நாட்டுப்பயணம் செல்லும்போது அதெல்லாம் ஏற்படாது. ஆனால் அவ்வப்போது காது அடைக்கும். அப்போது வாயைத் திறந்து மூடினால் சரியாகி விடும்" என்றார். "உங்களது லக்கேஜ்  பேக்குகள் பளிச் எனத் தெரியும்படி கலர் ரிப்பனைக் கட்டுங்கள். ஸ்டிக்கரும் ஒட்டுங்கள். கன்வேயர் பெல்டில்  இருந்து அப்போதுதான் டக்கென்று  எடுக்க முடியும்." என்றும் கைப்பைகளில் எவற்றை வைத்துக் கொள்ளலாம் என்பதையும்  தலைமை ஆசிரியை அறிவுறுத்தினார்.  மொத்தத்தில் விமானப் பயணம் பற்றிய அரிச்சுவடியை அறிந்து கொண்டோம்.                               எதிர்பார்த்த அந்த நாளும்  வந்தது. 2017 பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி வெள்ளிக் கிழமையன்று பள்ளி முடிந்ததும் சிட்டுக்களாக வீடுகளை நோக்கிப் பறந்தோம். மூட்டை முடிச்சுகளோடு மாலை  7 மணியளவில் பள்ளியில் ஒன்று கூடினோம்.மெயின் ஹாலில் பிரார்த்தனை செய்தோம்."அன்பாக எனையும் கண் பார் அம்பிகா" என்று அன்னை மீனாட்சியைப் பாடி அவள் அருளை வேண்டினோம்.வாசலில் ஸ்லீப்பர் பேருந்து தயாராக இருந்தது.                            ஆசிரியர்களாகிய  நாங்கள் குழந்தைகள் போல் மாறிவிட்டோம். உற்சாகமாக பேருந்தில் ஏறினோம். சிறு பிரார்த்தனைக்குப் பின் சென்னையை நோக்கி பயணம் தொடங்கியது. மதுரை நகரைக் கடந்த உடன் பாடல்கள் பாட ஆரம்பித்தோம்.சில பக்திப் பாடல்களுக்குப் பிறகு திரைப்படப் பாடல்களைப் பாடத் தொடங்கினோம். அவரவர்களின் மனம் கவர்ந்த பாடல்களைப் பாடி அசத்தினர்.அடுத்ததாக ஆடலும் களை கட்டியது. பள்ளியில்  கலை நிகழ்ச்சிகளுக்காகவும், போட்டிகளுக்காகவும் மாணவ, மாணவிகளை ஆட்டுவித்த , ஆட்டிப் படைத்த ஆசிரியைகள்  ஆடத் தெரியாமல் இருப்பார்களா? ஆடத் தொடங்கினர். நான்  கஷ்டப்பட்டு அப்பர் பெர்த்தில் ஏறி இருந்ததால் வேடிக்கை மட்டுமே  பார்த்தேன். ஏற இறங்க சங்கடமாக இருந்தது. ஆடும் வாய்ப்பைத் தவறவிட்டு விட்டேனே எனப்  பின்னாளில் நினைத்தேன். தில்லானா மோகனாம்பாள் பாடல்கள் முதல் புதிய  திரைப் பாடல்கள் வரை பல  பாடல்களுக்கு ஆடினர்.இரவு உணவை நாங்களே  எடுத்துச் சென்று இருந்தோம். வழியில் ஓரிடத்தில் பேருந்தை நிறுத்தி அதனை ‌உண்டோம். பயணம்  தொடர்ந்தது.யாருமே தூங்கவில்லை.  பேருந்து சென்னை விமான நிலையத்தை அடைந்தது.                       தொடரும்.

மங்கையர்க்கரசி மங்கைகள் ஷீரடியில் தொடர்_7

துவாரகாமாயி முன் பக்தர்கள்  நின்ற வரிசையில் நாங்களும் நின்றோம். இந்த  மசூதியில் தான் பாபா அறுபது ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார். யாசகமாக கிடைத்த உணவுப் பொருட்களை இங்கு தான் சமைப்பாராம். சாளரம் வழியாக  மக்களை அழைத்து உணவைப் பகிர்ந்து உண்பாராம்.அவர் சாய்ந்து உட்காரப் பயன்படுத்திய வேப்பமரக் கட்டை  வைக்கப்பட்டுள்ளது. பாபாவின் திருவுருவப் படம் உள்ளது.
துனி  அதாவது உதி தயாரிக்கும் இடமும் அங்கு உள்ளது.வேப்பமரக் கட்டைகளையும் சாண வறட்டிகளையும் பயன்படுத்தி அதிகாலையில் தீ மூட்டுவார்கள்.அது பற்றி எரியும்போது நடுவில் பாபாவின் உருவம் தெரிவதாகக் கூறுகின்றனர்.அந்த துனியை அருமருந்தாக  எண்ணி பயபக்தியுடன்  பெற்றுச் செல்கின்றனர்.
அடுத்து சாவடிக்குச் சென்றோம்.அது ஊர்மக்கள் ஒன்று கூடும்  இடமாகும். மழைக்  காலத்தில்  துவாரகா மாயிக்குள் நீர் ஒழுகும்.  எனவே பக்தர்கள் அவரைக் கட்டாயப்படுத்தி இங்கு தூங்கச் செய்தார்களாம். தற்போது   ஒவ்வொரு வியாழன்றும் பாபாவின் திருவுருவத்தை இங்கு எழுந்தருளச் செய்கிறார்கள்.  சாய்பாபாவைத் தரிசிக்க மீண்டும் குடும்பத்தோடு வரவேண்டும் என அவரை மனதார வணங்கி ஹோட்டலுக்கு வந்தோம்.காலை உணவு அருமையாக இருந்தது. ஷீரடியில்  இருந்து மும்பையை நோக்கி பயணமானோம்.                                        அவரவர் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டோம். கேலியும்,கிண்டலும், சிரிப்பும்,உற்சாகமுமாகச் சென்றோம். அதிலும் நான் எஸ்கலேட்டரில் ஏற மறுத்து ஓடியதை நினைவுபடுத்தி சிரித்தனர். அதை நினைத்தால் எனக்கும் சிரிப்பு வருகிறது.நேரம் போனதே தெரியவில்லை.இடையில்  ஓரிடத்தில்  பேருந்து நின்றது.காஃபி, தேநீர்   என தேவையானதை அருந்தினோம்.பிஸ்கட், சிப்ஸ் போன்ற நொறுக்குத்தீனிகளை  வாங்கிக் கொண்டோம்.பயணம் தொடர்ந்தது.நேராக மும்பையில் உள்ள மகாலெட்சுமி கோவிலுக்குச் செல்ல விரும்பினோம்.  அம்மனைத்   
தரிசித்த  பின்னரே  மதிய உணவு உண்ண நினைத்தோம்.                                                             தொடரும்.

Wednesday, June 2, 2021

மங்கையர்க்கரசி மங்கைகள் ஷீரடியில் தொடர் _6

 சாய்பாபாவின் திருவுருவச் சிலைகள், காப்புக் கயிறுகள் ஆகியவற்றை வாங்க விரும்பினோம். எனவே கடையை
நோக்கி நடந்தோம். சூடாக மசாலா பால் ஒரு கடையில் வெளியே தயார் செய்து கொண்டு இருந்தார்கள். அதன் மணத்தால் கவரப்பட்டு அதை
வாங்கி அருந்தினோம்.அப்போது பாபா போல உடையணிந்த கம்பீரமான வட நாட்டு சன்யாசி வந்தார். வணக்கம் கூறி அவரிடம் பேசினோம்.தான் பிரயாகையில் இருந்து வந்துள்ளதாகக் கூறினார். தலையில் கை வைத்து ஆசி வழங்கினார். நாங்கள் பிறருக்காக் காத்திருந்தோம்.அப்போது ஒரு ஆசிரியை," கந்தம்மாள் டீச்சர்! அங்கே பாருங்கள்.இன்னோர் சன்யாசி உங்களைப் பார்த்து ஏதோ சொல்கிறார்" என்றார்.நான் அவரைப் பார்க்க அவர் தனது வயிற்றைத் தொட்டு இரு விரல்களைக் காட்டினார்.உண்மையான புகைப்படத்தில் காணப்படும் பாபாவைப் போல காட்சி அளித்தார். அதே போல  உடை. கையிலே ஒரு கமண்டலம். மற்றவர்கள்  அவரிடம் ஆசி பெறச் சென்றார்கள்.நான் திகைத்துப்போய் நின்று விட்டேன். சில ஆசிரியைகள் காணிக்கையாக பணம் தர அவர்  மறுத்து விட்டு வேகமாக நடந்து சென்றார். பேரக்குழந்தை வரம் தந்து சென்றதாகத்  தோன்றியது.பின்னர்  பாபா சிலைகள் ,காப்புக் கயிறுகள்,பாபா படம் உள்ள சிறிய நாட்காட்டி அட்டைகள் , கற்கண்டு
போன்றவைகளை வாங்கிக் கொண்டு அறைக்குத் திரும்பினோம்.
ஒரு அறையில் இருவர் தங்கினோம். AC மற்றும் குளியலறையில் ஹீட்டர் வசதிகள் இருந்தன.காலை எழுந்தவுடன் காஃபி தயாரிக்க வசதியாக சிறிய வாட்டர் ஹீட்டர் , காப்பித்தூள் , பால் பவுடர் ஆகியவை சிறிய பாக்கெட்களில் இருந்தன. தூங்கச் செல்லும் முன்பு அனைவரும் வரவேற்பு அறையில் கூடினோம். தலைமை ஆசிரியை," நாளை காலையில்  4 மணிக்கு நடை திறந்து விடுவார்கள்.எவ்வளவு சீக்கிரம் முடியுமோ கிளம்பி விடுங்கள். மற்றவர்களுக்காக் காத்திருக்க வேண்டாம்.4,5 பேர் சேர்ந்து செல்லுங்கள்.8 மணிக்கு ஷீரடியில் இருந்து கிளம்பி விட்டால் மும்பையில் சில இடங்களைப் பார்க்கலாம்." என்றார்.அப்படியே செய்வதாகக் கூறினோம். 
                     மறுநாள் 4 மணிக்கு எழுந்து  நீராடி காஃபி குடித்து கிளம்ப 5 மணி ஆகி விட்டது. எங்களுக்கு முன்பே ஒரு குழு சென்று விட்டது.ஓட்டமும், நடையுமாக விரைந்து சென்றோம்.காலையில் நடைபெறும் காக்கட் ஆரத்தி நடந்து கொண்டிருந்தது.உள்ளே சென்றவர்கள் அமர்ந்து விட்டதால் அரை மணிநேரம் வரிசையில் நின்றோம்.எங்களுக்கு நேராக பாபா ஒரு குழந்தையின் தொட்டிலை ஆட்டுவது  போல படம் வரையப்பட்டு
இருந்தது.என் அருகில் நின்று கொண்டிருந்த ஆசிரியையும் பேரக்குழந்தைக்காக வேண்டியிருந்தார்."பாபா நம்மை அவசரப்படாதீர்கள்.பொறுமையுடன் இருங்கள்  என்று கூறுகிறார்" என்றார். ஆரத்தி முடிந்ததும் வரிசை வேகமாக நகர்ந்தது.பாபாவின் திவ்ய தரிசனம் கிடைத்தது.நன்கு ஆற அமர கண்ணார தரிசனம் செய்தோம். அடுத்து துவாரகா மாயிக்கும், சாவடிக்கும் செல்ல வேண்டும்.
         தொடரும்.

Tuesday, June 1, 2021

மங்கையர்க்கரசி மங்கைகள் ஷீரடியில் தொடர் _5

சாய் பாபாவைக் கண்டு அவரது அருளைப் பெற ஆனந்தமாகக் கிளம்பினோம்.எங்களது தலைமை ஆசிரியை," நாம் அனைவரும் இப்போது அனைவரும் சேர்ந்து செல்கிறோம்.திரும்பி வரும்போது நீங்கள் குழுக்களாகச் சென்று  உங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு அறைகளுக்குத் திரும்புங்கள். வழியை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.செல் ஃபோன்களை கோயிலுக்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை.எனவே அவற்றை அறைகளில் வைத்து விட்டு வாருங்கள்." என்றார்.சரியென்று கூறி அவர்களுடன் கிளம்பினோம். சாய்பாபா  கோவில் நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் தான் இருந்தது. சாய் மகராஜ் கி ஜய்  என்ற கோஷத்துடன் மக்கள்  நடந்து கொண்டிருந்தனர். ஓம் சாய் !நமோ நமஹ! என்று  உச்சரித்துக் கொண்டு நாங்களும் நடக்க ஆரம்பித்தோம்.
          சாய்பாபா சமாதி மந்திர் என்ற அந்தக் கோயிலின் நுழைவாயில் வளைவு வடிவில் இருந்தது. அதன் வலதுபுறம் துவாரகாமாயி என்ற இடம் இருந்தது.கோயிலுக்குள் சென்று நுழைவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொண்டு உள்ளே சென்றோம். மூத்த குடிமக்களுக்கு சிறப்பு தரிசன வசதி இருந்தது. எனவே அம்மா  அதில் சென்றார்கள்.நாங்கள் நீண்ட வரிசையில் நின்று சாய்பாபாவின் துதிப் பாடல்களைப் பாடிக் கொண்டே நகர்ந்தோம். "கருவறைக்குள் செல்லும் போது வரிசை இரண்டாகப் பிரியும்.நாம் சுவரை ஒட்டிய வரிசையில்  செல்ல வேண்டும் .அப்போதுதான் சாய்பாபாவின் திருவுருவை அருகில் கண்டு தரிசிக்கலாம்." என்று தலைமை ஆசிரியை கூறியிருந்தார். அவ்வாறே செய்தோம்.கூட்டம் அதிகமாக இருந்தது.  சாய்பாபாவிற்கு  அருகில் வந்து விட்டோம்.அவர் முன் நின்ற போது உலகமே மறந்து போனது. நல்ல  தெய்வீக அதிர்வலைகளை உணர முடிந்தது.பொதுவான பிரார்த்தனைக்குப் பின்னர்
"சாய்பாபா! எனது மருமகள் உங்களின் அருளால் விரைவில் தாயாக வேண்டும்.என் வாழ்க்கைத் துணைவர், மகள், மருமகன், பேரன், மகன்,மருமகள் ,அவர்களது  குழந்தை என அனைவரும் மீண்டும் தரிசனம் செய்ய வருவோம்."என்று மனதார 
வேண்டினேன். வெளியே வரும் போது சக ஆசிரியைகளிடம் என் வேண்டுதலைக் கூறினேன். வெளிப் பிரகாரத்தைச் சுற்றி வந்தோம்.குரு ஸ்தான் என்ற இடத்தை அடைந்தோம்.அங்கே ஒரு வேப்பமரம் உள்ளது.அதன் இலைகள் கசப்புத் தன்மை அற்றதாக, இனிப்பாக உள்ளது.மரத்தைத் தொடாமல் இருக்க வேலி அமைத்து உள்ளனர். கீழே விழும் இலையைக் கூட எடுக்க முடியாது.எங்களது தாளாளர் அம்மா அமர்ந்து இருந்த இடத்தில் ஒரு இலை பறந்து வந்து விழுந்தது. அதனை குருவின் அருட்பிரசாதமாக எண்ணி பத்திரப் படுத்தி வைத்தோம். அந்த இடத்திற்கு அருகில்  துனி எனப்படும்  சாம்பல் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அதனைப் பெற்றுக் கொண்டோம். வளாகத்திற்குள் நிறைய மரங்கள் இருந்தன.பாபாவால் வைக்கப்பட்ட மரம் ஒன்று இருந்தது.அதைப் பாதுகாப்பாக வைத்திருந்தனர். நாய்கள்  உள்ளே சுற்றிக் கொண்டு இருந்தன.அவை குரைத்து யாரையும் தொந்தரவு செய்வதில்லை. நாளை வரும்போது துவாரகா மாயி மற்றும் சாவடி ஆகியவற்றை நிதானமாகப் பார்க்கலாம் என்று எண்ணி வெளியே வந்தோம். இரவு உணவிற்கு எல்லோரும் ஒரே இடத்திற்குச்  சென்றால் பரிமாற நேரமாகும் என்பதால் பிரிந்து செல்வோம் என முடிவு செய்தோம்.எங்கே போகலாம் என யோசித்துக் கொண்டிருந்த போது அம்மா! அம்மா! என யாரோ அழைத்தார்கள்.திரும்பிப் பார்த்தால் 
ஒரு பெண்மணி பானை நிறைய வரகரிசி வெண்பொங்கல் வைத்து பிரசாதமாக வழங்கிக் கொண்டிருந்தார்.அவர் அருகில் இருந்த மற்ற ஒருவர் கேசரி வைத்திருந்தார்.தொன்னையில்  வெண் பொங்கலையும், கேசரியையும் வைத்து தந்தார்கள். சாய்பாபாவே அந்தப் பெண்ணை அனுப்பி வைத்தார் என்று மகிழ்ந்தோம்.முதலில் வந்த  பத்து, பதினைந்து பேருக்கு அந்த பிரசாதம் பெறும் பாக்கியம்  கிடைத்தது. மனமும் , வயிறும் நிரம்பியது.
                    தொடரும்.

Sunday, May 30, 2021

மங்கையர்க்கரசி மங்கைகள் ஷீரடியில் தொடர் -4

மும்பை விமானநிலையத்தில் தான் முதன் முதலாக ட்ராவலேட்டர் என்னும் நகரும் பாதைகளைப் பார்த்தோம்.  ஏற்கனவே எங்கள் தலைமை ஆசிரியை அதைப்பற்றி சொல்லி இருந்தார். சிறிது தூரம் தான் செல்ல வேண்டியது இருந்தது. எனவே ஏறவில்லை. நடந்தே சென்றுவிட்டோம்.எங்களது பெட்டிகள் கன்வேயர் பெல்ட்டில் வந்து கொண்டு இருந்தன.அவற்றை எடுத்துக் கொண்டோம். ஓய்வறைக்குச் சென்று கை,கால்,முகம் கழுவி புத்துணர்வு பெற்றோம்.வெளியேறும் வாயிலுக்குச்  செல்ல எஸ்கலேட்டரில் ஏற வேண்டியது இருந்தது.இதுவரை நான் அதில் ஏறியதில்லை.காலை வைக்கவே பயமாக இருந்தது.என்ன செய்வது எனத் தெரியவில்லை. "வாங்க டீச்சர்! உங்களை பத்திரமாக கையைப் பிடித்து கூட்டிக்கொண்டு போகிறோம்."  என்று சக ஆசிரியைகள்  அழைத்தனர்.மறுத்து விட்டேன்.அருகில் படிக்கட்டுகள் உள்ளதா என்று சுற்றும் முற்றும் பார்த்தேன்.ஏதும் இல்லை. அப்போது ஆசிரியர் ஒருவர் எங்களது அம்மாவிடம் வந்து ,"அம்மா!அதோ அங்கே லிஃப்ட் உள்ளது . நீங்கள் அதில் ஏறி வந்து விடுங்கள்." என்றார்.  அம்மாவும் , ஒரு ஆசிரியையும் லிஃப்டை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.உடனே நான் தப்பித்தோம், பிழைத்தோம் என்று கிளம்பினேன்."நான் அம்மாவிற்குத் துணையாகப்  போகிறேன்' என்று கூறி அவர்களுடன் இணைந்து கொண்டேன்.யாருக்கு யார் துணை என்பது உங்களுக்கே புரிந்திருக்கும். வெளியே  ஒரு பேருந்து தயாராக நின்று கொண்டு இருந்தது.அதில் ஏறி ஷீரடியை நோக்கிப் பயணம் செய்யத் தொடங்கினோம்.சிறிது தூரம் சென்றபின் பார்த்தால் மும்பை நகர் வேறுவிதமாகக் காட்சி அளித்தது.சீட்டுக்கட்டுகளை அடுக்கி வைத்ததுபோல் அடுக்கு மாடி வீடுகள் காட்சி அளித்தன. வண்ணம் மாறிய சுவர்கள்.  இவர்கள் நம்மைப் போல் வீடுகளைப் பராமரிப்பு செய்வது இல்லை என்று தோன்றியது. சாலைகளும் சுத்தம் செய்யப்படாமல்   இருந்தது. இந்த புறநகர் பகுதிதான் இப்படி உள்ளது.பிற பகுதிகள் நன்றாக இருக்கும் என்று திரும்பி வந்த போது  தெரிந்து கொண்டேன். வழியில் ஓரிடத்தில் பேருந்தை நிறுத்தி உணவகத்தில் காலை உணவை எடுத்துக் கொண்டோம். மீண்டும் பயணம் தொடர்ந்தது.. ஆங்கிலேயர் காலத்தில் முதன் முதலில் இருப்புப் பாதை மும்பை முதல் தானே வரை போடப்பட்டது என்று படித்துள்ளோம். அந்த தானேவைக் கடந்து சென்றோம். வழியில் நில அமைப்பு சமவெளியாக இல்லை.  சிறு குன்றுகளும் ,மேடுகளும் ,பள்ளதாக்குகளுமாக இருந்தன. நாசிக் நகருக்குச் செல்லும் பாதை வழியாகச் சென்றோம்.நாசிக், இராமாயணத்தில் இடம்பெறும் நகரம்  ஆகும்.ராமர், சீதை , லெட்சுமணன் இங்கு சில காலம் தங்கியிருந்தனராம். சூர்ப்பனகையின் மூக்கை லெட்சுமணன் நறுக்கிய இடம் இதுதான் என்று எங்கள் தலைமை ஆசிரியை நினைவுபடுத்தினார். நகருக்குள் செல்லவில்லை. ஆசிரியர்கள் தங்கள் செல்ஃபோனில் பதிவு செய்து வைத்திருந்த பாடல்களை பேருந்தில் ஒலிக்கச் செய்தனர்.அவற்றைக் கேட்டு ரசித்துக் கொண்டே சென்றோம். மதிய உணவிற்கு  வழியில் இருந்த உணவகத்திற்குச் சென்றோம். சப்பாத்தி, பருப்பு, கூட்டு, சாதம் ஆகியவை இருந்தன. அங்கு பணியாற்றியவர்களிடம் எங்கள் தலைமை ஆசிரியையின் வாழ்க்கைத் துணைவர் ஹிந்தியில் பேசி தேவையான தகவல்களைக் கேட்டு வந்தார்.இன்னும் 50 கிலோ மீட்டர் தான் செல்ல வேண்டியது இருந்தது என்பதை அறிந்து கொண்டோம்.மீண்டும் பயணம் தொடர்ந்தது. கிட்டத்தட்ட எட்டு மணிநேரம்  கழித்து சாய் பாபா அவர்கள் வாழ்ந்து மறைந்த புண்ணியத் தலமாகிய ஷீரடிக்கு வந்து சேர்ந்து விட்டோம்.ஹோட்டல் துவாரகாவில் எங்களுக்கு அறைகள் பதிவு செய்யப் பட்டிருந்தன.அங்கு சிறிது நேரம் இளைப்பாறிய பின்னர் சாய் பாபாவைத் தரிசிக்கச் சென்றோம்.                    
                  தொடரும்.

Saturday, May 8, 2021

மங்கையர்க்கரசி மங்கைகள் ஷீரடியில்.

வாழ்க வளமுடன்.  சாய் பாபாவின் பாதம் பணிந்து இந்தப் பயணக் கட்டுரையைத் தொடங்குகிறேன்.                      ஒரு மாலை நேரம் பள்ளியின் பணி நேரம் முடிந்து அனைவரும் மெயின் ஹாலில் ஒன்று கூடினோம்.எங்கள் தலைமை அன்னை (தாளாளர் அம்மா) அவர்கள் எங்களுடன் வந்து அமர்ந்தார். ஆசிரியைகள் தங்கள் வகுப்புகளில் நடந்த மாணவர்களின் குறும்புகள், முக்கிய நிகழ்வுகள் ஆகியவற்றைக் கூறிக் கொண்டு இருந்தனர். தலைமை ஆசிரியை திருமதி.கீதா சரஸ்வதி அவர்கள் சிரித்த முகத்துடன் உள்ளே வந்தார். "உங்கள் அனைவருக்கும் ஒரு சந்தோஷமான செய்தி." என்றார்.என்ன சொல்லப் போகிறார் என்ற ஆர்வத்துடன் முகத்தைப் பார்த்தோம்." நாம் ஷீரடிக்குப் போகலாம் என நினைக்கிறேன்" என்றார். ""போகலாம்  அம்மா" என பல  குரல்கள் எழுந்தன.  தலைமை அன்னை ' விளையாட்டாகச் சொல்கிறாயா? நிஜமாகவே கூட்டிக் கொண்டு போகிறாயா?" என்றார். "நிஜமாகவே  சொல்கிறேன். மதுரையில் இருந்து சென்னை வரை பேருந்திலும் ,சென்னையில் இருந்து மும்பை வரை விமானத்திலும், மும்பையில் இருந்து ஷீரடி வரை பேருந்திலும் பயணம் செய்யலாம். முதல் நாள் மாலை கிளம்பினால் மறுநாள் ஷீரடியை அடைந்து விடலாம்.அன்று மாலையிலும் மறுநாள் காலையிலும் பாபாவைத் தரிசிக்கலாம்.பின்னர் கிளம்பி அதே போல் திரும்பி விடலாம்  என நினைக்கிறேன்.வெள்ளிக் கிழமை மாலையில் கிளம்பி திங்கட்கிழமை அதிகாலை மதுரைக்கு வந்து விடலாம்." என்றார். "உங்கள் பயணத் திட்டம் அருமை அம்மா." என்றோம் நாங்கள். " நீங்கள் அனைவரும் வீட்டினரிடம் கலந்து பேசுங்கள். உங்களது வாழ்க்கைத் துணை, குழந்தைகள் வர விரும்பினால் அவர்களும் வரலாம்." என்றார். அம்மா அவர்களுக்கும் ஏக சந்தோஷம். மும்பையைப் பார்க்கலாம்.ஷீரடியில் பாபாவைத் தரிசிக்கலாம் என்று சந்தோஷம்  அடைந்தோம். எங்களில் பலர்  விமானத்தில் பயணம் செய்ததில்லை. எனவே மனம் கற்பனையில் சிறகடித்துப் பறந்தது.மறுநாள் காலை பள்ளியில் நுழையும் பொழுதே ஒவ்வொருவரின் முகத்திலும் ஆயிரம் வாட்ஸ் பல்பு  ஒளிர்ந்தது.நான் வருகிறேன்.நீ வருகிறாயா? என ஒருவருக்கு ஒருவர் கேட்டுக்  கொண்டோம். அவரவர்  வகுப்புகளுக்குச் சென்று விட்டோம்.மாலை 4.30 க்கு மெயின் ஹாலில் கூடினோம்.   சுற்றுலா பற்றி சலசல என்று  ஒரே பேச்சு.தன் அறையில் இருந்து தலைமை ஆசிரியை  வந்து எங்களுடன்  அமர்ந்தார். " என்னம்மா?  யார் எல்லாம் வருகிறீர்கள்?" என்றார். ஒரு ஆசிரியை  பேப்பர் பேனாவோடு எழுந்தார்." பெயர்களை நான் எழுதித் தருகிறேன்" என்றார்.  அம்மா "என் பெயரை மறக்காமல் எழுதுங்கள்" என்றார்."நீங்கள் இல்லாமலா அம்மா?"எனக் கூறினார் ஒரு ஆசிரியை.உற்சாகமாக எழுந்து  பெயர்களைக்  கூறினோம்.சிலர் வாழ்க்கைத் துணைவர், குழந்தைகள் பெயர்களையும்  கூறினார்கள். மங்கையர்க்கரசி மங்கைகள் மட்டும் அல்ல அவர்களின் உடன்பிறவா  சகோதரர்களாகிய ஆசிரியர்களும் சுற்றுலாக் குழுவில் இருந்தனர். தலைமை ஆசிரியை  உரிய ஏற்பாடுகள்  செய்வதாகக் கூறினார்கள். கிளம்பும் நாளை  எதிர்நோக்கிக்  காத்திருந்தோம்.                       தொடரும்.

Saturday, February 20, 2021

ஒரு இந்திய தேசிய ராணுவ வீரனின் கதை 15

இந்திய தேசிய ராணுவ வீரர்கள் உற்சாகம் அடைந்தனர். ஆடலும்,பாடலும் களை கட்டியது. அனைவருக்கும் சிறையில் இருந்து 
விடுவிக்கப் பட்டதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அவர்கள் பார்த்த வேலைக்கான சம்பளமாக சிறிதளவு பணமும் கொடுக்கப் பட்டது. சிறை அதிகாரிகளிடம் நன்றி கூறி விடை
பெற்றனர்.பர்மாவின் காடுகள் வழியாக நடந்தனர்.ஆங்கிலேயப் படை வீரர்களாய் அங்கு வந்ததையும், ஓராண்டுக்குப் பிறகு நேதாஜியின் தலைமையில் போரிட்டதையும் நினைவு கூர்ந்தனர். ஆங்காங்கே  கட்டிட இடிபாடுகளையும் கண்டனர். குண்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரைகுறையாய் எரிந்த மரங்கள் போருக்குச் சாட்சியாய் நின்றன.மாட்டு வண்டிகள்,குதிரை வண்டிகளில் சென்றவர்கள் தங்களுடன் வருமாறு அழைத்தபோது பிரிய மனமின்றி மறுத்து விட்டனர்.சிறு கிராமங்களின் வழியே சென்றபோது தேவையான உணவுப் பொருட்களை விலைக்கு  வாங்கி சமைத்து உண்டனர். மணிப்பூரின் எல்லையில் காலை வைத்ததும் ஆனந்தக் கூத்தாடினர்.மண்ணில் விழுந்து புரண்டனர்.பாரத் மாதா கி ஜய் ,ஜய்ஹிந்த் என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது.தங்களுடைய ராணுவச் சீருடையில் கம்பீரமாக வந்த அவர்களைப் பார்த்த கிராமத்தினர் உற்சாகமாக வரவேற்றனர்.வைத்திய நாதன் ஒரு பெரியவரிடம்,"எங்களைப்
பற்றித் தெரியுமா?எனக் கேட்டான். அவர்,"எங்கள் ஊரில் ஒரு ரேடியோப் பெட்டி உள்ளது.அதில் நேதாஜி பேசியதைக் கேட்டிருக்கிறோம்.அது
மட்டுமல்ல BBC யில் உங்களைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள ஒரு  தொடர் நிகழ்ச்சி நடத்தினர் இங்கிலீஷ் தெரிந்த இந்தப் பையன் தான் எங்களுக்குச் சொல்வான்." என்றார்.அவர் காட்டிய பையனுடன் கை குலுக்கினான் மருதவாணன். "அந்த நிகழ்ச்சியை ஆங்கில அரசு தடை செய்து விட்டது.எனவே கொஞ்சம் தான் கேட்டோம்."என்றான்
அந்தப் பையன்.பிறகு அங்கிருந்து கிளம்பினார்கள்.முஸ்லிம் வீரர்கள் நிறைய இருந்தனர்.மேற்கு பாகிஸ்தான் வழியாகத் தான் நடந்து வந்தனர்.எல்லோரும் மத வேறுபாடின்றி அவர்களை விடுதலை வீரர்கள் என நன்றாக நடத்தினர். கல்கத்தா நகரம் வந்து விட்டது. ட்ராம் வண்டிகள் ஓடிக் கொண்டிருந்தன. இனி  அவரவர் ஊர்களை நோக்கிச் செல்ல வேண்டும்.கைகுலுக்கிப் பிரியாவிடை  பெற்றனர். அவர்கள்  குழுவில் தமிழர்கள் பத்து பேர் இருந்தனர்.அதிலும் 6 பேர் மதுரை   மற்றும் மதுரையை ஒட்டியுள்ள ஊர்களைச் சேர்ந்தவர்கள்.தேநீர் அருந்த ஒரு கடையில் அமர்ந்தனர். அதை ஒரு மலையாளி நடத்தி வந்தார்.எவ்வாறு மதுரைக்குச் செல்வது எனப் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டார். "பாண்டி  நாட்டுக்கா? சேச்சா!ஞான் ஒன்னு  பறையும். பறையட்டா?" என்றார்."பறையும்". என்றான் மருதவாணன். கல்கத்தாவில் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் கனரக வாகனங்களுக்கான  எஞ்ஜின் தயாரிப்பதாகவும் வசதி படைத்தவர்கள் அதை வாங்கி மதராஸ் நகரில் புதிதாகத் துவங்கப் பட்டுள்ள அசோக் மோட்டார்ஸ் கம்பெனிக்கு கொண்டு சென்று வாகனங்களாக மாற்றுவார்கள் என்றும் அவர் கூறினார்.டிரைவர் இருக்கை மட்டுமே இருக்கும். சக்கரங்கள் பொருத்தப்பட்ட  நீள் சதுர இரும்பு எஃகு சட்டங்கள்  இருக்கும் என்றும் அவை மதராஸ் செல்லும் என்றும் அவர் தெரிவித்தார். அவருக்கு நன்றி கூறி சில நாட்கள் தங்கினர்.எதிர்பார்த்த அந்த மோட்டார் வாகனம் வந்தது.
அதன் ஓட்டுநரிடம் மருதவாணன் "ஐயா,நாங்கள் INA வீரர்கள்.மதராஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். எங்களை அழைத்துச் செல்ல முடியுமா?"எனப் பணிவுடன் கேட்டான்.அவரும் ஒத்துக் கொண்டார். தபால்,தந்தி முறை ஏற்கனவே வந்து விட்டது.குறிப்பிட்ட சில இடங்களில்  மட்டும் பேருந்து வசதியும்,  ரயில் போக்குவரத்து வசதியும் இருந்தன.பர்மாவில் இருந்த போது தங்கள் குடும்பங்களோடு தொடர்பு கொள்ளமுடியாமல் தவித்தனர். இப்போது ஒரு போஸ்ட் கார்டில் தாங்கள் வருவதாக எழுதி அனுப்பினர்.மொட்டை வண்டியின் ஃபிரேம் பகுதி  உட்கார மிகச் சிறியதாகத் தான் இருந்தது.  சாய்மானம்,பிடிமானம் ஏதும் இல்லை. ஒரு கயிறால் கால்களை ஃபிரேமில் கட்டிக் கொண்டனர்.பல  நாட்கள் கழித்து மதராஸ் வந்து சேர்ந்தனர். மாட்டு வண்டி,குதிரை வண்டி என கிடைத்த வாகனங்களில் பயணம் செய்தனர். நீண்ட தூரம் செல்லக் கூடிய பேருந்துகள் இல்லை.ஒரு வழியாக மதுரை வந்து  விட்டனர். மருதவாணன் தன்னுடைய முகவரியைக் கொடுத்து கடிதம் எழுதச் சொன்னான்.பிரிய மனமின்றிப் பிரிந்தனர்.         மாமாவின் பழைய வீட்டிற்குச் செல்ல அங்கு யாரோ இருந்தனர்.ஆனால் அவர்கள்,"வாங்க! மிலிட்டரித் தம்பி." என வரவேற்றனர்.மாமா வீட்டிற்குக் கூட்டிச் சென்றனர்.38/39, சைவாள் காம்பௌண்ட் ,மணிநகரம் என்று  பெயரிடப்பட்ட  கட்டிடத்திற்குள்  நுழைந்தனர். இரு புறமுமாக 25 வீடுகள் இருந்தன. ஒரு பையன்,"பட்டாளத்து மாமா வந்து விட்டார்".என்று குரல் கொடுக்க அத்தனை வீடுகளிலும் இருந்த ஆண்களும், பெண்களும், குழந்தைகளும்   ஓடி வந்துவிட்டனர். அத்தையும், பக்கத்து வீட்டு அம்மாவும் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அனைவரும் அன்புடன் விசாரித்தனர்.மாமா,"வைத்தியநாதா!  வந்து விட்டாயா?உன்னைப் பற்றி எவ்வளவு கவலைப்பட்டோம் தெரியுமா?  உன் கடிதத்தைப் படித்த பின்தான் நிம்மதியாய் இருந்தது."என்றார். மறுநாளே அக்கா,கணவர் மற்றும் குழந்தைகளுடன் பார்க்க வந்து விட்டாள்.மாமா கடிதம் எழுதியதாகவும்,நெல்பேட்டைக்கு வந்த வண்டியிலே அத்தானுடன் வந்து விட்டதாகவும் கூறினாள். மதுரையில் ஸதர்ன் ரோட்வேஸ் என்ற பெயரில்  இயங்கிக் கொண்டிருந்த T.V.S பேருந்து நிறுவனத்திற்கு  ஓட்டுநர்கள் தேவை என விளம்பரம்
வந்தது.மருதவாணன் தற்செயலாக வைத்தியநாதனைப் பார்க்க மதுரைக்கு வந்தான். நண்பர்கள் இருவரும்  பணிக்கு விண்ணப்பித்தனர். இருவருக்குமே 
ஓட்டுநர் பணி கிடைத்து விட்டது. 
மாமாவின் மகள் லெட்சுமியைக் கரம் பிடித்தான். ஓய்வு நேரத்தில்அவர்கள் குடியிருப்பில் இருந்த சிறுவர், சிறுமியர்களுக்கு நேதாஜியின் வீரதீரச் செயல்கள் பற்றி கதைகதையாய்க் கூறுவான்.  "மிலிட்டிரி மாமா! ஆங்கிலேயருடன் எப்படி சண்டை போட்டீர்கள்?உங்களுக்கு நிஜமாகவே துப்பாக்கியால் சுடத் தெரியுமா?நேதாஜியை நேரில் பார்த்திருக்கிறீர்களா?" என்று அவர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்க பதில் கூறினான். சின்னஞ்சிறு குழந்தைகளின் மனதில் நேதாஜியை பதியச் செய்தான். தேசபக்தியையும் வளர்த்தான்.மருதவாணனுக்கும்  திருமணம் முடிந்தது.நண்பர்கள் இருவரும் தங்கள் மனைவி,  குழந்தைகளோடு சுதந்திர இந்தியாவில் மக்களோடு மக்களாய்  மக்களாட்சி   மலர்ந்த பாரதத்தில் வாழத் தொடங்கினர். 
                        முற்றும்.

Monday, February 15, 2021

ஒரு இந்திய தேசிய ராணுவ வீரனின் கதை 14

இந்திய தேசிய ராணுவ வீரர்கள்
தங்களுக்குக்  கொடுக்கப்பட்ட பணியை திறம்படச் செய்தனர்.ஒரு சில நாட்களுக்குப் பின்னர் அடுத்த தகவல் கிடைத்தது. இந்திய தேசிய ராணுவ வீரர்களைப் பாதுகாக்க குழு  ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.அதில் ஜவஹர்லால் நேரு மற்றும் வழக்கறிஞர்கள் இடம் பெற்றுள்ளனர்.  வழக்கு நடந்து கொண்டிருக்கிறது என்பதே அது.

            (பிரேம் செகல். பின்னாளில் பெண்களின் படைத்தளபதி லெட்சுமியை மணந்தவர்.)
i
             (ஷா நவாஸ்கான்)
(குரு பக்ஷ் தில்லான்)
. டில்லி செங்கோட்டைக்கு மூன்று தளபதிகளையும்  கொண்டுவந்து  நிறுத்தினர்.  விசாரணை தொடங்கியது. அவர்கள்  மூவரும் இந்து, இஸ்லாம், சீீீீீக்கியம் என்ற மூன்று மதங்களைச் சார்ந்தவர்கள். பற்றாக்குறைக்கு இந்திய மக்களின் உணர்வுபூர்வ இடமான செங்கோட்டையில் வழக்கு நடந்தது.  அங்கு வைத்து அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கினால் இந்தியர்கள் பொங்கி எழுவார்கள் என்ற பயம் ஆங்கில அரசாங்கத்திற்கு வந்து விட்டது.                         ஒரு நாள் வைத்திய நாதன், "வீரர்களே!ஒரு மகிழ்ச்சியான செய்தி.நமக்காக இந்தியா முழுவதும்  INA தினம் கொண்டாடினார்களாம். ஊர்வலம் நடத்தினார்களாம்.கல்கத்தா,பம்பாய்,சென்னை,விசாகப்பட்டினம்  ஆகிய இடங்களில் உள்ள கப்பல் படை வீரர்கள் இனிமேல் ஆங்கில அதிகாரிகளின் ஆணைப்படி நடக்கமாட்டோம் எனக் கூறிவிட்டார்களாம்."என்றான்.மருதவாணன்,"ஒரு  துக்ககரமான செய்தியும் உள்ளது.ஆங்கிலேயர் INA தினத்தன்று ஊர்வலம் சென்றவர்கள்  மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.அதில் 35 பேர்  இறந்து விட்டனராம்." என்றான். "கடவுளே! எங்களுக்காக முன்பின் தெரியாதவர்கள் உயிர் நீத்திருக்கிறார்களே.அவர்கள் ஆன்மா சாந்தி அடையட்டும்." என்றான் ஒருவன்.  திறமையான வாதத்தால்  வழக்கின் முடிவில் தளபதிகள் மூவரும் விடுவிக்கப் பட்டனர். சில நகரங்களில் சிறை வைக்கப்பட்டிருந்த  வீீரர்களும் படிப்படியாக விடுதலை செய்யப்பட்டனர். செய்தியை அறிந்த வீரர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.  பாரதம் இந்தியா,பாகிஸ்தான் என இரண்டாகப் பிரிக்கப்பட்டு விடுதலை பெறுகிறது என்பதைக் கேட்டதும்  வருத்தம் அடைந்தனர். "இந்து, முஸ்லிம் என்ற வேறுபாடு இல்லாமல் தானே  நாம் போராடினோம். ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக இருந்த நம்மைப் பிரித்து விட்டார்களே. " என்று மருத வாணன் புலம்பினான். "இந்த ஆங்கிலேயர்கள் நம்மை பல ஆண்டுகளுக்கு முன்னரே பிரிக்க. ஆரம்பித்து விட்டனர்".என்றான் வைத்திய நாதன். எல்லைப் பகுதிகளில் நடந்த மதக் கலவரங்களைப் பற்றிய செய்திகள் வந்ததும் கண்ணீர் விட்டனர்.  1947 ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா விடுதலை பெற்றது. சுதந்திர இநதியாவைக் காண்பதற்கு நேதாஜி இல்லையே என்ற வருத்தம் ஏற்பட்டது.தலைமைப் பொறுப்பை ஏற்ற ஜவஹர்லால்  வெளிநாடுகளில் சிறையில் வைக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்தினரை விடுதலை செய்யும் முயற்சியில் இறங்கினார். ஆங்கில அரசாங்கம்  பர்மா சிறை அதிகாரிகளுக்கு  இந்திய தேசிய ராணுவ வீரர்களை விடுவிக்க உத்தரவு பிறப்பித்தது.சிறை அதிகாரிகள் ஆயிரக்கணக்கான வீரர்களுக்கு விடுதலைச் சான்றிதழ்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.அத்துடன் அவர்கள் செய்த வேலைகளுக்கு ஏற்ப ஊதியத்தையும்  கணக்கிட்டனர். பல குழுக்களாகப் பிரித்து ஒவ்வொரு குழுவாக விடுதலை செய்தனர்.நாடு விடுதலை அடைந்து பல மாதங்களுக்குப் பிறகு அவர்களது குழுவை விடுதலை செய்ய உத்தரவு  வந்தது.பாரத் மாதா கி ஜய்  என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது.
                                   தொடரும்.                 

Wednesday, February 10, 2021

ஒரு இந்திய தேசிய ராணுவ வீரனின் கதை 13.

போர்க் கைதிகள் அனைவரையும்    பர்மாவில் இருந்த விமான நிலையத்தின் விரிவாக்கப் பணியில்  அமர்த்த ஆங்கில அரசு உத்தரவிட்டது.இரண்டாம் உலகப் போருக்காக அந்த விமான நிலையத்தில் சிறிய அளவில் எல்லா வசதிகளும் ஏற்படுத்தப் பட்டிருந்தன. காலை உணவு சாப்பிட்டவுடன் மதிய உணவை ஈயத்தூக்கு வாளியில் வாங்கிக் கொண்டு கிளம்ப வேண்டும்.  இருட்டாகும்  வரை வேலை பார்க்க வேண்டும். கடுமையாக  வேலை வாங்கினார்கள்.ஒரு நாள் வைத்தியநாதன் சமையல் செய்து கொண்டிருந்த இடத்திற்கு தற்செயலாக வந்தான்.பெரிய பாத்திரத்தில் தண்ணீர் கொதித்துக் கொண்டிருந்தது.அரிசியில் புழுக்களும்,வண்டுகளும் இருந்தன. பெயருக்கு ஒரு தடவை தண்ணீரில் கழுவி சமையல்காரர் உலையில் போட அவை மிதந்தன. கொதித்து எழுந்தான் வைத்தியநாதன். "அரிசியை  நன்றாக சுத்தம் செய்து போடு.நாங்கள் சாப்பிடுவதா?வேண்டாமா?"என்று கேட்டான். சமையல்காரனோ,"உங்களுக்கு புண்ணியத்துக்கு சமைத்துப் போடுகிறோம். வாயை மூடிக் கொண்டு போ" என்றான். அதற்குள் மருதவாணனும் வந்து விட்டான். "என்ன?புண்ணியத்துக்கு சமைக்கிறாயா? நாங்கள் சும்மா உட்கார்ந்து சாப்பிடவில்லை. காலையில் இருந்து இருட்டும் வரை 
வேலை பார்க்கிறோம்.அரசாங்கம் உனக்கு  எங்களுக்கு சமைத்துப் போட சம்பளம் கொடுக்கிறது."என்று மருதவாணன் சத்தம் போட்டான்
அதற்குள் வீரர்கள் சேர்ந்து விட்டனர்.ஒருவர், "சமையலுக்கு ஆள் வேண்டாம்.நாங்களே சமைத்துக் கொள்கிறோம் என்று வார்டனிடம்
சொல்லி விடுவோம்". என்றார். அவ்வளவுதான் சமையல்காரன் "அய்யா! நான் பிள்ளைகுட்டிக்காரன் என்னை வேலையில் இருந்து தூக்கச் செய்து விடாதீர்கள்."என்று கை கூப்பினான்."சரி.நாங்கள் சமையல் செய்கிறோம்.நீ  சும்மா இருந்தால் போதும்." என்று வைத்தியநாதன் கூறினான்.மறுநாள் 
 அதிகாலையிலேயே  4,5 வீரர்களோடு  வந்து  விட்டான் வைத்தியநாதன்.ஒரு நாளுக்கு பத்துபடி அரிசி அவர்கள் முகாமுக்கு ஒதுக்கப் பட்டிருந்தது. பெரிய தட்டுகளில் அதைப் பிரித்து புழுக்களையும் வண்டுகளையும்  நீக்கி கழுவிக் கொடுக்க 2 பேர் சமைத்தனர்.வெறும் சோறே ருசியாய்
இருந்தது. 
 வீரர்கள் தாங்களாகவே 
முன்வந்து சமைக்க விரும்பினர். குழுக்களாகப் பிரிந்து தினம் ஒரு குழு சமைத்தனர். எத்தனை நாட்கள் இங்கு இருக்கப் போகிறோம் எனத் 
தெரியாமல் தவித்தனர். கூழானாலும், கஞ்சியானாலும் பகிர்ந்து உண்டார்கள். செய்தித் தாளில்  வெளியாகும் செய்திகளைக் கேட்டு அறிந்தனர்.
            இந்திய தேசிய ராணுவத்தினர் நடத்திய போரைப் பற்றிஇந்திய மக்கள் ஏதும் அறியவில்லை. வங்காள மக்கள் மட்டுமே ஓரளவு அறிந்திருந்தனர். ஆனால் உலகப்போர் முடிந்தபின் அவர்களைத்  தேசத்துரோகிகள் எனச் சித்தரிக்க போரினைப் பற்றிய தகவல்களை ஆங்கில அரசு வெளியிட்டது.                                             ஒரு நாள் இரவு வைத்தியநாதன், "தோழர்களே! நம் சிறைக்காவலர்கள் தூங்கிய பிறகு முக்கியமான  தகவல்களை உங்ளுக்கு சொல்லப் போகிறேன்". என்றான்.அனைவரும் காத்திருந்தனர். நள்ளிரவில் பேச ஆரம்பித்தான். " நம்முடைய வீரர்களை ஏற்றிச் சென்ற ரயிலை மறித்து மக்கள் கல்கத்தாவில் கலகம் செய்தார்களாம்.தடியடி நடத்தியும், வானை நோக்கி சுட்டும் தான் முன்னே  சென்றிருக்கிறார்கள். பர்மாவிற்கு நம் படையை வழிநடத்திய தளபதி ஷா நவாஸ் கான்,  மற்றும் முக்கியத் தளபதிகளான பிரேம் செகல், குர் பக்ஷ் தில்லான் ஆகிய மூவரையும்  டெல்லி  செங்கோட்டையில் குற்றவாளிகளாக நிறுத்தியுள்ளனர்.  அவர்கள் கடமை தவறியவர்கள், ஆங்கிலேய அரசை எதிர்த்த தேசத்துரோகிகள், எதிரிகளுடன் சேர்ந்து சதி  செய்தவர்கள் என்று பல குற்றங்களை அரசு முன்வைத்துள்ளது.
. இப்போதுதான் INAவின்  போராட்டம்  இந்தியாவில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இனி நமக்கு   மக்களின் ஆதரவு கிடைக்கும் என்பது உறுதி. அவர்களின் எதிர்ப்பால்  துண்டைக் காணோம்.துணியைக் காணோம் என்று ஓடப் போகிறார்கள்." என்று
முடித்தான் வைத்தியநாதன். வீரர்கள்"இன்குலாப் ஜிந்தாபாத்" என்று முழக்கமிட்டனர். ஒரு சீக்கியவீரர், "வைத்தியநாதா!  உனக்கு மட்டும் எப்படி இவ்வளவு செய்தி தெரிகிறது?" என்று கேட்டார்."நாம் வேலை பார்க்கும் விமான நிலையத்தில்   ஒரு தமிழ் அதிகாரி  இருக்கிறார்.அவர் சொல்லும் வேலையை தட்டாமல் செய்வேன்.ஒருவணக்கம் சொல்லிவிட்டு அம்மா, பிள்ளைகள் எல்லாம் நலமா என்று விசாரிப்பேன். அவர்தான் நம் நாட்டுச் செய்திகளைக் கூறுகிறார்"என்று இந்தியில் விவரித்தான். அவருக்கு 
தங்களது நன்றியைத் தெரிவிக்கும்படி  அனைவரும் கேட்டுக் கொண்டனர்.
                   தொடரும்.  

Sunday, January 24, 2021

ஒரு இந்திய தேசிய ராணுவ வீரனின் கதை 12

பர்மாவின் தலைநகரான ரங்கூனில் கைதிகள் முகாம் அமைக்கப்பட்டு அங்கு ஆயிரக் கணக்கான வீரர்கள் சிறை வைக்கப்பட்டார்கள். சிட்டகாங் முகாமுக்கும் , கல்கத்தா முகாமுக்கும் பலர் அனுப்பப் பட்டனர். கிட்டத்தட்ட 12,000 பேர் சிறைபிடிக்கப் பட்டதாக ஆங்கில அதிகாரிகள் பேசிக் கொண்டது கைதிகளுக்கும் தெரிந்தது.
முக்கிய உயர் ராணுவஅதிகாரிகளை டில்லிக்கு கொண்டு போய் சிறையில் இட்டார்கள்.ஒரு சில நாட்கள் கழித்து ஆங்கிலேயே அதிகாரிகள் அதிக மகிழ்ச்சியுடன்காணப் பட்டனர். கட்டிப்பிடித்தும், கைகுலுக்கியும் கொண்டாடினர்.ஒரு அதிகாரி வந்து, "உங்கள் நேதாஜி விமான விபத்தில் இறந்து விட்டார்."எனத் தெரிவித்தார். அனைவரும்  அதிர்ந்து போனார்கள். கண்ணீர் விட்டுக் கதறினார்கள். "நேதாஜி உங்ளை மீண்டும் பார்ப்போம்.சுதந்திர இந்தியாவில் நாம் சந்திப்போம் என்று நினைத்தோம்.இப்படி ஆகிவிட்டதே." என்று புலம்பினர். வைத்தியநாதன்,"நம் நேதாஜியை பிரிட்டிஷார் ஏதோ செய்து விட்டனர். விமான விபத்து தற்செயலாக நடந்திருக்காது.திட்டம் தீட்டி செய்திருப்பார்கள்."என்றான்.மருதவாணன்,"எங்கேயோ கண்காணாத 
இடத்தில் சிறையில் வைத்துவிட்டு நாடகம் ஆடுகிறார்கள்."என்று கூறினான். "அப்படித் தான் இருக்க வேண்டும்"என்றான் ஒரு வீரன். "அவன் கூறுவது சரிதான்" என்றான் மற்ற ஒரு வீரன்."சிறையில் வேலை பார்க்கும் பர்மியர் யாரிடமாவது சொல்லி செய்தித்தாளில் என்ன. செய்தி வந்துள்ளது எனக்கேட்கலாம்"  என்றான் வைத்தியநாதன்.  அவர்களுடன் சிறையில் இருந்த பர்மியத் தமிழர்  ஒருவர் எப்படியோ செய்தித்தாளைப் பெற்று  விட்டார்.அதைப் படித்து விட்டு கண்ணீருடன் செய்தியை விவரித்தார். 
      சிங்கப்பூர் ஆங்கிலேயர் வசமாகி விட்டதால் நண்பர்களின் அறிவுரைகளை ஏற்று அங்கிருந்து நேதாஜி  மிட்சுபிட்சி என்ற ராணுவ விமானத்தில் கிளம்பினார்.
 (கடைசியாக எடுக்கப்பட்ட புகைப்படம்)                                             1945 ஆகஸ்ட் 18 ஆம் நாள் தைவான் நாட்டில் தெய்பே (அப்போதைய பெயர் பார்மோசா) என்ற இடத்தில் நடந்த விமான விபத்தில் இறந்து விட்டார்.தீப்பற்றி எரிந்த நிலையில்  அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை தந்திருக்கிறார்கள். ஆனால் பலனில்லாமல் இறந்து விட்டார். ஆகஸ்ட் 20 ஆம் நாள் தைவான் நாட்டில்  தகனம் செய்யப் பட்டார்.அவருடன் சென்ற ஜப்பானிய 
படைத் தலைவரும் இறந்து விட்டார்.இச்செய்தி  ஜப்பான் நாளிதழில்  தெரிவிக்கப் பட்டது.அதன் பின்பு தான் அனைவருக்கும் செய்தி தெரிந்தது.
(ஜப்பான் செய்தித்தாள்)             அதற்குப் பின்னர் ஆங்கில செய்தித்தாளில் வெளியானது.இந்தியத் தாயின் வீீீரப் புதல்வன் ,வங்கம் தந்த தங்க மகன் மறைந்து விட்டார்.அவர் மரணம் அடைந்தாரா?மறைந்தாரா?அல்லது மறைக்கப்  பட்டாரா? மர்மம்  வெளியாகவே இல்லை.                                                 (பின் குறிப்பு)     நேதாஜியின் மறைவைக் குறித்து ஆராய நேருவின் காலத்தில் ஷாநவாஸ் கான் ஆணையமும் ,இந்திரா காந்தி காலத்தில் கோஸ்வாமி ஆணையமும் அமைக்கப் பட்டன.அவை இரண்டும் மரணத்தை  உறுதி செய்தன. ஆனால் 1999ல் அமைக்கப்பட்ட  M K முகர்ஜி ஆணையம் விசாரணை செய்தபோது நேதாஜி மரணமடைந்ததாகக் கூறப்பட்ட காலகட்டத்தில் 1945 பிப்ரவரி முதல்  டிசம்பர் வரை தைவான் நாட்டில் எந்த விமான விபத்தும் நடக்கவில்லை என அந்நாட்டு அரசாங்கம் அறிக்கை அளித்தது.மத்திய அரசில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் முகர்ஜி அறிக்கை  கிடப்பில் போடப் பட்டது.எனவே நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மரணம் இன்றளவும் மர்மமாகவே உள்ளது.
                      தொடரும்.                 

Tuesday, January 19, 2021

ஒரு இந்திய தேசிய ராணுவ வீரனின் கதை 11.

முன் தினம் மேஜர் குறிப்பிட்ட டாங்கர்கள் வந்து சேர்ந்தன. தரையில் தொலைதூரம் குண்டுகளை வீசக் கூடியது. இதை வைத்து வானில் பறக்கும் விமானத்தைத் தாக்க முடியாதே என நினைத்தனர்.மேஜர்,"குண்டு வீசும் பீரங்கிக் குழல்களை மேல் நோக்கி உயர்த்துவோம்.விமானத்தைத் தாக்க முயற்சிப்போம்". என்றார்.அவ்வாறே செய்தனர்.
வருவது வரட்டும் என்ற மனஉறுதியுடன் செயல்பட்டனர். வைத்தியநாதன் குண்டு வீீசுவதற்காக தாழ்ந்து பறந்த விமானத்தைக் குறிவைத்து குழலை  நகர்த்தினான். அன்று காற்று வீசிய திசையை அறிந்து அதன் போக்கிலேயே பீரங்கியை இயக்கினான்.குண்டு சரியாக இலக்கை அடைந்தது.விமானம் சுட்டு வீீழ்த்தப் பட்டது.மகிழ்ச்சி அடைந்த வீரர்கள் மற்ற பீரங்கிகளையும் அதைப் போலவே இயக்கினர். தாக்குதலைத் தீவிரப் படுத்தினர். வானில் பறந்த இரண்டு விமானங்கள் திரும்பி விட்டன. வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் கை குலுக்கிக் கொண்டனர். கை தட்டி மகிழ்ந்தனர்.மேஜர், " சாதித்து விட்டாய் வைத்தியநாதா! நல்ல முன் மாதிரியாய் செயல்பட்டாய்". என்று கூறி கை குலுக்கினார்."அடிபட்ட அவர்கள் நம்மை சும்மா விட மாட்டார்கள்.நாளை மிக அதிகமான விமானங்களை எதிர்பார்க்கலாம்." என்றார். மேஜர்கள் அனைவரும்  தங்களது படைகளைப்  பிரித்து வெவ்வேறு பகுதிகளுக்கு  வழிநடத்தும்படி  நமது தளபதி தில்லான்  கட்டளை இட்டுள்ளார். நாளை  நாம் ஆயிரக்கணக்கில் ஒன்றாகச் செல்லப் போவதில்லை." என்று கூறிச் சென்றார்.மறுநாள் பிரேம் ஷாகல், ஷா நவாஸ் கான்,குரு பக்ஷ் தில்லான் மூவரும் ஆங்காங்கே வீரர்களிடம் வீரவுரை  ஆற்றி ஊக்கப் படுத்தினர் .பின்னர் பிரிந்து வேறுவேறு பகுதிகளுக்குச் சென்றனர்.  "நம் போன்ற வீரர்களை   குண்டு வீசித் தாக்கினால்  பரவாயில்லை. ஜப்பானில் அணுகுண்டை வீசி ஒன்றும் அறியாத மக்களைக் கொன்ற அமெரிக்காவை நினைத்தால் எனக்கு வயிறு பற்றி எரிகிறது."  என்றான் வைத்திய நாதன். "இப்பொழுது மட்டும் ஆங்கில வீரர்கள் வரட்டும்.சுட்டுக் கொன்று விடுவோம்". என்றான் மருத வாணன்."ஆமாம். அவர்களை  விடக்கூடாது."என்று ஒரு வீரன் கூறினான்.விமானம் வீழ்த்தப் பட்டதை அறிந்த ஆங்கிலப் படை ஆக்ரோஷமாக பதிலடிகள் கொடுக்க ஆரம்பித்தது.உதவிய ஜப்பானும் ஜெர்மனும் ஏற்கனவே சரணடைந்து விட்டது. எனவே இந்திய தேசிய ராணுவம் கையறுநிலையை அடைந்தது. போர் ஆரம்பித்ததில்  இருந்து கிட்டத்தட்ட 130 கி.மீ.தூரம் நடந்தே வந்திருந்த படையினர் சோர்வு அடைந்து விட்டனர். மருதவாணனிடம் வைத்தியநாதன், "மருதா !இன்னும் இரண்டு,மூன்று நாட்களுக்குத் தான் உணவுப் பொருட்கள் உள்ளது". என்றான். விவரம் அறிந்த மற்றவர்கள், "பயப்படவேண்டாம்.காட்டில் கிடைக்கும் காய்கறிகள்,பழங்களைப் பறித்து உண்போம் "என்றார்கள். ஒருவன்,"ஒரு நேரம் மட்டும் சமைக்கலாம்".என்றான்.அனைவரும்ஒத்துக் கொண்டனர். கையெறி குண்டுகள்,துப்பாக்கி குண்டுகள் அனைத்தும் காலி ஆகிவிட்டன. தற்காத்துக் கொள்ள துப்பாக்கியில் பொருத்தப்பட்டிருந்த கத்திகள் மட்டுமே இருந்தன. நேசப்படையின் விமானங்கள் விடாமல் துரத்தித் துரத்தி குண்டுகளை வீசின.கண் எதிரே கொத்துக் கொத்தாக வீரர்கள் மடிந்தனர்.காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி கிடைக்கவில்லை. உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர் விழுந்து கிடந்தனர். கை,கால்களை இழந்தவர்கள் மன உறுதியை இழக்கவில்லை. "ஜய்ஹிந்த்" எனக் கூறி கையசைத்து பிறரை வழியனுப்பினர். செஞ்சிலுவைச் சங்கம் உதவ  வரும் போது எத்தனை பேர் பிழைத்திருப்பார்கள் எனத் தெரியவில்லையே என்று கனத்த மனதுடன் வைத்தியநாதனும், மருதவாணனும் நடந்தனர். நம்மிடம் பயிற்சி பெற்று நம்மையே எதிர்த்துப் போராடுகிறார்களே என்று ஆங்கிலேயர்கள்கோபமடைந்தனர்.தாக்குதல் மென்மேலும் தீவிரமானது.நேசப்படை அவர்களைப் பிடிக்க முயன்று கொண்டிருந்தது.நான்கு புறமும் அவர்களின் படையைச் சுற்றி வளைத்தது.வேறு வழியில்லாமல் மீதி இருந்த வீரர்கள் சரண் அடைந்தனர்.ஆங்கிலேயர்கள் அவர்களை பர்மாவிற்கு கொண்டு சென்று சிறையில் அடைத்தனர். இந்திய விடுதலைக்காகப் போரிட்ட அந்த மாவீரர்கள் சிறைக்குள் அடைபட்டுக் கிடந்தனர்.
                      தொடரும். 

Tuesday, January 12, 2021

ஒரு இந்திய தேசிய ராணுவ வீரனின் கதை 10.

இரண்டாம் உலகப் போர் தீவிரம் அடைந்தது.நேசநாடுகள் அணியில் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் இருந்தன.அத்துடன் அமெரிக்காவும் இணைந்து கொண்டது. தாங்கள் இழந்த இடங்களை எல்லாம் ஆங்கிலேயர்கள் அவர்களின் கூட்டணிப் படைகளுடன் இணைந்து மீண்டும் கைப்பற்றினர். ஆங்கிலேயரின் கை ஓங்கியது.1945 ஏப்ரல் மாதம் ஜெர்மன் சரண் அடைந்தது.ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார். 1945 ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதியும் 9 ஆம் தேதியும் ஜப்பான் நாட்டில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களில் அமெரிக்கா அணுகுண்டை வீசியது.ஒரு லட்சத்திற்கு மேலாக சாமானிய மக்கள் இறந்தனர்.உயிர் பிழைத்தவர்களும் கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து  ஜப்பான் சரண் அடைந்து விட்டது.இந்திய தேசிய ராணுவத்திற்கு    கிடைத்த  உதவிகள் நின்று போயிற்று.போரை மேற்கொண்டு நடத்த முடியாத     சூழ்நிலை ஏற்பட்டது.                          நேதாஜி வானொலியில்   உரையாற்றத் தொடங்கினார். "வீரர்களே, நீங்கள் அனைவரும் என்றாவது ஒரு நாள் வீடு திரும்புவீர்கள். அப்போது, நாம் பட்ட வேதனைகளையும் வலிகளையும்   உங்கள் குழந்தைகளுக்குக் கதைகளாக எடுத்துச் சொல்லுங்கள். எதிர்காலத்தில்  நம் தேசத்தில் இருள் சூழ்கிறபோது, இந்தக் கதைகள் அவர்களுக்கு நம்பிக்கையையும் வீரத்தையும் கற்றுத் தரும்." என்றார்.ஆஸாத் ஹிந்த் பத்திரிக்கையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
"நமது வரலாற்றில் நாம் சற்றும் எதிர்பாராத நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில் உங்களுக்கு சிலவற்றைக் கூற விரும்புகிறேன். இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்து விடாதீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் உணர்வுகளை தளர விடாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் எதிர்காலத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தவறாக மதிப்பிட்டு விடாதீர்கள். இந்தியாவை நிரந்தரமாக அடிமைத் தளையில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல. விரைவில் இந்தியா விடுதலை அடையும். ஜெய் ஹிந்த்!".வீறு கொண்டு எழுந்த   வீரர்கள்   இருந்த தளவாடங்களைக் கொண்டு  ஆவேசமாகக் களத்தில் மோதினர். ஆனால் வான்வழித் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறினர். எதிரி விமானத்தைக் கண்டதும் சைரன் ஒலி எழுப்புவார்கள். உடனடியாக பதுங்கு குழிக்குள் இறங்கிவிட வேண்டும். மேலே இருந்து பார்த்தால் வீரர்களைப் பார்க்க முடியாது.ஒரு நாள் வைத்தியநாதனும்  மருதவாணனும் தங்கள் குழுவோடு சென்று கொண்டிருந்தனர்.சைரன் ஒலித்ததும் அனைவரும் ஆங்காங்கே    பதுங்குகுழிக்குள் இறங்கினார்கள்.ஒரு குழிக்குள் குண்டு  விழுந்தது. உள்ளே இருந்தவரின் அலறல் அங்கிருந்தவர்களின் காதில் ஒலித்தது. குழுவுக்கு ஒரு மருத்துவரும் கூடவே வருவார். விமானம் கடந்து சென்றதும்  சிலர் காயம் பட்டவரைத் தூக்க ஓடினர்.மருதவாணன் டாக்டரைத் தேடிப்பார்த்து கூட்டிக்கொண்டு வருகிறேன் என்று கூறி ஓடினான்.உள்ளே இருந்தவனை வெளியே தூக்கி வந்தனர். முகத்தைப் பார்த்த பின்புதான் அது டாக்டர் எனத் தெரிந்தது.டாக்டரைத் தேடியவன்  அவரைக் காணவில்லை என்று திரும்பி வந்தான்." அடிபட்டு உயிரிழந்தவர் டாக்டர்தான்"என்று வைத்தியநாதன் கூறினான். நம்மைக் காப்பாற்ற வந்தவருக்கு இப்படி ஆகி விட்டதே என்று அனைவரும் வருந்தினர். 
       கூடாரத்தில்  அன்று இரவு டாக்டரின் நினைவாகவே இருந்தது."நாம் ஆங்கிலேயருக்காகப் போராடிய போது என் காலில் பாய்ந்த குண்டைத்  தோண்டி எடுத்து மருத்துவம் பார்த்தார்.நான் கத்தினேன். கதறினேன்.உன் கால் உனக்கு  வேண்டுமென்றால் சற்று அமைதியாக இரு என்று சமாதானம் செய்தார்.அவர் இல்லை என்றால் என் கால் செப்டிக் ஆகியிருக்கும். இன்று நான் நடப்பதற்கு அவர்தான் காரணம்" என்று ஒரு வீரன் கண்ணீர் விட்டான்.அப்பொழுது உள்ளே வந்த மேஜர் " வீரர்களே! இது அழவேண்டிய
நேரம் இல்லை. பழிக்குப்பழி.வானில் பறக்கும் விமானங்களைச் சுட்டு வீழ்த்த பீரங்கிகளைப் பயன்படுத்தப் போகிறோம்.வெற்றி நமதே.ஜய் ஹிந்த்." என முழங்கினார்."ஜய் ஹிந்த்" என அனைவரும் குரல் கொடுத்தனர்.நாளை நாம் ஒரு கை பார்த்து விடுவோம் என்ற உறுதியுடன் சற்றே ஓய்வெடுத்தனர். காலையில் பொழுதுவிடிந்ததும் தயாராகி விட்டனர்.   வைத்தியநாதனும்,மருத வாணனும் சப்பாத்திகளைச் சுட்டு இலைகளில் வைத்து அடுக்கிக் கொண்டிருந்தனர். வீரர்கள் தமக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொண்டனர். மேஜர் உள்ளே வந்தார். வைத்தியநாதனைப்  பார்த்ததும், "அச்சா! இன்று நானும்  சப்பாத்தி எடுத்துக் கொள்கிறேன்." என்றார்."மேஜர் சார்!  சப்பாத்தி சுட்டு விட்டேன்.அடுத்து ஆங்கிலேயரின் விமானத்தை சுடப் போகிறேன்." என்றான் வைத்தியநாதன். தோளில் தட்டிக் கொடுத்து, "உன்னைப் போன்ற இளைஞர்கள் நீடுழி வாழ வேண்டும்." என வாழ்த்தினார். கூடாரத்தை சுருட்டி மடக்கி ஜீப்பில் ஏற்றினர். எதிரிகளின் தாக்குதலை  முறிடிக்கத் தயார் நிலையில் நகரத் தொடங்கினர். 
                     தொடரும். 

Tuesday, January 5, 2021

இந்திய தேசிய ராணுவ வீரனின் கதை 9

நேதாஜியின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடங்கியது. சிங்கப்பூரைத் தலைமை இடமாகக் கொண்டு சுதந்திர இந்தியாவை அறிவித்தார்.தானே பிரதமராகவும்,
ராணுவத் தளபதியாகவும் பொறுப்பேற்றார்.அமைச்சரவை அமைக்கப் பட்டது.மகிழ்ச்சியில் வெளி நாட்டு இந்தியமக்கள் தங்களால் இயன்றவரை பொருளுதவி செய்தனர்.ஒரு வங்கியையே தொடங்கும் அளவிற்கு நிதி திரண்டது. Bank of Independence என்ற புதிய வங்கியைத் தொடங்கினார்.  நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டன. (இது நேதாஜியின் 113ஆவது பிறந்த நாள் விழாவில் வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டின் படம்.இந்திய தேசிய ராணுவம் பயன்படுத்த தனது இடத்தைக் கொடுத்த பிராகிலால் என்ற வீீீரருக்குத் தரப்பட்டது. ராமாயணப் புத்தகத்தில்  பத்திரமாக வைத்திருந்த அந்த ரூபாய்த்தாள்
அவரது மகனால் பல ஆண்டுகள் கழித்து கண்டுபிடிக்கப் பட்டது.)  தன் வீரர்களுக்குக்  கடுமையான பயிற்சி அளித்தார்.படை வீரர்களின் முகாம்களுக்குச் சென்று வீர உரையாற்றினார்.ஒரே ஒரு முறை வைத்தியநாதன் இருந்த படைப் பிரிவிற்கு வந்தார்.அவரது கம்பீரமும், சிங்கம் போன்ற முழக்கமும்  அனைவரையும் கவர்ந்தது.தங்களது தலைவனை நேரில் கண்டது பெரும் உற்சாகத்தைத் தந்தது.ஆஸாத் ரேடியோவில் அடிக்கடி பேசி தேசிய உணர்வை ஊட்டினார்.பர்மா ,மலேசியா நாடுகளில் இருந்த வீரர்கள் அதைக் கேட்டு எழுச்சி பெற்றனர்."டெல்லி சலோ"என்ற முழக்கம் கேட்டதும் ராணுவம் இந்தியாவை நோக்கி முன்னேறியது.    
தரைப்படைக்கு தில்லான் தலைமைப் பொறுப்பேற்றார்.பெண்கள்
படையை லெட்சுமி சுவாமிநாதன் வழிநடத்தினார்.பெண்களின் படையைக் கண்டு அனைவரும்  வியந்து போனார்கள். மருதவாணன்,"பார்த்தாயா வைத்தியநாதா! நம் பெண்கள் ஆங்கிலேயரை விரட்ட களம் இறங்கி விட்டனர்." என்றான். " வீரமங்கை வேலு நாச்சியாரும்,ஜான்சி ராணியும் பிறந்த மண் நம் பாரதம். வீரமும்,தீரமும் பெண்களிடம்  உள்ளது." என்றான் வைத்தியநாதன். அடிக்கடி  வானொலியில் வீரர்களிடம் பேசினார். "சுதந்திரம் என்பது கொடுக்கப்படுவது அல்ல. எடுக்கப்படுவது".என்று முழங்கினார்."குழந்தை அழுது புரட்சி செய்துதான் தனக்குத் தேவையானதைப் பெறுகிறது." என்றார். ராணுவத்தினர் அவரது உரையாடலால் எழுச்சி பெற்றனர். "கதம் கதம் படாயே "
என்ற  அணிவகுப்புப் பாடல் இந்தியர்களின் தேசபக்திப் பாடல் ஆகியது.இந்திய தேசிய ராணுவம்  படிப்படியாய் நகர்ந்தது. "மருதவாணா! உனக்குத் தெரியுமா?பெண்கள் அணியில் தற்கொலைப் படை உருவாக்கப் பட்டுள்ளது". என்று வைத்தியநாதன் கூறியதும் "அப்படியா? " என்றான் மருதவாணன். "ஆங்கிலேயரின் பீரங்கிகள் வரும் போது வெடி குண்டுகளை உடலில் கட்டிக் கொண்டு வழியில்  படுத்துக் கொள்ளப் போகிறார்களாம்." என்று வைத்தியநாதன் கூறினான்.. இந்திய தேசிய ராணுவம்,ஆங்கில ராணுவத்தைப் படிப்படியாக வென்று 
மணிப்பூர், இம்பால்,கொஹிமா வரை முன்னேறிச் சென்று விட்டது. இது ஆங்கிலேயருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்திய தேசிய ராணுவத்தை அடக்க திட்டம் இட்டனர்.  
                        தொடரும்.