Sunday, December 20, 2020

ஒரு இந்திய தேசிய ராணுவவீரனின் கதை 4 ,5.

 வைத்திய நாதன்  மதராஸ் பட்டினத்தை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தான். பயணம் செய்தவர்கள்  ஒருவருக்கு ஒருவர் தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டனர். சிலர் வறுமை காரணமாகவும் சிலர் சாகசங்கள் புரிய விரும்பியும்  சேர்ந்திருந்தனர். 1937 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைக் காலத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் மதராஸ் மாகாணத்தைக் கைப்பற்றி இருந்தது. அப்பொழுது ஒருவன் பேச ஆரம்பித்தான். " "இப்போது நமது முதல்வர் ராஜாஜி தானே.நாம்  அவரைப் பார்க்க வேண்டும் அல்லவா?"  வைத்தியநாதன் "காங்கிரஸ் பெயரளவில் தான் ஆண்டு கொண்டு இருக்கிறது.ஆங்கிலேயர்கள் கையில் தான் உண்மையான அதிகாரம் உள்ளது.அவரைப் பார்க்க விடமாட்டார்கள்." என்றான்."இப்போது மதராஸ் கவர்னர் யார்?" என்று ஒரு இளைஞன் கேட்டான்." எர்ஸ்கின் பிரபு" என்று வைத்தியநாதன் பதில் கூறினான்.ராணுவ ட்ரக்கில் சென்ற வீரர்களுக்கு  ஆங்காங்கே ஆங்கிலேய முகாம்களில் உணவு வழங்கப்பட்டது. இரவு நேரங்களில் கூடாரம் அமைத்துத் தங்கினர். காலையில் அருகில் உள்ள ஏரி, குளங்களில் குளித்தபின் மீண்டும் பயணம் தொடர்ந்தது. சில தினங்களில் மதராஸ் பட்டினத்திற்கு வந்து சேர்ந்தனர். "ஆங்கிலேயர் கட்டிய இந்தக் கோட்டையைப் பாருங்கள். அழகாக உள்ளது." என்று ஒருவன் கூறினான்.வீரர்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கண்டு வியப்பு அடைந்தனர். கவர்னரின் அனுமதி பெற்ற பின் மதராஸ் ராணுவ வீரர்களுடன் இணைக்கப் பட்டனர். வேறு ஊர்களில் இருந்தும் புதிய வீரர்கள் வந்திருந்தனர்.அனைவருக்கும் பயிற்சி தொடங்கியது. அதிகாலை 4 மணிக்கு கடுமையான உடற்பயிற்சியும் தொடர்ந்து ஓட்டப்பயிற்சியும் செய்தனர். சில மாதங்களுக்குப் பின் துப்பாக்கி  சுடும் பயிற்சி அளிக்கப் பட்டது.காக்கி அரைக்கால்  டிரௌசரும்,சட்டையும், தலையில் தொப்பியும்,கையில் துப்பாக்கியுமாக நின்ற வைத்திய நாதன் கம்பீரமாகக் காட்சி அளித்தான்.        
                           தொடரும்.

ஒரு இந்திய தேசிய ராணுவ வீரனின் கதை    5
  
        மறுநாள் உயரமான கட்டிடத்தில் உச்சியில் இருந்து தொங்க விடப்பட்ட கயிற்றின் மேல் சரசரவென ஏறிப் பயிற்சி செய்ய கைகளால் பற்றினான்.பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது."ஏய்!ஏறாதேப்பா.கயிறு அறுந்து விழுந்து விடும்". நிமிர்ந்து பார்த்தால் ஓரிடத்தில் கயிறு நைந்து போயிருந்தது. வைத்தியநாதன் நன்றி சொல்ல திரும்பிப் பார்த்தான். கருப்பு நிறமும்,நல்ல உயரமும், திடகாத்திரமான உருவமும் கொண்ட
ஒரு வீரன் நின்று கொண்டு இருந்தான்.நன்றி என்று கூறி அவன் கைகளைப் பிடித்துக் குலுக்கினான். கயிறை மாற்றி விட்டு பயிற்சியைத் தொடர்ந்தான். வைத்திய நாதனுக்கு உதவியவன் உத்தமபாளையத்தைச் சேர்ந்த மருதவாணன் என்பதைத் தெரிந்து கொண்டான்.
         மறுநாள் அணிவகுப்புப் பயிற்சியின் போது புதிய வீரர்களில் சிலருக்கு Ieft,right என்னும் போது எந்தக் காலை தூக்கி வைப்பது என்பது தெரியவில்லை. ஒரே குழப்பமாகி விட்டது.வைத்தியநாதன் ஆங்கிலேய அதிகாரியிடம் வந்தான். ஸார்,ஐடியா ஸார்,ஹெல்ப் யூ ஸார்.அவன் ஏதோ செய்யப் போகிறான் என உணர்ந்து தலையை அசைத்தார். ஓடிப்போய் கீழே கிடந்த தென்னை ஓலைகளை எடுத்து அவர்களின் இடது கால்களில் கட்டினான். இது ஓலைக்கால்,அது சீலைக்கால் எனக்கூறி ஓலைக்கால், சீலைக்கால் என்று மாற்றி மாற்றிக் குரல் கொடுத்தான்.சில நிமிடங்கள் கழித்து left,right எனக் கூற சரியாகச் செய்தனர்.அதிகாரி "குட் "என்றார்.
                              ஓராண்டுப்  பயிற்சி நிறைவடைந்தது.காய்ந்த ரொட்டி, கூழ்,கஞ்சி, சோறு எனஎதுவானாலும்  சாப்பிட்டுக் கொண்டான். எல்லாப் பயிற்சிகளையும் ஒழுங்காகச் செய்தான். ராணுவத்தினருக்கு சில நாட்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலும்,சில நாட்கள் துறைமுகத்திலும் பணிகள் தரப்பட்டன. ஒரு நாள் ராணுவ உயர் அதிகாரிகள் அனைவரையும் உடனடியாக வரும்படி ராணுவத் தளபதி அழைப்பு விடுத்தார். கூட்டத்தில் போர்க்காலச் சூழல் நிலவுவதாகவும் உத்தரவு வந்தவுடன் 
ராணுவத்தினர் கிளம்பத் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கட்டளை இட்டார். அதன்படி அனைவரும் தயாராய் இருந்தனர். ஜெர்மனி,இத்தாலி,  ஜப்பான் ஆகிய நாடுகள் போரினை ஆரம்பிக்கப் போவதாக உளவுத் துறை தகவல் தெரிவித்தது. சில நாட்களில் ஜெர்மன் படைகள் போலந்து நாட்டை முற்றுகை இட்டது. 1939 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் நாள் இரண்டாம் உலகப் போர் ஆரம்பமானது. மதராஸ் ராணுவத்தினர்  கிளம்பத் தொடங்கினர். வைத்தியநாதன் தபால் கார்டு ஒன்றில்  மாமாவிற்குத் தகவல் தெரிவித்தான். மதராஸில் இருந்து கிளம்புகிறோம். இறைவனின் அருள் இருந்தால் மீண்டும் சந்திக்கிறேன் என எழுதி இருந்தான்.அதைப் பார்த்த மாமா கண் கலங்கினார்.
                  தொடரும்.

No comments:

Post a Comment