Thursday, November 28, 2019
கங்காரு தேசம் 4
தனிமை இல்லை.
Wednesday, November 27, 2019
கங்காரு தேசம் 3
Tuesday, November 26, 2019
கங்காரு தேசம். 2
Friday, November 8, 2019
சூடிதார் கனவுகள்
மீரா ஒரு நாள் கிரகப்பிரவேசம் ஒன்றிற்கு செல்ல வேண்டி இருந்தது.அவளுடைய தோழி ஆரப்பாளையத்தில் வீடு வாங்கி இருந்தாள்.அரை நாள் விடுமுறை எடுத்து விழாவில் கலந்து கொண்டாள். மதிய உணவிற்குப் பின்னர் கிளம்பினாள்.ஆட்டோவில் சென்றால் பணிக்கு செல்ல நேரம் சரியாக இருக்கும் என்று ஏறினாள். வண்டி கிராஸ் ரோட்டைக் கடந்தது.அவள் படித்த பள்ளி அங்கு தான் இருக்கிறது.காலாண்டுத்
தேர்வை காலையில் எழுதி முடித்திருந்த
மாணவிகள் பேருந்து நிறுத்தத்தில்
நின்று கொண்டு இருந்தனர்.சூடிதார்
அணிந்த அவர்களைப் பார்த்ததும் பழைய நினைவுகள் வந்தன.அப்பொழுதெல்லாம் ஒன்பதாம் வகுப்பில் கண்டிப்பாக பாவாடை, சட்டை , தாவணி தான் அணிய வேண்டும். கல்லூரியில் இரண்டாம் ஆண்டில் மூன்றாம் செமஸ்டர் தேர்வு
தேர்வு முடிந்த பிறகு சேலைதான் அணிய வேண்டும்.இப்போது எல்லாம் மாறிவிட்டது.
மாலையில் வீடு திரும்பியதும் மகளிடம்,"உமா நான் பத்து ஆண்டுகள் கழித்து பிறந்திருக்கக் கூடாதா?" என்றாள்.கல்லூரி மாணவியான அவள்," ஏம்மா?" என்றாள்." நானும் சூடிதார் போட்டிருக்கலாம்.சைக்கிள், டூ வீலர் ஓட்டி இருக்கலாம்." என்றாள் மீரா. " அம்மா, இப்போது கூட சூடிதார் போடலாம்.டூவீலர் ஓட்டக் கற்றுக் கொள்ளலாம்". என்றாள் மகள்." எனக்கு 50 வயதாகி விட்டது.இதெல்லாம் சாத்தியமே இல்லை." என்று பெருமூச்சுடன் மீரா கூறினாள்.அதைக் கேட்ட அவளது கணவன்," சூடிதார் போடலாம். டூவீலரில் பின்னால் உட்காரவே பயப்படும் உனக்கு அதை
ஓட்ட ஆசையா?" என்றார்.
. . ஆண்டுகள் சில கழிந்தன.மகன், மகள் இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டது.இருவரின் குடும்பங்களும் சென்னையில் இருந்தன.மதுரைக்கும், சென்னைக்கும் அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருந்தது.மதுரைக்கு வந்த மருமகள் கலா , " அத்தை, உங்களுக்கு ஒரு பரிசு வாங்கி வந்துள்ளோம்.அதை மறுக்காமல் அணிய வேண்டும்". என்றாள்.அது ஒரு சூடிதார்." ரயில் பயணத்தில் மிடில் பெர்த்தில் ஏற வசதியாக இருக்கும்." என்றாள்.அதை அணிய வைத்து ஒரு ஃபோட்டோ எடுத்துக் காட்டினாள்.ஒரே ஒரு முறை
ரயில் பயணத்தில் அதை அணிந்தாள்.பிறகு அது பீரோவில் பத்திரமாய் இருந்தது.
பணி ஓய்வு பெற்ற பின்னர் மீராவும், கணவர் ரகுநாதனும் வெளிநாட்டுப் பயணம் செல்ல விரும்பினர்.அமெரிக்காவில் இருந்த தம்பியின் அழைப்பை ஏற்று அங்கு செல்ல முடிவு செய்தனர்.மகள் உமா, மருமகள் கலா இருவரும் மீராவிடம்
விமானப் பயணம் செய்யும்போது சூடிதார் அணிந்தால் வசதியாக இருக்கும் என்றனர்.அந்த ஆடையில் முன்பின் அறியாத மக்களுடன் தான் பயணிக்கப் போகிறோம்.யாரும் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று தோன்றியது. முதலில் தயங்கினாலும் பின் அதை ஏற்றுக் கொண்டாள் மீரா.குடும்பத்தோடு பெயர் பெற்ற கடை ஒன்றிற்குச் சென்று பார்த்து, பார்த்து சூடிதார்களைத் தேர்வு செய்தனர்.அது மட்டும் அல்லாமல் ட்ரையல் ரூமிற்குள் சென்று போட்டும் பார்த்தாள்.கையை நுழைத்தால் தலையை நுழைக்க இயலவில்லை.தலையில் முதலில் மாட்டினால் கையை மாட்ட இயலவில்லை.மருமகள் உள்ளே வந்து போட உதவினாள். மீராவிற்கு சிரிப்பு தாங்கவில்லை." உன் கணவன் குழந்தையாக இருந்த போது தலை கொஞ்சம் பெரியதாக இருந்தது.அவனுக்கு வட்டக் கழுத்து உடைய பனியன் போட்டு விட இப்படித்தான் பாடுபட்டேன்". என்றாள் ஒரு வழியாக அதை அணியக் கற்றுக் கொண்டாள். திருமணப் புடவை எடுத்த போது கூட இப்படித் தேடவில்லை.முடிவில் மூன்று செட் சூடிதார்களுடன் வீடு திரும்பினார்கள்.
விமானத்தில் அதை அணிந்து பயணித்த போது உடல் மட்டும் அல்ல மனமும் சந்தோஷத்தில் பறந்தது.