Sunday, September 29, 2019

பயணம்


திருமண அழைப்பிதழ் ஒன்று மதுரையில் இருந்து கூரியர் அஞ்சலில் வந்தது.ஆவலுடன் பிரித்துப் பார்த்தாள் லெட்சுமி.அவளும், அவளது கணவனும்    எழுபது வயதைக் கடந்தவர்கள்.மகன் குடும்பத்தோடு தில்லியில் வசித்து வந்தனர்.மிக நெருங்கிய உறவினர் வீட்டுத் திருமணம்." ஏங்க! நம் சதாசிவம் மகள் திருமணத்திற்கு மதுரைக்கு போகலாமா?" என லெட்சுமி கேட்க  அவர் " மாலையில்  பிரவீன் வந்த உடன் பேசுவோம்". என்றார்.
                                          மகன் உள்ளே நுழைந்தவுடன்  லெட்சுமி  தன் விருப்பத்தைத் தெரிவித்தாள்.பிறந்து,
வளர்ந்து, வாழ்ந்த ஊருக்குச் சென்று வர  அம்மா விரும்பியதை பிரவீன் புரிந்து கொண்டான்." சரி அம்மா! திருமண நாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே ஃபிளைட் டிக்கெட்    எடுத்துவிடலாம்.திரும்புவதற்கு என்றைக்குப்  போடலாம்? "என்றான். "உன் அம்மாவிற்கு அவள் வீட்டு ஆட்களைப் பார்த்தால் திரும்ப மனம்
வராது.எனவே பிறகு பார்க்கலாம்". என்று கூறினார் அப்பா.அதுபோலவே
மகன் போவதற்கு மட்டும் டிக்கெட் புக் செய்து தந்தான்.
                               தம்பதியர் இருவரும் மதுரைக்கு வந்து சேர்ந்தனர். ஏர் போர்ட்
வாசலில் லெட்சுமியின்  தம்பியும் அவன் மகன் சுபாஷும்  காருடன் வந்து
வரவேற்றனர். திருமணத்திற்கு அனைவரும் சென்றனர்.பல ஆண்டுகள் கழித்து உறவினர்களை சந்தித்ததால்
மகிழ்ச்சியாக இருந்தது.கதைகள் பேசி
இன்பமாக பொழுது கழிந்தது.மீண்டும் தம்பியின்வீட்டிற்குவந்தனர்.        திருமங்கலம் சென்று   தங்கை
சுமதியின்  பிள்ளைகளைப் பார்க்க லெட்சுமி விரும்பினாள்."  நாளை என் மகன் ஷசாங்க்  வந்து விடுவான்.அவன் உங்களை கூட்டிக் கொண்டு போவான்" என்று கூறினான் சுபாஷ்." ஏன்? உனக்கு
வேறு வேலை இருக்கிறதா?" என்று கேட்க "இல்லை.உங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது". என்றான் தம்பி.
              மறுநாள் காலையில் ஷசாங்க்
வந்து விட்டான்.முப்பாட்டனார்கள் கந்தசாமி, சண்முகம்,சங்கர்  என நினைவில் வைத்திருக்க உதவியாக
இப்படி ஒரு பெயரை வைத்து இருந்தான் சுபாஷ்.                                                          ஷ, சண்முகம்,சாங், சங்கர்,க்(k), கந்தசாமி என்பதைக் குறிக்கும்.அவனைப் பார்த்ததும் அப்படியே இளவயது சுபாஷ் போன்று இருந்தது." வாங்க ஆச்சி, வாங்க தாத்தா" என வரவேற்றான்.
குனிந்து இருவரின் பாதங்களைத்  தொட்டு வணங்கினான். இந்தியன் ஏர்லைன்ஸில் பைலட் பணியில் இருந்தான்.அந்த சீருடையில் பார்க்க பிரமிப்பாய்  இருந்தது." சற்று நேரத்தில் உடை மாற்றிவிட்டு  வருகிறேன்.
ஹெலிகாப்டரில் திருமங்கலம் செல்லலாம்" என்று கூற லெட்சுமி திகைத்து நின்றாள்.சுபாஷ்," சில நாட்களுக்கு முன் வாங்கினோம்.
ஹெலிகாப்டர் சர்வீஸ் தொடங்கப் போகிறோம்". என்றான்." அப்படியா ? நாம்போகஹெலிபேட்உள்ளனவா?" என்று கேட்டதும் " ஆமாம், இங்கு நாவலர் நகரில் உள்ளது.திருமங்கலம் புதிய பேருந்து நிலையம் அருகே எல்லா வசதிகளும் உள்ள ஹெலிபேட் இருக்கிறது." என்றான் ஷசாங்க்.சிறிது நேரத்தில் ஹெலிபேட் செல்ல புதிய ஹெலிகாப்டரைக் காட்டினான். லெட்சுமியும் அவள் கணவரும் ஏற ஹெலிகாப்டரின் புரபெல்லர் சுழலத்
தொடங்கியது.வட்டமிட்டு மேல் ஏறத் தொடங்கியது.மாமாவின் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்றது, கணவருடன் பைக்கில் சென்றது, சுபாஷ் காரில் சென்றது என ஒவ்வொன்றாக நினைவில் வந்தது. "உன் அப்பா காரை ஓட்ட கற்றுக்
கொண்ட பின் அவனுடன் காரில் அடிக்கடி பயணம் செய்திருக்கிறோம்.
இன்று நீ ஹெலிகாப்டரில்  கூட்டிச் செல்கிறாய்.மிக சந்தோஷமாக உள்ளது." என்றாள் லெட்சுமி.              பயணம் தொடர்ந்தது.

                
    

Sunday, September 22, 2019

முன்னாள் மாணவன்.


அதிகாலை நேரத்தில் எஃப்.எம்.ரேடியோ  சுப்ரபாதம் பாடிக் கொண்டு இருந்தது. பணி ஓய்வு பெற்ற ஆசிரியை சாரதா
மருமகளுக்கு உதவியாக காய்கறி நறுக்கிக் கொண்டே பாடலை  முணுமுணுத்துக் கொண்டு இருந்தாள். எல்லா வேலைகளும் முடிந்தன.மகன், மருமகள்,பேத்தி என எல்லோரும் கிளம்பி விட்டனர்.கணவரின் கையில் "இருந்த செய்தித்தாளைப் பார்த்தாள்.
ஏங்க, அந்தப் பேப்பரை எனக்குக் கொடுங்கள்.எவ்வளவு நேரமாக வைத்துக்கொண்டு இருக்கிறீர்கள்?" என்று கேட்க அவர்  சாரதாவின் கையில்
கொடுத்தார்.அவள் வாசிக்க ஆரம்பித்தாள் .தமிழகத்தின் புதிய பொதுப் பணித் துறை அமைச்சராக திரு.புகழேந்தி பாண்டியன் பொறுப்பு ஏற்கப் போவதாக ஒரு செய்தி வெளியாகியிருந்தது.அவர் மதுரையில் பிறந்தவர்.மேலும் பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வியை மதுரையில் படித்தவர் என்றும் குறிப்பிடப் பட்டிருந்தது.சாரதாவிற்கு அவரது பெயர்
நன்கு தெரிந்ததாய் தோன்றியது. நம்
பள்ளியில்  படித்திருப்பானோ என்று
நினைத்தாள்.உடனே ஓய்வு பெற்ற
தலைமை ஆசிரியை திருமதி.சரஸ்வதியைஅலைபேசியில்
தொடர்பு கொண்டாள்."வணக்கம்.அம்மா நன்றாக இருக்கிறீர்களா?"என்று கேட்டதும்" சாரதா! எப்படி இருக்கிறீர்கள்?" என்று கேட்க பேச்சு
தொடர்ந்தது." இன்று செய்தித் தாளில் புகழேந்தி பாண்டியன் பற்றி வந்த செய்தியைப் படித்தீர்களா?"என்றதும்
"ஆமாம். நம் பள்ளியின் பழைய பையன் மாதிரி தான் உள்ளது.இனிமேல் செய்திகள் வந்தால் தெளிவாகத் தெரியும்." என்றார் சரஸ்வதி." ஏப்ரல் மாதம் மதுரைகலெக்டர் அலுவலகத்திற்கு நீங்கள் போகும் போது சொல்லுங்கள்.நானும் வருகிறேன் ." என்றாள் சாரதா." நானும், சீதாவும் பத்தாம் தேதி போகலாம் என முடிவு செய்திருக்கிறோம்."என்று கூறிய
உடன் " சரி.நானும் சென்னையில் இருந்து வந்து விடுகிறேன். " என்றாள்
சாரதா.ஓய்வு பெற்ற ஆசிரியைகள்
அறிவுமதி, முத்தம்மாள், ஈஸ்வரி என்பவர்களுடனும்  அலைபேசியில்
பேச அனைவரும் மஸ்டர் ரோல், அதாவது நேர்காணலுக்கு ஒரே நாளில் செல்ல முடிவு செய்தனர்.
                   ஏப்ரல் பத்தாம் நாள்  கருவூல அலுவலகத்தில் அனைவரும் சந்தித்தனர்.  முதலில் அறிவுமதியும்,
ஈஸ்வரியும் வந்து பேசிக்கொண்டு
இருக்க, சற்று நேரத்தில் முத்தம்மாளும்
சாரதாவும் சேர்ந்து கொண்டனர்.சிறிது
நேரத்தில்  தலைமை ஆசிரியையாக
இருந்த சரஸ்வதி அம்மாளும், சீதாவும்
காரில் வந்து இறங்கினர்.ஆறுபேரும்
அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
" காலை பதினோரு மணிக்கு மேல் தான் ஓய்வூதியர்கள் உள்ளே அழைக்கப் படுவார்கள்.கணினியை
சரி செய்ய வேண்டியுள்ளது". என ஒருவர்  வந்து கூறிச்
சென்றார்.ஆசிரியைகள் ஆறு பேரும்
நீண்ட வராந்தாவில் அமர்ந்தனர்.
புகழேந்தி பற்றி பேச ஆரம்பித்தனர்.
" அவர் மிக கண்டிப்பாக இருக்கிறாராம்.பொதுப் பணித் துறை வேலைகள் அனைத்தும் மிக நன்றாக
நடக்கின்றன.ஊழல் என்பதே நடக்க  வாய்ப்பு இல்லையாம்." என்றார் முத்தம்மாள்." ஆமாம்.வேலை நடக்கும் இடங்களைப் பார்வையிட முன்னறிவிப்பு இன்றி வந்து விடுகின்றார் என செய்திகள் வருகின்றன". என்றார் சீதா." அம்மா, அவர் நம் பள்ளியில் படித்தவர்தான்" என உறுதியாகச் சொன்னார் அறிவுமதி.சரஸ்வதிஅம்மாள், "எப்படி
உறுதியாகக் கூறுகிறாய்?" எனக் கேட்க பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர்
நடந்த ஒரு நிகழ்ச்சியை விவரித்தார்.கண் முன் காட்சி விரிந்தது.
                    பிப்ரவரி 28 ஆம் நாள் பள்ளியில் அறிவியல் கண் காட்சி நடந்தது.மாணவ, மாணவியர் படைத்திருந்த  காட்சிப் பொருட்கள்
அனைவரையும் கவர்ந்தது.சிறப்பு விருந்தினராக  அறிவியல் பேராசிரியர் ஒருவர் அழைக்கப் பட்டிருந்தார்.அவர்
பார்வையிட்டு முடித்த பின் குழந்தைகளிடம் உரையாற்றினார்.பின் மாணவர்களிடம்  " நீங்கள் எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறீர்கள்?" எனக் கேட்டார். போலீஸ், படைவீரர், மருத்துவர், இஞ்சினியர், அறிவியல் ஆராய்ச்சியாளர் என்று பலர் பதில் தந்தனர். ஒரு மாணவன் மட்டும் அரசியல்வாதி என்று கூற அவனை மேடைக்கு அழைத்தனர்." தம்பி! நீ ஏன் அரசியல்வாதியாக விரும்புகிறாய்?" என்று கேட்க அவன் பதில் கூறினான்.
" அரசியல் ஒரு சாக்கடை என்று கூறுகின்றனர்.அதில் இறங்கி சுத்தம் செய்ய நினைக்கிறேன்". உடனே தலைமை ஆசிரியை  எழுந்து நின்று
" இவன் அரசியல்வாதியாக சரியான
ஆள் தான்.ஏனெனில் இந்த ஆண்டு 
எட்டாம் வகுப்பில் இவன் பெயர் ‌ஒரு பிரிவில் இருக்கிறது.ஆள் வேறு பிரிவில் இருந்தான்.கூப்பிட்டு விசாரித்த போது எனக்கு இந்த
பிரிவும் பிடிக்கவில்லை என்று ஒரு மணி நேரம் நின்று சாதித்து விட்டான்.
இப்போது அவனுக்குப் பிடித்த  மூன்றாவது பிரிவில்  படிக்கிறான்". என்றார்.கூட்டத்தினர் பலமாக கை தட்டினர்.அந்த மாணவன் தான் புகழேந்தி பாண்டியன் என்றார் ஆசிரியை அறிவுமதி.மீதி ஐவரும் அதை ஏற்றுக் கொண்டார்கள். நேர் காணல் முடிந்து வெளியே வந்தனர்.
                    அலுவலகத்தில் ஒரே பரபரப்பு. போலீசார்  ஆங்காங்கே  நின்று கொண்டு இருந்தனர்.ஒருவரிடம்
என்ன என்று விசாரிக்க "பொதுப் பணித் துறை அமைச்சர் வந்து கொண்டு இருக்கிறார் " என பதில் கிடைத்தது.சில நிமிடங்களில் பாதுகாப்பு போலீசார் வண்டி வர ,  பின்னால் சைரன் பொருத்தப் படாத  தனது சொந்த காரில் வந்தார்.உள்ளே நுழையும் போதே 
அமைச்சர் ஆசிரியைகளைப்  பார்த்து
விட்டார்.அவர்கள் அருகில் கார் நின்றது.அமைச்சர் கூப்பிய கரங்களுடன் இறங்கினார்." டீச்சர் வணக்கம் .  உங்களை எல்லாம் பார்த்ததில்  எனக்கு மிக மகிழ்ச்சி.எல்லோரும் நன்றாக  இருக்கிறீர்களா?" எனக் கேட்டார். " நீ சொன்ன மாதிரியே அரசியல்வாதியாகி
விட்டாய்.மிக்க மகிழ்ச்சி. சிறப்பாக பணி தொடர  வாழ்த்துக்கள்". என்றார் சரஸ்வதி.அதற்குள் கலெக்டர்  வந்து வரவேற்க ஆசிரியைகளிடம் விடை
பெற்றார் அமைச்சர் திரு.புகழேந்தி பாண்டியன்.  ஓய்வு பெற்ற அந்த ஆசிரியைகள் மன நிறைவோடு
கிளம்பினார்கள்."  மீண்டும் அடுத்த ஆண்டு , இதே ஏப்ரல் மாதத்தில் ,இதே இடத்தில் சந்திப்போம்." என்று வானொலி  அறிவிப்பாளர் போல சாரதா அறிவிக்க அனைவரும் சிரித்தனர். பிரியா விடை பெற்று அவரவர் ஊர்களுக்குச் சென்றனர்.
            
  

       

Tuesday, September 17, 2019

அந்த மனம்

                அன்று விடுமுறை நாள் என்பதால் பிள்ளைகள் ஏழு  மணி ஆகியும் படுக்கையை விட்டு எழுந்து கொள்ளவில்லை.வேலைக்குச் செல்லும் அம்மா என்பதால் சுந்தரி அன்று தான் வீட்டை சுத்தம் செய்ய, துணி துவைக்க ,மாவு அரைக்க  என பல வேலைகள் செய்ய வேண்டும்.நல்ல வேளையாக இந்த சனிக்கிழமை விடுமுறை கிடைத்தது. இன்று   வேலைகளை முடித்துவிட்டால்  நாளை ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்துக் கொண்டே பரபர என இயங்கினாள்.
வெளியே அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த நடராஜன் குரல் கொடுத்தார்.சுந்தரி! வழக்கம்போல காலையிலேயே சமைத்து விடு.அப்பா
வருவதாகச் சொல்லி இருக்கிறார்.
சரிங்க என்றாள் சுந்தரி.                                                   சுந்தரிக்கு
மாமனார் மீது ஒரு மரியாதை இருந்தது.மூன்று குழந்தைகளை விட்டு விட்டு மனைவி இறந்து போக அவர் தனியாளாக வளர்த்து படிக்க வைத்து நல்ல வேலைகளில் அமரவும் செய்து விட்டார்.திருமணத்தின் போது எதுவும் கேட்கவில்லை.உங்கள் பெண்ணிற்கு
நீங்கள் செய்ய விரும்புவதைச் செய்யுங்கள் என்று கூறி விட்டார். அவருடைய கிராமத்தில் அவருக்கு நல்ல பெயர் இருந்தது.விவசாயி என்றாலும் அக்காலத்தில் ஓரளவு படித்தவர் அவர் மட்டுமே.எல்லோருக்கும் நல்ல உதவிகள் செய்தார்.விவசாயக்
கடன் பெற வங்கிக்குச் செல்லும் போதும், பத்திரப் பதிவு செய்யவும் அவரை அழைத்துச் செல்வார்கள்.எந்த பிரதி பலனையும்  ஏற்க மாட்டார். சுந்தரி ஒரு தனியார் பள்ளியில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்து கொண்டு இருந்த போது உனக்கு நல்ல அரசு வேலை கிடைக்கும் என்று உறுதியாகச் சொன்னார்.அவர் சொன்னது போலவே நடந்து விட்டது.உதவி என்று கேட்டவர்களுக்கு தயங்காமல் உதவுவார்.காலை பத்து மணிக்கு இரண்டு கைகளிலும் கனத்த படைகளுடன் வந்து சேர்ந்தார்
தாத்தா என்று பேரனும், பேத்தியும் ஓடி காலைக் கட்டிக் கொண்டனர்.ஒரு பையில் அரிசி இருந்தது.நம் வயலில் விளைந்தது என்று கூறினார்.இன்னோர் பையில் தோட்டத்தில் விளைந்த காய்கறிகள் இருந்தன.இனிமேல் இப்படி கனத்தை சுமந்து கொண்டு வரவேண்டாம்.நாங்கள் வரும் போது எடுத்துக் கொண்டு வருகிறோம் என்றார் நடராஜன். நான் பெருமாள் கோயிலுக்குச் செல்ல வேண்டும்.இன்று புரட்டாசி சனிக்கிழமை என்று பெரியவர் கூறினார்.உங்களுக்காக சமையல் செய்து விட்டேன்.சாப்பிட்டுவிட்டு போகலாம் என்று கூறி உட்கார வைத்தாள்.பெரியவர் சரிம்மா என்று அமர்ந்தார்.சாப்பிட்டுக் கொண்டு இருந்த போது வெளியே வெங்கட் ராமா ! கோவிந்தா! என குரல் கேட்டது.யாசகம் கேட்டவருக்கு அரிசி போட நினைத்த சுந்தரி பையில் இருந்த அரிசியை எடுத்தாள்.பெரியவர் அதை எடுக்காதே.வீட்டில் வாங்கி வைத்திருக்கும் அரிசியைப் போடு என்றார்.சுந்தரிக்கு என்னவோ போலாகிவிட்டது. வாங்கி வைத்திருந்த அரிசியை போட்டு விட்டு வந்தாள். இந்த வருடம் நெற்பயிருக்கு குலை நோய் வந்து விட்டது.ஏகப்பட்ட மருந்து தெளித்து விளைந்திருக்கிறது .           ‌ ‌   ‌‌எனவே தான் நல்ல அரிசியை போடச் சொன்னேன் என்று கூறிய பெரியவர் சுந்தரியின் மனத்தில் உயர்ந்து நின்றார்.       
                  
             

Friday, September 13, 2019

கண்ணாடி

துள்ளித் திரிந்த பள்ளிப் பருவம். மதிய உணவு  இடைவேளையில் எனது ஆச்சியும் ஆசிரியையும் ஏதோ பேசிக் கொண்டு இருந்தனர்.சற்று நேரத்தில் ஆச்சி கண்ணீருடன் என் அருகில் வந்தார்.என்னாயிற்று ஆச்சி? எனக் கேட்டேன். உன்னை கண்ணாடி போடச் சொன்னார்கள்.நீ கண்ணாடி போட்டால் உனக்கு கண் தெரியாது என்று எல்லோரும் கூறுவார்கள். மாப்பிள்ளை கிடைப்பது கடினம் என்று கூறினார். எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்த எனக்கு அவர்களின் கவலை புரியவில்லை.
மறுநாள் அப்பாவும் நானும்  கண் மருத்துவரிடம் சென்றோம். கண்ணாடி
போடத் தொடங்கினேன்.அது என்னுடைய அடையாளம் ஆகியது.கண்ணாடி போட்ட மாணவி,கண்ணாடி போட்ட பெண்,
கண்ணாடி போட்ட அம்மா,கண்ணாடி போட்ட ஆசிரியை, கண்ணாடி போட்ட
ஆச்சி என பருவங்கள் கடந்தன.
அம்மா,கண்ணைத் திறங்கள் என்ற
மருத்துவரின் குரல் கேட்டு கண் விழித்தேன்.கண் புரை சிகிச்சை முடிந்தது. விழிலென்ஸ் பொருத்தி விட்டோம். இனி கண்ணாடி அணியத்
தேவை இல்லை. படிக்கும் போது மட்டும்
போடுங்கள்என்று கூறினார். நன்றி கூறி விட்டு வெளியில் வந்தேன்.
வீட்டுக்கு வந்து முகம் காட்டும் கண்ணாடி முன் நின்றேன். ஆச்சியின்
நினைவு வந்தது. கண்ணாடி இல்லாத
கந்தம்மாளைக் கண்டு மகிழ ஆச்சி
இல்லையே எனக் கலங்கி நின்றேன்.
நரைத்த முடியும், சற்றே எற்றிய  முன் பற்களும் ஆச்சி உனக்குள் தான்  இருக்கிறாள் என்றன.

வாழ்க வளமுடன்.

வணக்கம்.