Saturday, May 8, 2021

மங்கையர்க்கரசி மங்கைகள் ஷீரடியில்.

வாழ்க வளமுடன்.  சாய் பாபாவின் பாதம் பணிந்து இந்தப் பயணக் கட்டுரையைத் தொடங்குகிறேன்.                      ஒரு மாலை நேரம் பள்ளியின் பணி நேரம் முடிந்து அனைவரும் மெயின் ஹாலில் ஒன்று கூடினோம்.எங்கள் தலைமை அன்னை (தாளாளர் அம்மா) அவர்கள் எங்களுடன் வந்து அமர்ந்தார். ஆசிரியைகள் தங்கள் வகுப்புகளில் நடந்த மாணவர்களின் குறும்புகள், முக்கிய நிகழ்வுகள் ஆகியவற்றைக் கூறிக் கொண்டு இருந்தனர். தலைமை ஆசிரியை திருமதி.கீதா சரஸ்வதி அவர்கள் சிரித்த முகத்துடன் உள்ளே வந்தார். "உங்கள் அனைவருக்கும் ஒரு சந்தோஷமான செய்தி." என்றார்.என்ன சொல்லப் போகிறார் என்ற ஆர்வத்துடன் முகத்தைப் பார்த்தோம்." நாம் ஷீரடிக்குப் போகலாம் என நினைக்கிறேன்" என்றார். ""போகலாம்  அம்மா" என பல  குரல்கள் எழுந்தன.  தலைமை அன்னை ' விளையாட்டாகச் சொல்கிறாயா? நிஜமாகவே கூட்டிக் கொண்டு போகிறாயா?" என்றார். "நிஜமாகவே  சொல்கிறேன். மதுரையில் இருந்து சென்னை வரை பேருந்திலும் ,சென்னையில் இருந்து மும்பை வரை விமானத்திலும், மும்பையில் இருந்து ஷீரடி வரை பேருந்திலும் பயணம் செய்யலாம். முதல் நாள் மாலை கிளம்பினால் மறுநாள் ஷீரடியை அடைந்து விடலாம்.அன்று மாலையிலும் மறுநாள் காலையிலும் பாபாவைத் தரிசிக்கலாம்.பின்னர் கிளம்பி அதே போல் திரும்பி விடலாம்  என நினைக்கிறேன்.வெள்ளிக் கிழமை மாலையில் கிளம்பி திங்கட்கிழமை அதிகாலை மதுரைக்கு வந்து விடலாம்." என்றார். "உங்கள் பயணத் திட்டம் அருமை அம்மா." என்றோம் நாங்கள். " நீங்கள் அனைவரும் வீட்டினரிடம் கலந்து பேசுங்கள். உங்களது வாழ்க்கைத் துணை, குழந்தைகள் வர விரும்பினால் அவர்களும் வரலாம்." என்றார். அம்மா அவர்களுக்கும் ஏக சந்தோஷம். மும்பையைப் பார்க்கலாம்.ஷீரடியில் பாபாவைத் தரிசிக்கலாம் என்று சந்தோஷம்  அடைந்தோம். எங்களில் பலர்  விமானத்தில் பயணம் செய்ததில்லை. எனவே மனம் கற்பனையில் சிறகடித்துப் பறந்தது.மறுநாள் காலை பள்ளியில் நுழையும் பொழுதே ஒவ்வொருவரின் முகத்திலும் ஆயிரம் வாட்ஸ் பல்பு  ஒளிர்ந்தது.நான் வருகிறேன்.நீ வருகிறாயா? என ஒருவருக்கு ஒருவர் கேட்டுக்  கொண்டோம். அவரவர்  வகுப்புகளுக்குச் சென்று விட்டோம்.மாலை 4.30 க்கு மெயின் ஹாலில் கூடினோம்.   சுற்றுலா பற்றி சலசல என்று  ஒரே பேச்சு.தன் அறையில் இருந்து தலைமை ஆசிரியை  வந்து எங்களுடன்  அமர்ந்தார். " என்னம்மா?  யார் எல்லாம் வருகிறீர்கள்?" என்றார். ஒரு ஆசிரியை  பேப்பர் பேனாவோடு எழுந்தார்." பெயர்களை நான் எழுதித் தருகிறேன்" என்றார்.  அம்மா "என் பெயரை மறக்காமல் எழுதுங்கள்" என்றார்."நீங்கள் இல்லாமலா அம்மா?"எனக் கூறினார் ஒரு ஆசிரியை.உற்சாகமாக எழுந்து  பெயர்களைக்  கூறினோம்.சிலர் வாழ்க்கைத் துணைவர், குழந்தைகள் பெயர்களையும்  கூறினார்கள். மங்கையர்க்கரசி மங்கைகள் மட்டும் அல்ல அவர்களின் உடன்பிறவா  சகோதரர்களாகிய ஆசிரியர்களும் சுற்றுலாக் குழுவில் இருந்தனர். தலைமை ஆசிரியை  உரிய ஏற்பாடுகள்  செய்வதாகக் கூறினார்கள். கிளம்பும் நாளை  எதிர்நோக்கிக்  காத்திருந்தோம்.                       தொடரும்.

4 comments:


  1. வாழ்க வளமுடன் டீச்சர் பயணக் கட்டுரை மிக மிக அருமை!படிக்க படிக்க ஆர்வமாக உள்ளது. உங்கள் பயண கட்டுரை தொடர எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி.வாழ்க வளமுடன்.

      Delete
  2. கந்தம்மாள் டீச்சர் உங்கள் கட்டுரையை படிக்க ஆரம்பித்தவுடன் மலரும் நினைவுகள்.ஷீர்டி புறப்பட தயாராகி விட்டேன்.அதிக ஆனந்தம்+ எதிர்பார்ப்புடன். Very interesting.

    ReplyDelete
  3. நன்றி.வாழ்க வளமுடன்.

    ReplyDelete