Saturday, February 20, 2021

ஒரு இந்திய தேசிய ராணுவ வீரனின் கதை 15

இந்திய தேசிய ராணுவ வீரர்கள் உற்சாகம் அடைந்தனர். ஆடலும்,பாடலும் களை கட்டியது. அனைவருக்கும் சிறையில் இருந்து 
விடுவிக்கப் பட்டதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அவர்கள் பார்த்த வேலைக்கான சம்பளமாக சிறிதளவு பணமும் கொடுக்கப் பட்டது. சிறை அதிகாரிகளிடம் நன்றி கூறி விடை
பெற்றனர்.பர்மாவின் காடுகள் வழியாக நடந்தனர்.ஆங்கிலேயப் படை வீரர்களாய் அங்கு வந்ததையும், ஓராண்டுக்குப் பிறகு நேதாஜியின் தலைமையில் போரிட்டதையும் நினைவு கூர்ந்தனர். ஆங்காங்கே  கட்டிட இடிபாடுகளையும் கண்டனர். குண்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரைகுறையாய் எரிந்த மரங்கள் போருக்குச் சாட்சியாய் நின்றன.மாட்டு வண்டிகள்,குதிரை வண்டிகளில் சென்றவர்கள் தங்களுடன் வருமாறு அழைத்தபோது பிரிய மனமின்றி மறுத்து விட்டனர்.சிறு கிராமங்களின் வழியே சென்றபோது தேவையான உணவுப் பொருட்களை விலைக்கு  வாங்கி சமைத்து உண்டனர். மணிப்பூரின் எல்லையில் காலை வைத்ததும் ஆனந்தக் கூத்தாடினர்.மண்ணில் விழுந்து புரண்டனர்.பாரத் மாதா கி ஜய் ,ஜய்ஹிந்த் என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது.தங்களுடைய ராணுவச் சீருடையில் கம்பீரமாக வந்த அவர்களைப் பார்த்த கிராமத்தினர் உற்சாகமாக வரவேற்றனர்.வைத்திய நாதன் ஒரு பெரியவரிடம்,"எங்களைப்
பற்றித் தெரியுமா?எனக் கேட்டான். அவர்,"எங்கள் ஊரில் ஒரு ரேடியோப் பெட்டி உள்ளது.அதில் நேதாஜி பேசியதைக் கேட்டிருக்கிறோம்.அது
மட்டுமல்ல BBC யில் உங்களைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள ஒரு  தொடர் நிகழ்ச்சி நடத்தினர் இங்கிலீஷ் தெரிந்த இந்தப் பையன் தான் எங்களுக்குச் சொல்வான்." என்றார்.அவர் காட்டிய பையனுடன் கை குலுக்கினான் மருதவாணன். "அந்த நிகழ்ச்சியை ஆங்கில அரசு தடை செய்து விட்டது.எனவே கொஞ்சம் தான் கேட்டோம்."என்றான்
அந்தப் பையன்.பிறகு அங்கிருந்து கிளம்பினார்கள்.முஸ்லிம் வீரர்கள் நிறைய இருந்தனர்.மேற்கு பாகிஸ்தான் வழியாகத் தான் நடந்து வந்தனர்.எல்லோரும் மத வேறுபாடின்றி அவர்களை விடுதலை வீரர்கள் என நன்றாக நடத்தினர். கல்கத்தா நகரம் வந்து விட்டது. ட்ராம் வண்டிகள் ஓடிக் கொண்டிருந்தன. இனி  அவரவர் ஊர்களை நோக்கிச் செல்ல வேண்டும்.கைகுலுக்கிப் பிரியாவிடை  பெற்றனர். அவர்கள்  குழுவில் தமிழர்கள் பத்து பேர் இருந்தனர்.அதிலும் 6 பேர் மதுரை   மற்றும் மதுரையை ஒட்டியுள்ள ஊர்களைச் சேர்ந்தவர்கள்.தேநீர் அருந்த ஒரு கடையில் அமர்ந்தனர். அதை ஒரு மலையாளி நடத்தி வந்தார்.எவ்வாறு மதுரைக்குச் செல்வது எனப் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டார். "பாண்டி  நாட்டுக்கா? சேச்சா!ஞான் ஒன்னு  பறையும். பறையட்டா?" என்றார்."பறையும்". என்றான் மருதவாணன். கல்கத்தாவில் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் கனரக வாகனங்களுக்கான  எஞ்ஜின் தயாரிப்பதாகவும் வசதி படைத்தவர்கள் அதை வாங்கி மதராஸ் நகரில் புதிதாகத் துவங்கப் பட்டுள்ள அசோக் மோட்டார்ஸ் கம்பெனிக்கு கொண்டு சென்று வாகனங்களாக மாற்றுவார்கள் என்றும் அவர் கூறினார்.டிரைவர் இருக்கை மட்டுமே இருக்கும். சக்கரங்கள் பொருத்தப்பட்ட  நீள் சதுர இரும்பு எஃகு சட்டங்கள்  இருக்கும் என்றும் அவை மதராஸ் செல்லும் என்றும் அவர் தெரிவித்தார். அவருக்கு நன்றி கூறி சில நாட்கள் தங்கினர்.எதிர்பார்த்த அந்த மோட்டார் வாகனம் வந்தது.
அதன் ஓட்டுநரிடம் மருதவாணன் "ஐயா,நாங்கள் INA வீரர்கள்.மதராஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். எங்களை அழைத்துச் செல்ல முடியுமா?"எனப் பணிவுடன் கேட்டான்.அவரும் ஒத்துக் கொண்டார். தபால்,தந்தி முறை ஏற்கனவே வந்து விட்டது.குறிப்பிட்ட சில இடங்களில்  மட்டும் பேருந்து வசதியும்,  ரயில் போக்குவரத்து வசதியும் இருந்தன.பர்மாவில் இருந்த போது தங்கள் குடும்பங்களோடு தொடர்பு கொள்ளமுடியாமல் தவித்தனர். இப்போது ஒரு போஸ்ட் கார்டில் தாங்கள் வருவதாக எழுதி அனுப்பினர்.மொட்டை வண்டியின் ஃபிரேம் பகுதி  உட்கார மிகச் சிறியதாகத் தான் இருந்தது.  சாய்மானம்,பிடிமானம் ஏதும் இல்லை. ஒரு கயிறால் கால்களை ஃபிரேமில் கட்டிக் கொண்டனர்.பல  நாட்கள் கழித்து மதராஸ் வந்து சேர்ந்தனர். மாட்டு வண்டி,குதிரை வண்டி என கிடைத்த வாகனங்களில் பயணம் செய்தனர். நீண்ட தூரம் செல்லக் கூடிய பேருந்துகள் இல்லை.ஒரு வழியாக மதுரை வந்து  விட்டனர். மருதவாணன் தன்னுடைய முகவரியைக் கொடுத்து கடிதம் எழுதச் சொன்னான்.பிரிய மனமின்றிப் பிரிந்தனர்.         மாமாவின் பழைய வீட்டிற்குச் செல்ல அங்கு யாரோ இருந்தனர்.ஆனால் அவர்கள்,"வாங்க! மிலிட்டரித் தம்பி." என வரவேற்றனர்.மாமா வீட்டிற்குக் கூட்டிச் சென்றனர்.38/39, சைவாள் காம்பௌண்ட் ,மணிநகரம் என்று  பெயரிடப்பட்ட  கட்டிடத்திற்குள்  நுழைந்தனர். இரு புறமுமாக 25 வீடுகள் இருந்தன. ஒரு பையன்,"பட்டாளத்து மாமா வந்து விட்டார்".என்று குரல் கொடுக்க அத்தனை வீடுகளிலும் இருந்த ஆண்களும், பெண்களும், குழந்தைகளும்   ஓடி வந்துவிட்டனர். அத்தையும், பக்கத்து வீட்டு அம்மாவும் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அனைவரும் அன்புடன் விசாரித்தனர்.மாமா,"வைத்தியநாதா!  வந்து விட்டாயா?உன்னைப் பற்றி எவ்வளவு கவலைப்பட்டோம் தெரியுமா?  உன் கடிதத்தைப் படித்த பின்தான் நிம்மதியாய் இருந்தது."என்றார். மறுநாளே அக்கா,கணவர் மற்றும் குழந்தைகளுடன் பார்க்க வந்து விட்டாள்.மாமா கடிதம் எழுதியதாகவும்,நெல்பேட்டைக்கு வந்த வண்டியிலே அத்தானுடன் வந்து விட்டதாகவும் கூறினாள். மதுரையில் ஸதர்ன் ரோட்வேஸ் என்ற பெயரில்  இயங்கிக் கொண்டிருந்த T.V.S பேருந்து நிறுவனத்திற்கு  ஓட்டுநர்கள் தேவை என விளம்பரம்
வந்தது.மருதவாணன் தற்செயலாக வைத்தியநாதனைப் பார்க்க மதுரைக்கு வந்தான். நண்பர்கள் இருவரும்  பணிக்கு விண்ணப்பித்தனர். இருவருக்குமே 
ஓட்டுநர் பணி கிடைத்து விட்டது. 
மாமாவின் மகள் லெட்சுமியைக் கரம் பிடித்தான். ஓய்வு நேரத்தில்அவர்கள் குடியிருப்பில் இருந்த சிறுவர், சிறுமியர்களுக்கு நேதாஜியின் வீரதீரச் செயல்கள் பற்றி கதைகதையாய்க் கூறுவான்.  "மிலிட்டிரி மாமா! ஆங்கிலேயருடன் எப்படி சண்டை போட்டீர்கள்?உங்களுக்கு நிஜமாகவே துப்பாக்கியால் சுடத் தெரியுமா?நேதாஜியை நேரில் பார்த்திருக்கிறீர்களா?" என்று அவர்கள் கேள்வி மேல் கேள்வி கேட்க பதில் கூறினான். சின்னஞ்சிறு குழந்தைகளின் மனதில் நேதாஜியை பதியச் செய்தான். தேசபக்தியையும் வளர்த்தான்.மருதவாணனுக்கும்  திருமணம் முடிந்தது.நண்பர்கள் இருவரும் தங்கள் மனைவி,  குழந்தைகளோடு சுதந்திர இந்தியாவில் மக்களோடு மக்களாய்  மக்களாட்சி   மலர்ந்த பாரதத்தில் வாழத் தொடங்கினர். 
                        முற்றும்.

No comments:

Post a Comment