Wednesday, February 10, 2021

ஒரு இந்திய தேசிய ராணுவ வீரனின் கதை 13.

போர்க் கைதிகள் அனைவரையும்    பர்மாவில் இருந்த விமான நிலையத்தின் விரிவாக்கப் பணியில்  அமர்த்த ஆங்கில அரசு உத்தரவிட்டது.இரண்டாம் உலகப் போருக்காக அந்த விமான நிலையத்தில் சிறிய அளவில் எல்லா வசதிகளும் ஏற்படுத்தப் பட்டிருந்தன. காலை உணவு சாப்பிட்டவுடன் மதிய உணவை ஈயத்தூக்கு வாளியில் வாங்கிக் கொண்டு கிளம்ப வேண்டும்.  இருட்டாகும்  வரை வேலை பார்க்க வேண்டும். கடுமையாக  வேலை வாங்கினார்கள்.ஒரு நாள் வைத்தியநாதன் சமையல் செய்து கொண்டிருந்த இடத்திற்கு தற்செயலாக வந்தான்.பெரிய பாத்திரத்தில் தண்ணீர் கொதித்துக் கொண்டிருந்தது.அரிசியில் புழுக்களும்,வண்டுகளும் இருந்தன. பெயருக்கு ஒரு தடவை தண்ணீரில் கழுவி சமையல்காரர் உலையில் போட அவை மிதந்தன. கொதித்து எழுந்தான் வைத்தியநாதன். "அரிசியை  நன்றாக சுத்தம் செய்து போடு.நாங்கள் சாப்பிடுவதா?வேண்டாமா?"என்று கேட்டான். சமையல்காரனோ,"உங்களுக்கு புண்ணியத்துக்கு சமைத்துப் போடுகிறோம். வாயை மூடிக் கொண்டு போ" என்றான். அதற்குள் மருதவாணனும் வந்து விட்டான். "என்ன?புண்ணியத்துக்கு சமைக்கிறாயா? நாங்கள் சும்மா உட்கார்ந்து சாப்பிடவில்லை. காலையில் இருந்து இருட்டும் வரை 
வேலை பார்க்கிறோம்.அரசாங்கம் உனக்கு  எங்களுக்கு சமைத்துப் போட சம்பளம் கொடுக்கிறது."என்று மருதவாணன் சத்தம் போட்டான்
அதற்குள் வீரர்கள் சேர்ந்து விட்டனர்.ஒருவர், "சமையலுக்கு ஆள் வேண்டாம்.நாங்களே சமைத்துக் கொள்கிறோம் என்று வார்டனிடம்
சொல்லி விடுவோம்". என்றார். அவ்வளவுதான் சமையல்காரன் "அய்யா! நான் பிள்ளைகுட்டிக்காரன் என்னை வேலையில் இருந்து தூக்கச் செய்து விடாதீர்கள்."என்று கை கூப்பினான்."சரி.நாங்கள் சமையல் செய்கிறோம்.நீ  சும்மா இருந்தால் போதும்." என்று வைத்தியநாதன் கூறினான்.மறுநாள் 
 அதிகாலையிலேயே  4,5 வீரர்களோடு  வந்து  விட்டான் வைத்தியநாதன்.ஒரு நாளுக்கு பத்துபடி அரிசி அவர்கள் முகாமுக்கு ஒதுக்கப் பட்டிருந்தது. பெரிய தட்டுகளில் அதைப் பிரித்து புழுக்களையும் வண்டுகளையும்  நீக்கி கழுவிக் கொடுக்க 2 பேர் சமைத்தனர்.வெறும் சோறே ருசியாய்
இருந்தது. 
 வீரர்கள் தாங்களாகவே 
முன்வந்து சமைக்க விரும்பினர். குழுக்களாகப் பிரிந்து தினம் ஒரு குழு சமைத்தனர். எத்தனை நாட்கள் இங்கு இருக்கப் போகிறோம் எனத் 
தெரியாமல் தவித்தனர். கூழானாலும், கஞ்சியானாலும் பகிர்ந்து உண்டார்கள். செய்தித் தாளில்  வெளியாகும் செய்திகளைக் கேட்டு அறிந்தனர்.
            இந்திய தேசிய ராணுவத்தினர் நடத்திய போரைப் பற்றிஇந்திய மக்கள் ஏதும் அறியவில்லை. வங்காள மக்கள் மட்டுமே ஓரளவு அறிந்திருந்தனர். ஆனால் உலகப்போர் முடிந்தபின் அவர்களைத்  தேசத்துரோகிகள் எனச் சித்தரிக்க போரினைப் பற்றிய தகவல்களை ஆங்கில அரசு வெளியிட்டது.                                             ஒரு நாள் இரவு வைத்தியநாதன், "தோழர்களே! நம் சிறைக்காவலர்கள் தூங்கிய பிறகு முக்கியமான  தகவல்களை உங்ளுக்கு சொல்லப் போகிறேன்". என்றான்.அனைவரும் காத்திருந்தனர். நள்ளிரவில் பேச ஆரம்பித்தான். " நம்முடைய வீரர்களை ஏற்றிச் சென்ற ரயிலை மறித்து மக்கள் கல்கத்தாவில் கலகம் செய்தார்களாம்.தடியடி நடத்தியும், வானை நோக்கி சுட்டும் தான் முன்னே  சென்றிருக்கிறார்கள். பர்மாவிற்கு நம் படையை வழிநடத்திய தளபதி ஷா நவாஸ் கான்,  மற்றும் முக்கியத் தளபதிகளான பிரேம் செகல், குர் பக்ஷ் தில்லான் ஆகிய மூவரையும்  டெல்லி  செங்கோட்டையில் குற்றவாளிகளாக நிறுத்தியுள்ளனர்.  அவர்கள் கடமை தவறியவர்கள், ஆங்கிலேய அரசை எதிர்த்த தேசத்துரோகிகள், எதிரிகளுடன் சேர்ந்து சதி  செய்தவர்கள் என்று பல குற்றங்களை அரசு முன்வைத்துள்ளது.
. இப்போதுதான் INAவின்  போராட்டம்  இந்தியாவில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இனி நமக்கு   மக்களின் ஆதரவு கிடைக்கும் என்பது உறுதி. அவர்களின் எதிர்ப்பால்  துண்டைக் காணோம்.துணியைக் காணோம் என்று ஓடப் போகிறார்கள்." என்று
முடித்தான் வைத்தியநாதன். வீரர்கள்"இன்குலாப் ஜிந்தாபாத்" என்று முழக்கமிட்டனர். ஒரு சீக்கியவீரர், "வைத்தியநாதா!  உனக்கு மட்டும் எப்படி இவ்வளவு செய்தி தெரிகிறது?" என்று கேட்டார்."நாம் வேலை பார்க்கும் விமான நிலையத்தில்   ஒரு தமிழ் அதிகாரி  இருக்கிறார்.அவர் சொல்லும் வேலையை தட்டாமல் செய்வேன்.ஒருவணக்கம் சொல்லிவிட்டு அம்மா, பிள்ளைகள் எல்லாம் நலமா என்று விசாரிப்பேன். அவர்தான் நம் நாட்டுச் செய்திகளைக் கூறுகிறார்"என்று இந்தியில் விவரித்தான். அவருக்கு 
தங்களது நன்றியைத் தெரிவிக்கும்படி  அனைவரும் கேட்டுக் கொண்டனர்.
                   தொடரும்.  

No comments:

Post a Comment