என் குழந்தைகள் வளர்ந்து விட்டனர் ஆனாலும் தனிமை இல்லை. பேர் சொல்ல பேரக்குழந்தைகள் பிறந்து விட்டனர் இப்போது. விரித்த படுக்கை அதனிலே விரிப்பே இல்லை. பேரன்கள் ஒளியத் துணையாய் கட்டிலின் அடியில் கிடக்கிறது. காலையில் விழும் செய்தித்தாள் நொடிக்குள் கசங்கி குட்டி வாய்க்குள் அடைக்கலம் இப்போது. வீடே சின்னதாய் போனது. கால் வைக்க இடமே இல்லை. சின்ன பொம்மைகள் சிதறிக் கிடக்கின்றன இப்போது.
மடியில் தவழ்ந்து மார்பில் ஏறி தோளில் அமர வந்தனர் சுட்டிக்குழந்தைகள் இப்போது.
உணவு ஊட்ட கதையும்
உறங்க வைக்க தாலாட்டும்
புதிய மழலையர் பாடலும்
இணையத்தில் தேடுகிறோம் இப்போது.
எனைப் பார்க்க வாருங்கள். எனப் பேசும் பேரனின் குரல்
தேனாய் இனிக்கிறது.
கட்டியணைத்து கொஞ்சி கண்ணாலும் கையாலும் கவிதை பாடும் பேத்தி
வரமாய் வந்தாள்.
பேரக்குழந்தைகளுடன்
கூடி விளையாடும் வேளையில் உலகமே மறந்து போகிறது இப்போது.
எங்கள் கரம் பிடித்து
நடக்கும் இளந்தளிர்கள்
நாங்கள் தளர்ந்த காலத்தே
எங்கள் கரம் பிடிப்பர் ஐயமில்லை.
நிறைவே கண்டு மக்கள் குறை காணாது வாழ்ந்தால் தனிமை இல்லை எப்போதும்.
மண்ணை விட்டு மறைந்தாலும்
மனதில் நிற்போம்.
No comments:
Post a Comment