Tuesday, January 12, 2021

ஒரு இந்திய தேசிய ராணுவ வீரனின் கதை 10.

இரண்டாம் உலகப் போர் தீவிரம் அடைந்தது.நேசநாடுகள் அணியில் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் இருந்தன.அத்துடன் அமெரிக்காவும் இணைந்து கொண்டது. தாங்கள் இழந்த இடங்களை எல்லாம் ஆங்கிலேயர்கள் அவர்களின் கூட்டணிப் படைகளுடன் இணைந்து மீண்டும் கைப்பற்றினர். ஆங்கிலேயரின் கை ஓங்கியது.1945 ஏப்ரல் மாதம் ஜெர்மன் சரண் அடைந்தது.ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார். 1945 ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதியும் 9 ஆம் தேதியும் ஜப்பான் நாட்டில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களில் அமெரிக்கா அணுகுண்டை வீசியது.ஒரு லட்சத்திற்கு மேலாக சாமானிய மக்கள் இறந்தனர்.உயிர் பிழைத்தவர்களும் கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து  ஜப்பான் சரண் அடைந்து விட்டது.இந்திய தேசிய ராணுவத்திற்கு    கிடைத்த  உதவிகள் நின்று போயிற்று.போரை மேற்கொண்டு நடத்த முடியாத     சூழ்நிலை ஏற்பட்டது.                          நேதாஜி வானொலியில்   உரையாற்றத் தொடங்கினார். "வீரர்களே, நீங்கள் அனைவரும் என்றாவது ஒரு நாள் வீடு திரும்புவீர்கள். அப்போது, நாம் பட்ட வேதனைகளையும் வலிகளையும்   உங்கள் குழந்தைகளுக்குக் கதைகளாக எடுத்துச் சொல்லுங்கள். எதிர்காலத்தில்  நம் தேசத்தில் இருள் சூழ்கிறபோது, இந்தக் கதைகள் அவர்களுக்கு நம்பிக்கையையும் வீரத்தையும் கற்றுத் தரும்." என்றார்.ஆஸாத் ஹிந்த் பத்திரிக்கையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
"நமது வரலாற்றில் நாம் சற்றும் எதிர்பாராத நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில் உங்களுக்கு சிலவற்றைக் கூற விரும்புகிறேன். இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்து விடாதீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் உணர்வுகளை தளர விடாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் எதிர்காலத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தவறாக மதிப்பிட்டு விடாதீர்கள். இந்தியாவை நிரந்தரமாக அடிமைத் தளையில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல. விரைவில் இந்தியா விடுதலை அடையும். ஜெய் ஹிந்த்!".வீறு கொண்டு எழுந்த   வீரர்கள்   இருந்த தளவாடங்களைக் கொண்டு  ஆவேசமாகக் களத்தில் மோதினர். ஆனால் வான்வழித் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறினர். எதிரி விமானத்தைக் கண்டதும் சைரன் ஒலி எழுப்புவார்கள். உடனடியாக பதுங்கு குழிக்குள் இறங்கிவிட வேண்டும். மேலே இருந்து பார்த்தால் வீரர்களைப் பார்க்க முடியாது.ஒரு நாள் வைத்தியநாதனும்  மருதவாணனும் தங்கள் குழுவோடு சென்று கொண்டிருந்தனர்.சைரன் ஒலித்ததும் அனைவரும் ஆங்காங்கே    பதுங்குகுழிக்குள் இறங்கினார்கள்.ஒரு குழிக்குள் குண்டு  விழுந்தது. உள்ளே இருந்தவரின் அலறல் அங்கிருந்தவர்களின் காதில் ஒலித்தது. குழுவுக்கு ஒரு மருத்துவரும் கூடவே வருவார். விமானம் கடந்து சென்றதும்  சிலர் காயம் பட்டவரைத் தூக்க ஓடினர்.மருதவாணன் டாக்டரைத் தேடிப்பார்த்து கூட்டிக்கொண்டு வருகிறேன் என்று கூறி ஓடினான்.உள்ளே இருந்தவனை வெளியே தூக்கி வந்தனர். முகத்தைப் பார்த்த பின்புதான் அது டாக்டர் எனத் தெரிந்தது.டாக்டரைத் தேடியவன்  அவரைக் காணவில்லை என்று திரும்பி வந்தான்." அடிபட்டு உயிரிழந்தவர் டாக்டர்தான்"என்று வைத்தியநாதன் கூறினான். நம்மைக் காப்பாற்ற வந்தவருக்கு இப்படி ஆகி விட்டதே என்று அனைவரும் வருந்தினர். 
       கூடாரத்தில்  அன்று இரவு டாக்டரின் நினைவாகவே இருந்தது."நாம் ஆங்கிலேயருக்காகப் போராடிய போது என் காலில் பாய்ந்த குண்டைத்  தோண்டி எடுத்து மருத்துவம் பார்த்தார்.நான் கத்தினேன். கதறினேன்.உன் கால் உனக்கு  வேண்டுமென்றால் சற்று அமைதியாக இரு என்று சமாதானம் செய்தார்.அவர் இல்லை என்றால் என் கால் செப்டிக் ஆகியிருக்கும். இன்று நான் நடப்பதற்கு அவர்தான் காரணம்" என்று ஒரு வீரன் கண்ணீர் விட்டான்.அப்பொழுது உள்ளே வந்த மேஜர் " வீரர்களே! இது அழவேண்டிய
நேரம் இல்லை. பழிக்குப்பழி.வானில் பறக்கும் விமானங்களைச் சுட்டு வீழ்த்த பீரங்கிகளைப் பயன்படுத்தப் போகிறோம்.வெற்றி நமதே.ஜய் ஹிந்த்." என முழங்கினார்."ஜய் ஹிந்த்" என அனைவரும் குரல் கொடுத்தனர்.நாளை நாம் ஒரு கை பார்த்து விடுவோம் என்ற உறுதியுடன் சற்றே ஓய்வெடுத்தனர். காலையில் பொழுதுவிடிந்ததும் தயாராகி விட்டனர்.   வைத்தியநாதனும்,மருத வாணனும் சப்பாத்திகளைச் சுட்டு இலைகளில் வைத்து அடுக்கிக் கொண்டிருந்தனர். வீரர்கள் தமக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொண்டனர். மேஜர் உள்ளே வந்தார். வைத்தியநாதனைப்  பார்த்ததும், "அச்சா! இன்று நானும்  சப்பாத்தி எடுத்துக் கொள்கிறேன்." என்றார்."மேஜர் சார்!  சப்பாத்தி சுட்டு விட்டேன்.அடுத்து ஆங்கிலேயரின் விமானத்தை சுடப் போகிறேன்." என்றான் வைத்தியநாதன். தோளில் தட்டிக் கொடுத்து, "உன்னைப் போன்ற இளைஞர்கள் நீடுழி வாழ வேண்டும்." என வாழ்த்தினார். கூடாரத்தை சுருட்டி மடக்கி ஜீப்பில் ஏற்றினர். எதிரிகளின் தாக்குதலை  முறிடிக்கத் தயார் நிலையில் நகரத் தொடங்கினர். 
                     தொடரும். 

No comments:

Post a Comment