Sunday, January 24, 2021

ஒரு இந்திய தேசிய ராணுவ வீரனின் கதை 12

பர்மாவின் தலைநகரான ரங்கூனில் கைதிகள் முகாம் அமைக்கப்பட்டு அங்கு ஆயிரக் கணக்கான வீரர்கள் சிறை வைக்கப்பட்டார்கள். சிட்டகாங் முகாமுக்கும் , கல்கத்தா முகாமுக்கும் பலர் அனுப்பப் பட்டனர். கிட்டத்தட்ட 12,000 பேர் சிறைபிடிக்கப் பட்டதாக ஆங்கில அதிகாரிகள் பேசிக் கொண்டது கைதிகளுக்கும் தெரிந்தது.
முக்கிய உயர் ராணுவஅதிகாரிகளை டில்லிக்கு கொண்டு போய் சிறையில் இட்டார்கள்.ஒரு சில நாட்கள் கழித்து ஆங்கிலேயே அதிகாரிகள் அதிக மகிழ்ச்சியுடன்காணப் பட்டனர். கட்டிப்பிடித்தும், கைகுலுக்கியும் கொண்டாடினர்.ஒரு அதிகாரி வந்து, "உங்கள் நேதாஜி விமான விபத்தில் இறந்து விட்டார்."எனத் தெரிவித்தார். அனைவரும்  அதிர்ந்து போனார்கள். கண்ணீர் விட்டுக் கதறினார்கள். "நேதாஜி உங்ளை மீண்டும் பார்ப்போம்.சுதந்திர இந்தியாவில் நாம் சந்திப்போம் என்று நினைத்தோம்.இப்படி ஆகிவிட்டதே." என்று புலம்பினர். வைத்தியநாதன்,"நம் நேதாஜியை பிரிட்டிஷார் ஏதோ செய்து விட்டனர். விமான விபத்து தற்செயலாக நடந்திருக்காது.திட்டம் தீட்டி செய்திருப்பார்கள்."என்றான்.மருதவாணன்,"எங்கேயோ கண்காணாத 
இடத்தில் சிறையில் வைத்துவிட்டு நாடகம் ஆடுகிறார்கள்."என்று கூறினான். "அப்படித் தான் இருக்க வேண்டும்"என்றான் ஒரு வீரன். "அவன் கூறுவது சரிதான்" என்றான் மற்ற ஒரு வீரன்."சிறையில் வேலை பார்க்கும் பர்மியர் யாரிடமாவது சொல்லி செய்தித்தாளில் என்ன. செய்தி வந்துள்ளது எனக்கேட்கலாம்"  என்றான் வைத்தியநாதன்.  அவர்களுடன் சிறையில் இருந்த பர்மியத் தமிழர்  ஒருவர் எப்படியோ செய்தித்தாளைப் பெற்று  விட்டார்.அதைப் படித்து விட்டு கண்ணீருடன் செய்தியை விவரித்தார். 
      சிங்கப்பூர் ஆங்கிலேயர் வசமாகி விட்டதால் நண்பர்களின் அறிவுரைகளை ஏற்று அங்கிருந்து நேதாஜி  மிட்சுபிட்சி என்ற ராணுவ விமானத்தில் கிளம்பினார்.
 (கடைசியாக எடுக்கப்பட்ட புகைப்படம்)                                             1945 ஆகஸ்ட் 18 ஆம் நாள் தைவான் நாட்டில் தெய்பே (அப்போதைய பெயர் பார்மோசா) என்ற இடத்தில் நடந்த விமான விபத்தில் இறந்து விட்டார்.தீப்பற்றி எரிந்த நிலையில்  அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை தந்திருக்கிறார்கள். ஆனால் பலனில்லாமல் இறந்து விட்டார். ஆகஸ்ட் 20 ஆம் நாள் தைவான் நாட்டில்  தகனம் செய்யப் பட்டார்.அவருடன் சென்ற ஜப்பானிய 
படைத் தலைவரும் இறந்து விட்டார்.இச்செய்தி  ஜப்பான் நாளிதழில்  தெரிவிக்கப் பட்டது.அதன் பின்பு தான் அனைவருக்கும் செய்தி தெரிந்தது.
(ஜப்பான் செய்தித்தாள்)             அதற்குப் பின்னர் ஆங்கில செய்தித்தாளில் வெளியானது.இந்தியத் தாயின் வீீீரப் புதல்வன் ,வங்கம் தந்த தங்க மகன் மறைந்து விட்டார்.அவர் மரணம் அடைந்தாரா?மறைந்தாரா?அல்லது மறைக்கப்  பட்டாரா? மர்மம்  வெளியாகவே இல்லை.                                                 (பின் குறிப்பு)     நேதாஜியின் மறைவைக் குறித்து ஆராய நேருவின் காலத்தில் ஷாநவாஸ் கான் ஆணையமும் ,இந்திரா காந்தி காலத்தில் கோஸ்வாமி ஆணையமும் அமைக்கப் பட்டன.அவை இரண்டும் மரணத்தை  உறுதி செய்தன. ஆனால் 1999ல் அமைக்கப்பட்ட  M K முகர்ஜி ஆணையம் விசாரணை செய்தபோது நேதாஜி மரணமடைந்ததாகக் கூறப்பட்ட காலகட்டத்தில் 1945 பிப்ரவரி முதல்  டிசம்பர் வரை தைவான் நாட்டில் எந்த விமான விபத்தும் நடக்கவில்லை என அந்நாட்டு அரசாங்கம் அறிக்கை அளித்தது.மத்திய அரசில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் முகர்ஜி அறிக்கை  கிடப்பில் போடப் பட்டது.எனவே நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மரணம் இன்றளவும் மர்மமாகவே உள்ளது.
                      தொடரும்.                 

No comments:

Post a Comment