Tuesday, June 1, 2021

மங்கையர்க்கரசி மங்கைகள் ஷீரடியில் தொடர் _5

சாய் பாபாவைக் கண்டு அவரது அருளைப் பெற ஆனந்தமாகக் கிளம்பினோம்.எங்களது தலைமை ஆசிரியை," நாம் அனைவரும் இப்போது அனைவரும் சேர்ந்து செல்கிறோம்.திரும்பி வரும்போது நீங்கள் குழுக்களாகச் சென்று  உங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு அறைகளுக்குத் திரும்புங்கள். வழியை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.செல் ஃபோன்களை கோயிலுக்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை.எனவே அவற்றை அறைகளில் வைத்து விட்டு வாருங்கள்." என்றார்.சரியென்று கூறி அவர்களுடன் கிளம்பினோம். சாய்பாபா  கோவில் நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் தான் இருந்தது. சாய் மகராஜ் கி ஜய்  என்ற கோஷத்துடன் மக்கள்  நடந்து கொண்டிருந்தனர். ஓம் சாய் !நமோ நமஹ! என்று  உச்சரித்துக் கொண்டு நாங்களும் நடக்க ஆரம்பித்தோம்.
          சாய்பாபா சமாதி மந்திர் என்ற அந்தக் கோயிலின் நுழைவாயில் வளைவு வடிவில் இருந்தது. அதன் வலதுபுறம் துவாரகாமாயி என்ற இடம் இருந்தது.கோயிலுக்குள் சென்று நுழைவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொண்டு உள்ளே சென்றோம். மூத்த குடிமக்களுக்கு சிறப்பு தரிசன வசதி இருந்தது. எனவே அம்மா  அதில் சென்றார்கள்.நாங்கள் நீண்ட வரிசையில் நின்று சாய்பாபாவின் துதிப் பாடல்களைப் பாடிக் கொண்டே நகர்ந்தோம். "கருவறைக்குள் செல்லும் போது வரிசை இரண்டாகப் பிரியும்.நாம் சுவரை ஒட்டிய வரிசையில்  செல்ல வேண்டும் .அப்போதுதான் சாய்பாபாவின் திருவுருவை அருகில் கண்டு தரிசிக்கலாம்." என்று தலைமை ஆசிரியை கூறியிருந்தார். அவ்வாறே செய்தோம்.கூட்டம் அதிகமாக இருந்தது.  சாய்பாபாவிற்கு  அருகில் வந்து விட்டோம்.அவர் முன் நின்ற போது உலகமே மறந்து போனது. நல்ல  தெய்வீக அதிர்வலைகளை உணர முடிந்தது.பொதுவான பிரார்த்தனைக்குப் பின்னர்
"சாய்பாபா! எனது மருமகள் உங்களின் அருளால் விரைவில் தாயாக வேண்டும்.என் வாழ்க்கைத் துணைவர், மகள், மருமகன், பேரன், மகன்,மருமகள் ,அவர்களது  குழந்தை என அனைவரும் மீண்டும் தரிசனம் செய்ய வருவோம்."என்று மனதார 
வேண்டினேன். வெளியே வரும் போது சக ஆசிரியைகளிடம் என் வேண்டுதலைக் கூறினேன். வெளிப் பிரகாரத்தைச் சுற்றி வந்தோம்.குரு ஸ்தான் என்ற இடத்தை அடைந்தோம்.அங்கே ஒரு வேப்பமரம் உள்ளது.அதன் இலைகள் கசப்புத் தன்மை அற்றதாக, இனிப்பாக உள்ளது.மரத்தைத் தொடாமல் இருக்க வேலி அமைத்து உள்ளனர். கீழே விழும் இலையைக் கூட எடுக்க முடியாது.எங்களது தாளாளர் அம்மா அமர்ந்து இருந்த இடத்தில் ஒரு இலை பறந்து வந்து விழுந்தது. அதனை குருவின் அருட்பிரசாதமாக எண்ணி பத்திரப் படுத்தி வைத்தோம். அந்த இடத்திற்கு அருகில்  துனி எனப்படும்  சாம்பல் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அதனைப் பெற்றுக் கொண்டோம். வளாகத்திற்குள் நிறைய மரங்கள் இருந்தன.பாபாவால் வைக்கப்பட்ட மரம் ஒன்று இருந்தது.அதைப் பாதுகாப்பாக வைத்திருந்தனர். நாய்கள்  உள்ளே சுற்றிக் கொண்டு இருந்தன.அவை குரைத்து யாரையும் தொந்தரவு செய்வதில்லை. நாளை வரும்போது துவாரகா மாயி மற்றும் சாவடி ஆகியவற்றை நிதானமாகப் பார்க்கலாம் என்று எண்ணி வெளியே வந்தோம். இரவு உணவிற்கு எல்லோரும் ஒரே இடத்திற்குச்  சென்றால் பரிமாற நேரமாகும் என்பதால் பிரிந்து செல்வோம் என முடிவு செய்தோம்.எங்கே போகலாம் என யோசித்துக் கொண்டிருந்த போது அம்மா! அம்மா! என யாரோ அழைத்தார்கள்.திரும்பிப் பார்த்தால் 
ஒரு பெண்மணி பானை நிறைய வரகரிசி வெண்பொங்கல் வைத்து பிரசாதமாக வழங்கிக் கொண்டிருந்தார்.அவர் அருகில் இருந்த மற்ற ஒருவர் கேசரி வைத்திருந்தார்.தொன்னையில்  வெண் பொங்கலையும், கேசரியையும் வைத்து தந்தார்கள். சாய்பாபாவே அந்தப் பெண்ணை அனுப்பி வைத்தார் என்று மகிழ்ந்தோம்.முதலில் வந்த  பத்து, பதினைந்து பேருக்கு அந்த பிரசாதம் பெறும் பாக்கியம்  கிடைத்தது. மனமும் , வயிறும் நிரம்பியது.
                    தொடரும்.

No comments:

Post a Comment