Saturday, June 5, 2021

மங்கையர்க்கரசி மங்கைகள் ஷீரடியில் தொடர்_7

துவாரகாமாயி முன் பக்தர்கள்  நின்ற வரிசையில் நாங்களும் நின்றோம். இந்த  மசூதியில் தான் பாபா அறுபது ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார். யாசகமாக கிடைத்த உணவுப் பொருட்களை இங்கு தான் சமைப்பாராம். சாளரம் வழியாக  மக்களை அழைத்து உணவைப் பகிர்ந்து உண்பாராம்.அவர் சாய்ந்து உட்காரப் பயன்படுத்திய வேப்பமரக் கட்டை  வைக்கப்பட்டுள்ளது. பாபாவின் திருவுருவப் படம் உள்ளது.
துனி  அதாவது உதி தயாரிக்கும் இடமும் அங்கு உள்ளது.வேப்பமரக் கட்டைகளையும் சாண வறட்டிகளையும் பயன்படுத்தி அதிகாலையில் தீ மூட்டுவார்கள்.அது பற்றி எரியும்போது நடுவில் பாபாவின் உருவம் தெரிவதாகக் கூறுகின்றனர்.அந்த துனியை அருமருந்தாக  எண்ணி பயபக்தியுடன்  பெற்றுச் செல்கின்றனர்.
அடுத்து சாவடிக்குச் சென்றோம்.அது ஊர்மக்கள் ஒன்று கூடும்  இடமாகும். மழைக்  காலத்தில்  துவாரகா மாயிக்குள் நீர் ஒழுகும்.  எனவே பக்தர்கள் அவரைக் கட்டாயப்படுத்தி இங்கு தூங்கச் செய்தார்களாம். தற்போது   ஒவ்வொரு வியாழன்றும் பாபாவின் திருவுருவத்தை இங்கு எழுந்தருளச் செய்கிறார்கள்.  சாய்பாபாவைத் தரிசிக்க மீண்டும் குடும்பத்தோடு வரவேண்டும் என அவரை மனதார வணங்கி ஹோட்டலுக்கு வந்தோம்.காலை உணவு அருமையாக இருந்தது. ஷீரடியில்  இருந்து மும்பையை நோக்கி பயணமானோம்.                                        அவரவர் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டோம். கேலியும்,கிண்டலும், சிரிப்பும்,உற்சாகமுமாகச் சென்றோம். அதிலும் நான் எஸ்கலேட்டரில் ஏற மறுத்து ஓடியதை நினைவுபடுத்தி சிரித்தனர். அதை நினைத்தால் எனக்கும் சிரிப்பு வருகிறது.நேரம் போனதே தெரியவில்லை.இடையில்  ஓரிடத்தில்  பேருந்து நின்றது.காஃபி, தேநீர்   என தேவையானதை அருந்தினோம்.பிஸ்கட், சிப்ஸ் போன்ற நொறுக்குத்தீனிகளை  வாங்கிக் கொண்டோம்.பயணம் தொடர்ந்தது.நேராக மும்பையில் உள்ள மகாலெட்சுமி கோவிலுக்குச் செல்ல விரும்பினோம்.  அம்மனைத்   
தரிசித்த  பின்னரே  மதிய உணவு உண்ண நினைத்தோம்.                                                             தொடரும்.

No comments:

Post a Comment