Wednesday, January 22, 2020

கங்காரு தேசம் 29

CITY HALL
இது பிரிஸ்பேன் நகராட்சி அலுவலகம் ஆகும்.  மைத்துநர் சில நாட்களுக்கு முன்னதாகவே ஆன்லைனில்  விண்ணப்பித்து அனுமதி வாங்கி விட்டார்.கட்டணம் ஏதும் கிடையாது. பிற்பகல் 1.30 மணிக்கு guided tour இருந்தது.அதில் நாங்கள் கலந்து கொண்டோம்.
இந்த இடம் King square என்று அழைக்கப்படுகிறது.கட்டிடத்தின் முன் இருபுறங்களிலும் வெண்கலத்தால் செய்யப்பட்ட
சிங்கங்களின் சிற்பங்கள் இருந்தன.
ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் சிலை ஒன்றும் உள்ளது. கட்டிடத்தூண்களைப் பார்த்த போது நமது நாட்டுப் பாராளுமன்றத் தூண்கள் போன்றே இருந்தது.
(இந்தியப் பாராளுமன்றக் கட்டிடம்)
பிரிஸ்பேன் நகரை உருவாக்கப்       பாடுபட்ட குடும்பங்களை                        
நினைவு படுத்தும் வகையில்  Petrie tableau என்ற சிற்பம் வைக்கப் பட்டுள்ளது.அதற்குக் கீழே இரு கங்காருகளின் சிலையும் உள்ளது
.
City hallன் முகப்பில் Tympanum என்ற சிற்பம் காணப்படுகிறது.    
      இவைகளைப் பார்த்த பின் உள்ளே சென்றோம்.  நமது பாராளுமன்றம் போன்றே  கீீழ்த் தளத்தில்  வட்ட வடிவத்தில் ஒரு அரங்கம் உள்ளது. அதன் மேல் பகுதி தாமிரத்தால் ஆன 31 மீட்டர் விட்டமுள்ள அரைக்கோள வடிவில் உள்ளது. மேடையின் பின்புறம் 4300 குழல்களை உடைய Organ என்ற பெரிய இசைக் கருவி இருக்கிறது. அரசாங்க நிகழ்ச்சிகள் இங்கு நடைபெறுகின்றன.மைத்துநர்,
தங்கை மற்றும் மகள்கள் இங்கு         நடைபெற்ற நிகழ்ச்சியில் தான்            ஆஸ்திரேலியக் குடியுரிமையைப்    பெற்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. கட்டணம் செலுத்தி தனியார் கலை நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களையும் இங்கு  நடத்தலாம்.
மேல் தளத்தில் அமர்ந்து நிகழ்ச்சிகளைக்  காண வசதி உள்ளது.அடுத்து கவுன்சில் கூடும் ஹாலுக்குச் சென்றோம்.அதைப் ஃபோட்டோ எடுக்க அனுமதி இல்லை.
நடுவில் மேயருக்கு இடம் ஒதுக்கப் பட்டுள்ளது.ஆளுங்கட்சியினர்     சுயேச்சைகள்,எதிர்க் கட்சியினர்         அமரும்  இடங்களையும்  தனித்தனியே  அமைத்து உள்ளனர்.அழகாக மேசை, நாற்காலிகள், மைக்குகள் அமைக்கப் பட்டிருந்தன.மேயரின் ஆஃபீஸை வெளியில் இருந்து பார்த்தோம்.1925 முதல் பதவி வகித்த மேயர்களின் புகைப்படங்கள்மற்றும்
தற்போதைய மேயரின் புகைப்படம் மாட்டப் பட்டிருந்தன. சிறிய மியூசியம்
ஒன்றும் உள்ளது.அதில் பல ஓவியங்கள் இருந்தன.குழந்தைகள்
விளையாட தனி இடம் ஒதுக்கப் பட்டுள்ளது.
PARLIAMENT HOUSE
குவின்ஸ்லாந்து மாநிலத்தின் தலைநகரம் பிரிஸ்பேன்.நம் நாட்டில் மாநில அளவில்  தேர்ந்து எடுக்கப்படும் உறுப்பினர்களை M.L.A என்று கூறுவர்.இங்கு  M.P என்றுதான் கூறுகின்றனர். சட்டசபை, பாராளுன்றம் எனக் கூறப்படுகிறது.எனவே இங்கு Parliament house உள்ளது. முதலமைச்சர் Premier என அழைக்கப் படுகிறார்.    
 பார்வையாளர்கள் மறுபக்கம் உள்ள புதிய கட்டிடம் வழியாகத் தான் அனுமதிக்கப் படுகின்றனர்.
(downloaded picture)
மாலை 4 மணிக்கு உள்ளே சென்றோம். Security check செய்தனர்.கைப்பையும் ஸ்கேன் செய்யப் பட்டது.Pass port ஐப்பார்த்த பின்பு அனுமதி தந்தனர். பல லாக்கர்கள் உள்ளன.பையை  ஒரு லாக்கரில் வைத்து விட்டு சாவியை எடுத்துச்  சென்றோம்.வழிகாட்டிப் பெண் ஒருவர் குழுவை அழைத்துச்
சென்றார்.நடுவே இருந்த படிக்கட்டை மட்டுமே படம் எடுக்க அனுமதித்தார்.
பிற இடங்களைப் படம் எடுக்க அனுமதி கிடையாது. பாராளுமன்ற அறைக்குள் நுழைந்தோம். M.Pக்கள் அமரும் நாற்காலியில் அமரச் சொன்னார்கள். பட்டன் எதையும் தொடாமல் இருக்குமாறு கூறிவிட்டுபின் அறையைப் பற்றி விளக்கம்  
தந்தார்.  ஒரு நிமிட குவின்ஸ்லாந்து M.P.! ஒரே சிரிப்புதான்.           (Downloaded    picture)            
 ஆளுங்கட்சியினர்,எதிர்க்கட்சியினர்,சுயேச்சைகள் அமரும் இடங்கள், பத்திரிக்கையாளர்களுக்கு உரிய இடங்கள்,பார்வையாளருக்கு உரிய இடங்கள் ஆகியவற்றைக் காட்டினார்.பாராளுமன்றத்தில் பேசுபவர்கள் சரியாக உரையை முடிக்க நிமிடம்,நொடியைக் காட்ட பெரிய எலெக்ட்ரானிக் Stop watch வைக்கப் பட்டுள்ளது.
                    விருந்தினர் சந்திப்பு, பத்திரிக்கையாளர் சந்திப்பு ஆகியவற்றிற்கு ஒரு பெரிய அறை உள்ளது. ஓரிடத்தில் நூலகம் அமைக்கப் பட்டுள்ளது.அதில் ஆஸ்திரேலியாவின் எல்லா மாநிலப் பாராளுமன்றங்களின் நடவடிக்கைக் 
குறிப்புக்கள் தொகுக்கப்பட்டு புத்தகவடிவில் அடுக்கப் பட்டுள்ளன.  உட்கார்ந்து படிக்க நாற்காலிகள், மேஜைகள் உள்ளன.
            (Downloaded picture) 
எலிபெத் மகாராணி,அவரது தந்தை ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் ஆகியோரின்  படங்கள் இருந்தன. ஒரு தளத்தில் கண்ணாடியில் ஒரு அரசியாரின் படம் இருந்தது. பார்த்ததும் நினைவு வந்து விட்டது. படிக்கும் காலத்தில் வரலாற்றுப் பாடத்தில் விக்டோரியா மகாராணியாரின் பேரறிக்கையில் கூறப்பட்ட அம்சங்கள் மிக முக்கியமானது என திருப்பித் திருப்பிப் படித்திருக்கிறோம்.எட்டாம் வகுப்பு ஆசிரியையாக 22 ஆண்டுகள் பாடமாக நடத்தியிருக்கிறேன்.எனவே விக்டோரியா மகாராணியார் நன்கு தெரிந்தவராகி விட்டார்.
(Downloaded picture) 
பாராளுமன்றத்தின் ஒரு சுவரில் இதுவரை உள்ள உறுப்பினர்களின் படங்களும்,பெயர்களும் எழுதப்பட்டுள்ளன.தற்செயலாக பாராளுமன்றஉறுப்பினர் ஒருவர் அங்கு வந்தார். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். எங்கிருந்து வருகிறீர்கள்?   எனக் கேட்டதும் நான் இந்தியாவில் இருந்து  வந்திருக்கிறேன்   என பதில் கூறினேன். வழிகாட்டி எல்லா இடங்களையும் காட்டினார்.பின்னர் லாக்கரில் இருந்த பையை எடுத்துக்கொண்டு நன்றி கூறி விடை பெற்றோம்.நமது தலைநகர் தில்லியில்  பாராளுமன்றத்தை 1985ல் நானும்,என் கணவரும் பார்வை இட்டிருக்கிறோம். தில்லியில் பணியாற்றிக் கொண்டிருந்த மைத்துநர்,முதல் தங்கையின் கணவர்
திரு.ராமகிருஷ்ணன் அங்கு கூட்டிச் சென்றிருந்தார்.இரு மைத்துநர்கள் தயவால் இரு நாட்டுப் பாராளுமன்றங்களைப் பார்த்து  விட்டோம்.1867ல் கட்டப்பட்ட பிரிஸ்பேன் பாராளுமன்றம்
 1921-1927ல் கட்டப்பட்ட இந்தியப்   பாராளுமன்றம்,1920-30களில்     கட்டப்பட்ட சிட்டி ஹால்ஆகிய அனைத்தும் அக்கால  ஆங்கிலேயரின்  கட்டிடக்கலைக்குச்
சான்றுகளாகத் திகழ்கின்றன.    
                   எனது மைத்துனர் முருகன் வேறு எதையாவது பார்க்க விரும்பினால் சொல்லுங்கள். போகலாம் என்றார்.பிரிஸ்பேன் ஆற்றங்கரையில் உள்ள sign of Brisbane ஐ இரவில் தான் பார்த்தோம்.இப்பொழுது போகலாம் என்றேன். பிரிஸ்பேன் ஆற்றின் குறுக்காக அமைந்துள்ள விக்டோரியா பாலத்தில் ஆற்றை ரசித்துக் கொண்டே நடந்தோம். கோடைகாலத்தில் எப்படி இவ்வளவு 
நீர் ஓடுகிறதென ஆச்சரியப் பட்டேன்.         பிரிஸ்பேன் நகரம் ஆற்றின் முகத்துவாரத்தில் உள்ளதால் கடலில் ஓதங்கள் ஏற்படும் போது கடல் நீர் ஆற்றுக்குள் வந்து விடுகிறது. எனவே  எப்போதும் நீர் இருக்கும்.          இது நன்னீர் இல்லை.படகுப் போக்குவரத்துக்கு  மட்டுமே   இங்கு 
 பயன்படுகிறது.  உற்பத்தியாகும் இடத்தில் இருந்து வரும்போது   நன்னீராகத் தான் வருகிறது.இங்கு உப்புநீராக மாறிவிடுகிறது என்று மைத்துநர் விளக்கம்  கூறினார். 
ஆற்றங்கரையில்   BRISBANE  என       
ஆங்கில எழுத்துக்கள்  பெரியதாகக் காட்சி  தந்தன.                                                       

                            சற்று நேரம் அமர்ந்து விட்டு வீீட்டிற்குக் கிளம்பினோம். பிரிஸ்பேனில்  உள்ள முக்கிய இடங்கள் எல்லாவற்றையும் பார்த்து விட்டோம். இனி மூட்டை, முடிச்சுக்களைக் கட்டிக்  கிளம்ப வேண்டும்.
                            தொடரும். 
   
                                


 

No comments:

Post a Comment