Monday, December 30, 2019

ஒரு இந்திய தேசிய ராணுவ வீரனின் கதை 6

மதராஸ் நகரில் இருந்து 2 ட்ரக்குகளில்  வீரர்கள் ஏறினர். நாயக், ஹவில்தார், மேஜர் என்ற தகுதிகளில்  இருந்தவர்களும் இருந்தனர்.ஒரு ட்ரக்கில் தளவாடங்கள் ஏற்றப்பட்டன. முன்புறமும்,பின் புறமும் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் காவலுக்கு அமர்த்தப் பட்டனர்.ரயில் பாதை ஏதும் இவர்கள் சென்ற பாதையில் இல்லை. காடு மேடுகளிலும்,மலைப் பாதைகளிலும் செல்லும் வகையில் ட்ரக் வடிமைக்கப் பட்டிருந்தது. உணவும்,உறக்கமும் சரியாக இருந்தால் தான் போரிட முடியும் என்பதால் ஆங்காங்குள்ள ஊர்களில்  உணவு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இரவுகளில் 5 மணி நேரம் உறங்க அனுமதிக்கப் பட்டனர்.
      நெல்லூர்,ஓங்கோல்,விஜயவாடா ஆகிய ஊர்களுக்குச் சென்ற போது அங்கிருந்த ராணுவமும் சேர்ந்து கொண்டது. தந்தி அனுப்பும் வசதி இருந்ததால் உயர் அதிகாரிகளின் கட்டளைகளை வழியில் இருந்த ஊர்களில் அறிய முடிந்தது. பதில் அனுப்பவும் செய்தனர். பர்மாவை நோக்கி ஜப்பான் படைகள் முன்னேறிக் கொண்டிருப்பதால் தமது ராணுவம் அங்கே செல்வதாக அறிவித்தனர். கல்கத்தா நகரில் டாங்கர்களும் இணைந்தன. மிகப் பெரிய படை உருவானது. ஹூக்ளி ஆற்றங்கரையில் பாசறைகள் உருவாகின.மதராஸில் இருந்து அடுத்த பிரிவு ராணுவம் வந்து விட்டது. அதில் மருதவாணன் இருந்தான். மொத்த ராணுவத்தினரும்  பெரிய குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர்.  48ஆவது இந்தியன் இன்ஃபேன்டரி பிரிவில் வைத்தியநாதனும், மருதவாணனும் இருந்தனர்.
           போதுமான அளவு தளவாடங்கள் வந்து சேர்ந்தது.Lee Enfield துப்பாக்கி,ஷாட் கன்,மிஷன் கன், கையெறி குண்டு என்று அனைத்தையும் கையாள்வதற்கு பயிற்சிகள் தரப்பட்டன. போர் ஒத்திகை நடைபெற்றது. துப்பாக்கியால் சுட்டால் மட்டும் போதாது. சப்பாத்தி சுடவும் தெரிய வேண்டும். எனவே குழுவாகப் பிரிந்து சமைக்கவும் செய்தனர். வைத்திய நாதன் அனைத்திலும் விற்பன்னன் ஆனான். சிப்பாய்கள் மட்டுமே சமைத்துச் சாப்பிடுவார்கள். உயர் நிலையில் உள்ளவர்களுக்கு வேறு ஓர் இடத்தில் உணவு சமைத்துப் பரிமாறுவார்கள்.ஒரு நாள் வைத்திய நாதன் சப்ஜி சமைத்துக் கொண்டிருந்தான்.அவ்வழியே சென்ற ஹவில்தாரை  சப்ஜியின் மணம் மயங்க வைத்தது.இந்தியில் "எனக்கு சாப்பாடு கிடைக்குமா"? எனக் கேட்க சந்தோஷமாக உட்கார வைத்துப் பரிமாறினான். அதன் பிறகு சில ஹவில்தார்கள்  சப்ஜி சாப்பிடுவதற்காகவே கூடாரத்திற்கு வந்து போனார்கள். மருதவாணன் எப்போதும் வைத்தியநாதனுடன் இருந்தான். போர்முனையில் காயம் பட்டவர்களை அழைத்துச் செல்ல ஜீப் ஓட்டத் தெரிய வேண்டும். எனவே சிலருக்கு டிரைவிங் கற்றுக் கொடுத்தார்கள்.நண்பர்கள் இருவரும் அதிலும் பயிற்சி பெற்றனர்.
                   1941ல் ஜப்பான் பிரிட்டிஷாரின் காலனி நாடுகளைத் தாக்கத் தொடங்கியது. ஜெர்மன் நாட்டின் ஹிட்லரும்,இத்தாலி நாட்டின் முஸோலினியும் ஜப்பானுடன் சேர்ந்தனர். 48 ஆவது இந்தியன் இன்ஃபேன்ட்ரி உடனடியாகக் கிளம்ப வேண்டுமென உத்தரவிடப் பட்டது. ராணுவ வீரர்கள் மணிப்பூர் வழியாக பர்மாவிற்குள் நுழைந்தனர். ஆங்கிலேயரிடம் கட்டுப்பாட்டில் தான் பர்மா இருந்தது.
               தொடரும்

No comments:

Post a Comment