Monday, December 23, 2019

அறியாப் பருவம்

சீதா எட்டாம் வகுப்பு ஆசிரியை.பள்ளிநேரம் முடிந்து மாணவ, மாணவிகள்
சிட்டுக்குருவிகள் போல் பறந்து விட்டனர். இனி ஆசிரிய, ஆசிரியைகள் கிளம்பலாம்.தன் கைப்பையை எடுத்துக் கொண்டு சீதா கிளம்பினாள்.அலுவலக ஊழியர் ஒருவர் வேகமாக வந்து,"டீச்சர், ஹெச்.எம் உங்களை வரச்சொன்னார்கள்"என்றார்.ஹெச்.எம். ரூமிற்குள் சென்றாள்.அங்கே அவளது வகுப்பில் படிக்கும் மாணவனின்  அப்பா கவலையோடு நின்று கொண்டு இருந்தார். அம்மா கண்களில்  கண்ணீரோடு  நின்றார். "சீதா, இவர்களின் பையன் பாபு எப்பொழுது கிளம்பினான்?"என்று ஹெச்.எம் கேட்க," பெல் அடித்த பின்னர் தான் கிளம்பினான்.ஐந்து நிமிடங்கள் ஆகி இருக்கும்." என்று பதில் கூறினாள்."இவர்களுக்கு அரைமணி நேரத்திற்கு முன் யாரோ ஃபோன் செய்து பையன் விபத்தில் மாட்டி ஆஸ்பத்திரியில் இருப்பதாகக்  கூறி உள்ளனர்.என்ன  எனக் கேட்கத் தான் கூப்பிட்டேன்". என்றார் தலைமை ஆசிரியை."அம்மா, அதற்கு வாய்ப்பே இல்லை.வகுப்பில் இருந்து கடைசி ஆளாகக் கிளம்பினான். போய்விட்டு வருகிறேன்.தாங்க் யூ டீச்சர் என்று சொல்லி விட்டுப் போனான்."என்றாள் சீதா. "நிச்சயமாகத் தெரியுமா?"என ஹெச்.எம் கேட்க "ஆம்"என்றாள்.
பள்ளி நிர்வாகியாக இருந்த பெரியவர்  உடனே ஒரு  ஆசிரியரை அழைத்து ," சார் , நீங்கள் உடனடியாக டூவீலரில் சென்று பையன் வீட்டில் 
இருக்கிறானா?என்று பார்த்து விட்டு வாருங்கள்.சீதா,அவர்கள் அட்ரஸை
எழுதிக் கொடுங்கள்". என்றார்கள். ரிஜிஸ்டரைப் பார்த்து எழுதிக் கொடுத்தாள். " அம்மா, உங்கள் பையன் நன்றாக இருப்பான்.யாரோ
தவறுதலாக  ஃபோன் செய்து இருக்கிறார்கள்."என்று அனைவரும் ஆறுதல் கூறினார்கள். பையனின் தாய் அழுது புலம்பிக் கொண்டு இருந்தாள்.நிமிடங்கள் யுகமாய் நகர்ந்தன.
                  பத்து நிமிடத்தில்  அந்த ஆசிரியர், பையன் வீட்டில் இருப்பதாகத் தகவல் கொடுத்தார். பையன் ஷேர் ஆட்டோவில் வீட்டிற்குப் போனதாகவும் டி.வி பார்த்துக் கொண்டு இருந்தான் என்றும்  அலைபேசியில் தெரிவித்தார். அப்பாடா என்று இருந்தது.ஏதேனும் நடந்தால் ஆசிரியர்  தானே பொறுப்பு. மகிழ்ச்சியாக பெற்றோர் விடை பெற்றனர். "ஃபோனில் பையன் பெயரைச்  சரியாகச் சொல்லி இருக்கிறார்கள்.அப்பாவின் ஃபோன்  நம்பரும் தெரிந்து இருக்கிறது.  யார் இப்படிச் செய்திருக்கக் கூடும் ".என தலைமை ஆசிரியையும் சீதாவும் பேசிக்கொண்டு இருந்தார்கள்.  சீதாவிற்குத் திடீரென நினைவு வந்தது."அம்மா! அந்தப் பையன் பாத்ரூம் அவசரமாகப் போக வேண்டும் எனக் கேட்டான்.நான் அனுமதி தந்தேன்."என்றாள்.உடனே ஒரு ஆசிரியரை அருகில் இருந்த டெலிபோன் பூத்தில் விசாரிக்கச் 
சொல்லி பெரியவர் அனுப்பி வைத்தார். பூத் நடத்தியவர் கூறிய
தகவல்களை வைத்துப் பார்க்கும்போது பையனே தான் செய்திருக்கிறான் எனத் தெரிந்தது.வாட்ச் மேனை விசாரிக்க, அவர்  பாத்ரூம் சென்றபோது அவன் ஓடி விட்டதாகவும்,திரும்பி உள்ளே வரும்போது திட்டி அனுப்பியதாகவும் கூறினார். 
                மறுநாள் அவன்  வகுப்பிற்கு வந்த உடன்  அலுவலகத்திற்கு அழைத்து வருவதாக சீதா சொன்னாள். மறுநாள் பாபுவின் வருகைக்குக்  காத்திருந்தாள். பிரேயர் முடிந்து வகுப்பும் ஆரம்பித்து விட்டது. சற்று நேரத்தில் அலுவகத்தில்  இருந்து அவளை வரச்சொல்லி அழைப்பு வந்தது.உள்ளே நுழைந்த போது பாபுவும், பெற்றோரும் நின்று கொண்டு இருந்தார்கள்." டீச்சர்! என் பையனை மன்னித்து விடுங்கள்." என்று வேண்டினார்கள்."பாபு! நீ வகுப்பிற்குப் போ." என்று   தலைமை ஆசிரியை அனுப்பி வைத்தார். அதற்குப் பிறகு பையனின் அப்பா ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சியை விவரித்தார். பாபு மற்றும் சிலர் காலி இடத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது பந்து அருகில் இருந்த ஒரு பெரிய வீட்டின் கண்ணாடி ஜன்னல் மீது பட்டு கண்ணாடி தெறித்து விழுந்தது. அந்த வீட்டின் உரிமையாளர் சத்தம் போட்டிருக்கிறார். பையன்கள் பதிலுக்கு பதில் கூறியுள்ளனர். கோபமடைந்த  அவர்  காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஏதோ பெரிய சண்டை நடப்பதாக நினைத்து உடனே அங்கு  போலீஸார் வந்து விட்டனர். இனி இங்கு விளையாடக்
கூடாது என அறிவுறுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.இதைப் பார்த்த ஒருவர் பாபுவின் அப்பாவிடம் வந்து போலீஸார் அவனை விசாரணை செய்து கொண்டுள்ளனர் எனக் கூறியுள்ளார்.பதறிப் போன அப்பா பாபு உள்ளே நுழைந்ததும் அடித்து நொறுக்கி விட்டார். பாபு அழுது கொண்டே இருந்திருக்கிறான். மறு நாள் அப்பா, அம்மா இருவரையும் அழ வைக்க வேண்டும் என்று எண்ணி எல்லா வேலையையும் செய்திருக்கிறான் எனக் கூறினார். "ஸாரி. எங்களை  மன்னித்து விடுங்கள்" என்று கூறிச் சென்று விட்டார். இதைக் கேட்ட சுமதிக்கு தலை சுற்றியது.நாம் சின்னப்  பையன் என நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.அவன் புத்தி இப்படி இருக்கிறதே என்று வருத்தமாக இருந்தது. தலைமை ஆசிரியையிடம் "நான் வகுப்பிற்குப் போய் அவனை அனுப்புகிறேன் .நன்றாகத் திட்டி அனுப்புங்கள், அம்மா"என்றாள் சுமதி. பள்ளியில் ஆயிரக் கணக்கான மாணவர்களைப் பார்த்த,  அனுபவத்தில்  முதிர்ந்த, பெரியவர்  சிரித்துக்கொண்டே, "அதெல்லாம்  ஒன்றும் வேண்டாம். நீங்களும் ஒன்றும் கேட்காதீர்கள். இது இரண்டும் கெட்டான் வயது.பாம்பென்று அடிக்கவும் முடியாது.பழுதென்று  ஒதுக்கவும் முடியாது.அறியாப் பருவம்.எனவே பெரிது படுத்த வேண்டாம்." என்று கூறினார்.சரி என்று கூறி வகுப்பிற்குச் சென்றாள். ஒன்றுமே நடக்காதது போல பாபு அமர்ந்திருந்தான்.
              ஐந்து,ஆறு ஆண்டுகள் கடந்தன.பெரியவர்  இறைவனடி சேர்ந்து விட்டார். ஒருநாள் காலையில் இளைஞன் ஒருவன் வகுப்பில் வந்து நின்றான். "வணக்கம்.நன்றாக இருக்கிறீர்களா? டீச்சர்". என்றான்.  சீதா யாரிவன்  என யோசித்த போது அவன்" நான்  பாபு" என்றான்.அடடா!பாபுவா இது?"எப்படி இருக்கிறாய்?என்ன படித்துக் கொண்டிருக்கிறாய்?"என்றாள். "நன்றாக இருக்கிறேன். பாலிடெக்னிக்கில்  எலக்ட்ரானிக்ஸ்  படித்துக் கொண்டு இருக்கிறேன். அடுத்த ஆண்டு B.E ல் சேரப் போகிறேன்."என்றான். "நான் உங்களை  மிகவும் கஷ்டபடுத்தி  இருக்கிறேன்.இப்பொழுது உங்களைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது.அதனால் வந்தேன். நான் மாறி விட்டேன். என் பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்கிறேன்.நேரமாகி விட்டது.கிளம்புகிறேன்."எனக் கூறி நகர்ந்தான்."ஒரு நிமிடம் . ஹெச்.எம்
உன்னைப் பார்த்தால் சந்தோஷப்படுவார்கள் "என அழைத்துச் சென்றாள்.அவர்களும்  மகிழ்ச்சி அடைந்தார்கள். பெரியவர் கூறிய வாசகம் நினைவு வந்தது."அறியாப்பருவம்.பெரிது படுத்தாதீர்கள்." மறைந்த பெரியவரின் உருவப் படத்தைப் பார்த்தாள். நான் சொன்னது சரிதானே என சிரித்த முகத்துடன் சீதாவைப் பார்ப்பது  போல் தோன்றியது.










No comments:

Post a Comment