Tuesday, December 17, 2019

நானும்,எஸ்கலேட்டரும்

 
ஒரு புதிய ஜவுளிக் கடை மதுரையில் பல அடுக்கு மாடிகளுடன் உதயமானது. எந்த செய்தித்தாளைப் பார்த்தாலும் விளம்பரம்  பெரியதாய் முதல் பக்கத்திலேயே இருந்தது.
             ஒரு நாள் காலை வகுப்புக்குள் நுழைந்தேன்.வணக்கம் டீச்சர் என மாணவர்கள் கூற வணக்கம் எனச் சொல்லி விட்டு முகங்களைப் பார்த்தேன்.அழுத முகமும்,சிந்திய
கண்ணீருமாக பிரேயர் முடிந்த பின்
வரும் மாணவன் சீக்கிரமாக சிரித்த 
முகத்தோடு வந்திருந்தான். "என்னடா இது?இன்று மாலை மழை கொட்டப் போகிறது."என்றதும் "உண்மை தான் டீச்சர்" என்றான் ஒரு மாணவன். எல்லோரும் சிரித்தனர்.
அந்த  மாணவன் "டீச்சர்"என்று அருகில் வந்தான்."ஒரு நிமிடம் இரு.நான் கையெழுத்து போட்டு விட்டு வருகிறேன்" என்றேன்."சரிங்க டீச்சர்"என்றவன் "அந்தப் பேனாவை என்னிடம்  கொடுங்கள்.நான் கொண்டு வந்து தருகிறேன்." என்றான்."ஒன்றும் வேண்டாம். இடத்திலே போய் உட்கார்" என்று கூறிச் சென்றேன். திரும்பி வரும்போது மேசையின் அருகில் 2,3 பேரோடு நின்று கொண்டு இருந்தான்.  "டீச்சர், இப்பொழுது பேசலாமா?" என்றான். "சரி"என்றதும் பேச ஆரம்பித்தான்.
                        "நேற்று  நாங்கள் புதுக்கடைக்குப் போய் டிரஸ் எடுத்தோம்."என்றதும் நான் "ஏன்டா? ரஃப்  நோட்டு வாங்க காசில்லை என்றாயே. இப்போது எங்கிருந்து வந்தது?"என்றேன்.அவன் முகம் சுருங்கியது."சரி.மேலே சொல்"என்றேன்."அந்தக் கடையில் நிறைய மாடி இருக்கிறது.ஒரு இடத்தில் கரண்ட் படிக்கட்டு.நாம் ஏறி
நின்றால் போதும்.அது கொண்டு போய் விட்டு விடும்".என்றான்."டேய்!அதன் பெயர்  எஸ்கலேட்டர்." என்றான் இன்னோர் மாணவன். அவன் ,"டீச்சர், நீங்கள் அதில் போயிருக்கிறீர்களா?" என்றான். நான்,"அதைப் பார்த்ததே இல்லை." என்றேன்."நான் இரண்டு,மூன்று தடவை ஏறி,இறங்கினேன்."என்றான் அங்கு சென்று வந்த மாணவன். மதிய இடைவேளையில் சக மாணவர்களிடம் கதையளந்து கொண்டிருந்தான்.
                            ஓரிரு நாட்கள் சென்றது.கல்லூரியில் இருந்து வந்த 
மகள்,"அம்மா,அந்தப் புதிய ஜவுளிக் கடைக்கு போகலாமா? காலேஜ் முழுவதும் அதைப் பற்றித்தான் பேச்சு.விலையும் குறைவாகத் தான் உள்ளதாம்".என்றாள்."சரி,போகலாம்."என்றேன். ஒரு நாள் மாலையில் அங்கு சென்றோம்.மாடிகளுக்கும் சென்றோம்.ஒரு தளத்தில் ஏற, இறங்க எஸ்கலேட்டர் மட்டுமே இருந்தது.ஏற பயமாக இருந்தது. மாட்டேன் என்று மறுத்து விட்டேன். பிறகு அங்கு போகவேயில்லை. 
                    நாட்கள் ஓடின.மதுரை ரயில் நிலையத்திலும் எஸ்கலேட்டர்
வந்து விட்டது.படிகளும் இருக்கிறது. கையில் கனத்த பைகளுடன் சென்ற போது கணவர் எஸ்கலேட்டரில் ஏற நான் படிக்கட்டில் ஏறிச் சென்றேன். தஸ்புஸ் என்று மூச்சு வாங்க மேலே வந்து நின்றேன்.என் கூட வந்திருக்கலாமே என்று கணவர்  கூற படிக்கட்டுகளில் ஏறுவது நல்ல உடற்பயிற்சி என்று சமாளித்தேன். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதைதான்.
சென்னையில் ஷாப்பிங் செல்லும் போதும் எஸ்கலேட்டரில் ஏறவே இல்லை.
                     அடுத்த சோதனை வந்தது. பள்ளியில் இருந்து ஆசிரிய, ஆசிரியைகள் மும்பைக்கு சுற்றுலா சென்றோம்.விமானத்தில் அங்கு இறங்கி தரைத் தளத்திற்கு செல்ல எஸ்கலேட்டர் மட்டுமே இருந்தது. படிக்கட்டைத் தேடினேன். கண்டு பிடிக்க முடியவில்லை. இருந்தால் தானே கண்டு பிடிக்கலாம்.இள வயதுத் தோழிகள்  "இரண்டு கைகளையும்  பிடித்து உங்களை பத்திரமாகக் கூட்டிக் கொண்டு போகிறோம்""வாங்க,வாங்க."என்று 
அழைக்க," இல்லை.நான் வரவில்லை."என்றேன். ஆபாத்பாந்தவா, அனாதரக்ஷ்கா என மனதிற்குள் புலம்பினேன்.அப்போது ஒரு குரல் வந்தது.எங்கள் குழுவில் பெரியவரான கரஸ்பான்டன்ட் அம்மா "லிஃப்ட் இருக்கிறதா? பாருங்கள்." என்றார்கள்.வேகமாக அவர்கள் அருகே சென்று "நான் அம்மாவிற்குத் துணைக்குப் போகிறேன்".என்று கையைப் பிடித்துக் கொண்டேன். பின்னர் சென்ற இடமெல்லாம் அவர்களுடன் ஒட்டிக் கொண்டேன். யாருக்கு யார் துணை?உங்களுக்கே புரியும். வெற்றிகரமாக எஸ்கலேட்டரைத் தவிர்த்து மும்பை சென்று திரும்பி விட்டேன்.
                        ஆண்டுகள் சில கடந்தன.
வெளிநாட்டுப் பயணம் செய்ய மனம் ஆசைப்பட்டது.பாஸ்போர்ட்,விசா எல்லாம் ரெடி. ஃபிளைட் டிக்கெட்டும்
எடுத்தாயிற்று.மகன், "அம்மா! இன்டர்
நேஷனல் ஏர்போர்ட் எல்லாவற்றிலும்
எஸ்கலேட்டர் தான் இருக்கும்.லிஃப்ட்
எங்கோ ஓர் ஓரத்தில் இருக்கும். அதைத் தேட முடியாது. எஸ்கலேட்டரில்   ஏறிப் பழகுங்கள்". என்று கூறினான்.இதென்ன வம்பாய் போயிற்று என எண்ணினேன்.
                   ட்ரையினிங் ஆரம்பித்தது. மகள் குடும்பம், மகன் குடும்பம் என
யார் ஷாப்பிங் போனாலும் என்னைக் கூட்டிக் கொண்டு போனார்கள். ஆளுக்கொரு அறிவுரை.மஞ்சள் கோட்டில் கால் வைக்காதே.வலது கையால் கைப்பிடியைப் பிடித்துக் கொள்.முதலில் ஒரு காலை வை. ஆனாலும் பயம் போகவில்லை. கடைசியில் வலுக்கட்டாயமாக ஏற்றி 
விட்டார்கள்.பயந்து பயந்து ஏற ஆரம்பித்தேன்.ஒரு நாள் மருமகள் என்னிடம்,"அத்தை, இன்று நாம் இருவர் மட்டும் ஷாப்பிங் போகிறோம்.கிளம்புங்கள்."என்றாள்.பின் தொடர்ந்தேன்.பயணத்திற்குத்
தேவையான சில பொருள்களை வாங்க வேண்டியிருந்தது.முதலில் ஓரிரு தளங்களுக்குச் செல்ல எஸ்கலேட்டரில் கையைப்  பிடித்துக் கொண்டாள்.பிறகு குழந்தைக்கு சாக்லெட் கொடுத்து ஏமாற்றுவதைப்
போல ஃபாரின் போக வேண்டும் என்று சொல்லிச் சொல்லி ஏற வைத்து விட்டாள். பின்பு அவளது கையைப் பிடிக்காமல் ஏறத்  தயார் ஆனேன்.மஞ்சள் கோடு போகட்டும் எனக் காத்திருந்து பின் காலை வைக்கும் நேரத்தில் அடுத்த
மஞ்சள் கோடு வந்து பயமுறுத்தியது. ஒரு வழியாக ஏறி விட்டேன்.2,3 முறை
ஏறி, இறங்கி விட்டேன். ஏதோ நிலாவில் கால் வைத்ததைப் போல சந்தோஷமாய்  இருந்தது. வீட்டுக்கு  
வந்ததும் முரசு அறையாத குறையாக
எல்லோருக்கும் தெரிவித்து விட்டேன்.
நேரிலும், ஃபோனிலும் ஒரே செய்திதான்.
"நான் எஸ்கலேட்டரில் ஏறி விட்டேன்."

No comments:

Post a Comment