Thursday, December 19, 2019

ஒட்டுதல்

சிம்மக்கல் பேருந்து நிலையத்தில் காத்திருந்த சுமதி தான் ஏறவேண்டிய
பேருந்தைப் பார்த்து மலைத்துப் போனாள். அப்படி ஒரு கூட்டம். படிக்கட்டில் கால் வைக்கக் கூட இடமில்லை. அடுத்த பஸ் வர அரை மணி நேரம் ஆகும்.இடித்துப் பிடித்துஏறி உள்ளே சென்றாள் அமர்ந்திருந்த ஒரு பெண், "நான் அடுத்த ஸ்டாப்பில் இறங்க வேண்டும். நீ உட்காரம்மா." என்று கூறினாள்."தேங்க்யூ"என்றபடி அமர்ந்தாள் சுமதி.
                    அடுத்து சேதுபதி ஸ்கூல் ஸ்டாப்பில் ஒரு இளம்பெண் தன் குழந்தையுடன் ஏறினாள்.சுமதியின் அருகில் வந்து நின்றதும் சுமதி நிமிர்ந்து பார்த்தாள்."குட்டிப் பாப்பாவை என்னிடம் தருகிறாயா?" எனக் கேட்டாள்." அவள் வந்தால் வைத்துக் கொள்ளுங்கள்" என்றாள் தாய். "குழந்தை  அவளிடம்  வராவிட்டால்  எழுந்து இடம் கொடுக்கலாம் என நினைத்துக் கொண்டாள்."பாப்பா,அத்தையிடம்  வா!" என்றதும் குழந்தை அவளிடம் தாவியது.முகத்தைப் பார்த்துச் சிரித்தது.சுமதி பேசப்பேச அந்தக் குட்டிப்  பெண் கவனித்து பதில் சொல்வது போல் குறுகுறு எனப் பார்த்தது.கை, கால்களை ஆட்டி சந்தோஷமாக விளையாடியது. "பாப்பா!என்னை உனக்குத் தெரியுமா? இப்படி சிரிக்கிறாயே." என்றாள் சுமதி." யாரிடமும் போக மாட்டாள்.உங்களிடம் வந்து விட்டாள்." என்றாள் தாய். "குழந்தையின் பெயர் என்ன?"எனக் கேட்டதும்  "கோமதி'"என்றாள் அதனுடைய தாய்.
                   "ஓ!அப்படியா? இந்தப் பெயரைக் கேட்டதும் எனக்கு ஒரு அத்தையின்  நினைவு வருகிறது நான் இவளைப் போல் இருந்த போது  என்னைத் தூக்கிக்  கொண்டு போய்  விடுவார்களாம். அவர்களுக்கு ஒரு மகன் இருந்தான்.என்னை விட ஒரு வயது பெரியவன்.பெண் குழந்தை 
என்றால் அவ்வளவு பிரியம்.5,6 வருடம் கழித்து இரண்டாவதாகவும்
பையன் தான் பிறந்தான். எனவே அவர்களுக்கு செல்லப் பெண்  நான் தான்".என்றாள் சுமதி." நீங்கள் மணிநகரம்,25 வீடுகள் இருந்த
காம்பௌண்டில்  குடியிருந்தீர்களா?" என அப்பெண் கேட்டாள்." ஆமாம்" என்றவுடன் " உங்கள் கோமதி அத்தையின் பேத்திதான் இது". என்றாள் குழந்தையின் தாய். "இவளுடைய  அப்பா பின்னால் நின்றுகொண்டு இருக்கிறார். அவரைப் பார்த்தால் கண்டு பிடித்திருப்பீர்கள்."என்றும் சொன்னாள். " நான் உன்னை உன் கல்யாணத்தில் தான் பார்த்தேன். அதற்குப் பின் பார்க்கவில்லை." என்று சுமதி கூறினாள்.அதற்குள் அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது. "அத்தையைக் கேட்டதாகச்  சொல்" என்றாள் சுமதி.
           கோமதி அத்தை தூரத்து உறவினர் . ஆனால் ஒரே  இடத்தில் வசித்ததால் நெருங்கிய அத்தை ஆகி விட்டார்.காலப் போக்கில் வேறுவேறு  பகுதிகளில் குடியேறி விட்டோம். அவர் குரல்  இன்னும் மனதில் நிற்கிறது." ஏட்டி! எப்பிடி இருக்கே? மாப்பிள்ளை நல்லா இருக்காகளா? கல்யாணம் ஆனதும் என்னைய மறந்துட்டியே. அப்பப்ப வந்து பாத்துட்டு போ." என்பார். உண்மைதான்.திருமணம்,  குழந்தை,, வேலை என்று வந்ததும் சில உறவுகளைப் பார்க்க முடியாமல் போகிறது.ஆனாலும் மறக்க முடியாது.குழந்தையும்,தானும் ஒட்டிக் கொண்டது இந்த உறவால் தான் என்று சுமதிக்குத் தோன்றியது. கண்டிப்பாக  ஓர் நாள் அவர்களைப்  பார்த்து விட்டு வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

No comments:

Post a Comment